Tuesday, May 3, 2011

கருக்கலைப்பு

நான் என்ன தவறு செய்தேன்?

மரணித்துக் கொண்டிருக்கும்
என் இறுதி நேர
மரண சாசணம் இது...

நான் நீதி கேட்கவில்லை
காரணத்தைக் கேட்கிறேன்....
நான் என்ன தவறு செய்தேன்?

மூன்று திங்களுக்கு முன்பு
இலட்சம் கோடி எதிரிகளை வென்று
வெற்றிக்கனியை ருசித்தவன் நான்...

வெற்றிப்பெருமிதத்தில்
நாளுக்கு நாள்
சதை போட்டு விட்டேன்...

மூன்று நாட்களுக்கு முன்புதான்...
எனது இருப்பை உணர வைக்க
நான் வாழ்ந்த இடத்தில்
புரட்சி செய்தேன்...

புரட்சி... ஆம்.!
நான் வாழ்ந்த இடத்தின்
உரிமையாளருக்குக் குடலைப் புரட்டும்
புரட்சி.!

அன்றிலிருந்து
ஊட்டமில்லை - எனக்கு
வாழத் தெம்புமில்லை...

சக்தியற்று கிடந்த என்மேல்
இன்று
திராவக வீச்சு...

இத்திராவகத்தின் எரிச்சல்
தாங்க முடியவில்லை...
இதோ.! இறந்து கொண்டிருக்கிறேன்...

மீண்டும் கேட்கிறேன்...
காரணத்தைச் சிந்தியுங்கள்...
என் மரணத்திற்குப் பின்னாவது...
நான் என்ன தவறு செய்தேன்?

Monday, April 25, 2011

பாலாஜி பாமாலை

அன்பைச் செலுத்தி அபயம் புகுந்திட

நண்பனாய்க் காப்பான் ஹரி.

ஹரியை நினைக்க எதிர்வரும் துன்பம்

பரியாய் பறக்கும் அறி.

அறியா(து) அவன்பெயர் சொன்னாலும் தேடிகுறை

தீர்த்துநிற்பான் எங்கள் ஹரி.

ஹரியெனும் நாமம் நினைத்திட தீரும்

பிறவிப் பெருநோய் பசி.

பசிக்கும் வயிறுக்(கு) உணவாய் அமையும்

இனித்திடும் வேங்கடவன் அன்பு.



(இது சும்மா ஒரு முயற்சி தான்...

நெஞ்செல்லாம் நிற்கும் திருமால் புகழ்பாட
இப்பிறவி போதா(து) எனக்கு.)

கிறுக்கல் இரண்டு

பெயரைக் கண்டு
புரட்டாத பொக்கிஷங்கள்...
சில மனிதர்கள்.!
சில புத்தகங்களைப் போல்.
..


புத்தகத்தின்
வரிகளுக்கிடையான
எதிர்பார்ப்பிற்கும்
நிஜத்திற்குமான தூரம்தான்...
மனிதனுக்கும்.!
பல சமயங்களில்...

Friday, April 22, 2011

ஏக்கம்

நீ வருவாய் என எதிர்பார்த்தேன் - என்
நினைவுகளில் நான் உனைப் பார்த்தேன்
உன் நினைவாய் உனது மடல் பார்த்தே
என்னுயிரில் உனது மணம் சேர்த்தேன்

மடலும் உடலும் நலிந்ததடா - என்
மனமோ உனையேத் தேடுதடா
எழுத்தில் சொன்னது கொஞ்சமடா
ஏங்கித் தவிக்குது நெஞ்சமடா

கவிதை என்னும் கவன்வில்லால் - என்
மனதை அன்பால் உடைத்தாயே
மறந்தாயோ நீ அப்பொழுதை - நான்
மறைந்திடும்முன் நீ வருவாயே...

(கரு: ஷைலஜா அக்காவின் கவிதை ஒன்று)

Tuesday, April 19, 2011

கிறுக்கல்

பின்னொரு நாளில்
அதிசயமாய் அதிகாலை எழும்பி
அவசரமாய் பல் துளக்கி
பலமுறை கண்ணாடியில் முகம் பார்த்து
என்றுமே இல்லாமல்
வெளியில் செல்வதைச் சொல்லிச் செல்லலாம்
என்னிடம் என் மகன்...
புரிந்தும் புரியாதவனாய்
சிரித்தபடி வழியனுப்பலாம் நானும்...
எனது இளமையை நினைத்து...!