Friday, June 10, 2011

குழ்ந்தைப் பாடல் - 1

ஜவ்வு மிட்டாய் மாமா
கூவும் ஓசை கேட்டது
கூவும் ஓசை கேட்டதும்
ஓடிச் சென்று தேடினேன்...

கையில் கட்டும் வாட்சுபோல்
காதில் போடும் தோடுபோல்
கழுத்து மணி மாலைபோல்
பத்து மிட்டாய் வாங்கினேன்...

எனக்கு பிடித்த உருவத்தில்
இனிக்கும் ஜவ்வை வாங்கியே
எச்சில் ஒழுக பார்த்துநான்
வீட்டை நாடி ஓடினேன்...

வீட்டில் வந்து சேர்ந்ததும்
சுவைத்துப் பார்க்கும் வேளையில்
சின்னத் தம்பி வந்துஎன்
மொத்த ஜவ்வைப் பிடுங்கினான்...

ஆசை வைத்த ஜவ்வது
இல்லை என்று ஆனதும்
அம்மா பேரைச் சொல்லியே
வீடு அதிர தேம்பினேன்...

ஓடி வந்த அம்மாவோ
ஏன்டி இந்த அழுகையோ
என்று விஷயம் கேட்டுபின்
பகிர்ந்து இனிப்பைத் தந்திட்டாள்...

தம்பி பாதி தின்கிறான்
நானும் பாதி தின்கிறேன்
பிணக்கு தீர்ந்து நாங்களும்
இனிக்கும் ஜவ்வாய் ஆகினோம்...

நன்றி : இக்கவிதைக்குக் கரு கொடுத்த புதுகை அப்துல்லா அவர்களுக்கும், அக்கருவை என் கண்ணில் காட்டிய VIDHOOSH அவர்களுக்கும்...

Thursday, June 9, 2011

மரணம்

தோல்வியின் வலியிலும்
சிரித்தவாறே நிற்கும் நான்
கர்வத்தோடே திரிந்தேன்...
என் நிழலையும் உன்னால்
தொட இயலாதென்று...
அழுகையின் முன்னே.!

எதிரில் வந்து ஏளனப்பட்டவள்
வஞ்சனையால் வென்றாள்...

உலகமே உறங்கும் பொழுதில்
மரணதேவனின் கைகோர்த்து
என்னுயிராய் வளர்த்த பசுவைப் பிரித்தாள்...

ஆம்...
நானில்லா பொழுதில்
வாயில்லா ஜீவன்மேல்
வன்மமாய் புதுவலியைத் தந்தாள்...

வலி தாளா என்னுயிர்
கட்டிய மூக்குக்கயிறை அறுத்து
நா வறள கத்தி
நாதியற்று மடிந்திருந்தது...

பிரிவல்ல அது...
என்னுயிர் பசுவின்
மரண ஓலம்.!

மடிந்திருந்த கோலமும் - மண்ணில்
பதித்திருந்த மரண வலியும்
அழித்தது என் கர்வத்தை...

அழுகிறேன்
அடக்க முனைந்து விசும்புகிறேன்
விசும்பல் மீண்டும் வெடித்து அழுகிறேன்...

எதிரில் என்னை நோக்கி
எக்காளமிட்டவாறு வந்துகொண்டிருந்தார்கள்
இணைபிரியா தோழிகளாக...
மரணமும் அழுகையும்.!

Monday, June 6, 2011

பறப்பதெல்லாம் பறவையாமோ...

காற்றைக் கிழிக்கும் பறவையை விஞ்சிநான்

காற்றால் பறந்தே உயரமாய்ச் செல்ல

பறவையினும் மேலென்ற எண்ணம் வளர

மறந்தேன் எனைநான் களிப்பில் திளைத்து

அடங்கிய காற்றால்;என் ஆட்டம் அடங்கிட

உண்மை உணர்ந்தேன்; பறவையாய் ஆகிலேன்

வின்னைத் தொடினுமே நான்.

Monday, May 30, 2011

உடல்தானம்

சில நொடிகள் முன்வரை
இருந்தவர்
இப்போது இல்லை...
எங்கே போனார்???
தெரியவில்லை...
எப்படி போனார்???
தெரியவில்லை...

எனது தேவைக்காய்
என்னை வருத்தி
எனது எஜமானனாய் வாழ்ந்திருந்தவர்...
வேலையாளை மாற்றி விட்டாரோ!!!

எரிக்கவா புதைக்கவா???
சூடாய் விவாதிக்கிறார்கள்
இரண்டும் வேண்டாம் தானமாகக் கொடு...
எஜமானன் இல்லை.!
எனைச் சொல்ல வைக்க...

இதோ எரிக்கப் போகிறார்கள்
என்னோடு சேர்த்து
எனது ஆசையையும்...

ஒருவரிடமாவது சொல்லி இருந்திருக்கலாம்...
நான் ஆசைப்பட்டு எழுதி வைத்த
உடல்தான உயிலை...
எஜமானன் இருந்த போதே.!

திகம்பரன் கதை - வெண்பா வடிவில்

தவஞ்செய் முனிகள் சிவனை மறக்க
அவருள் செருக்கு மரமாய் வளர
பிறந்த உடலொடு நின்றான் - பொருளை
இரந்து பெறவே எழில்மிகு ஈசன்;
சிவனின் அழகில் முனிபத் தினிகள்
மயங்கி அவன்பின் தொடர; சினந்த
முனிகள் அபிசார யாகம் நடத்தி;
புலியை அனுப்ப அதனை அழித்து
உடையாய் அணிந்தான் உடுக்கை விரும்பி;
சினமது தணியா முனிகள் தொடர்ந்து
அனுப்பினர் மானையும் பாம்பையும் தாக்க;
அதனையும் ஈசன் அணிகலன் ஆக்க
அனுப்பினர் பூத கணங்களைத் தாக்க;
கணங்களை ஈசன் படையினில் சேர்க்க
சளைக்கா முனிகள் களிறினை ஏவ;
களிறை அழித்ததன் தோலை பரமனும்
போர்வையாய் ஆக்கி குறுநகை வீச;
அகத்தில் முனிகள் சிவனை நினைத்து
தொழுதிட அவரின் செருக்கை அழித்து
திகம்பரன் ஆனான் அறி.