Sunday, March 4, 2012

கம்பன் வீட்டு கட்டுத்தறியும்

தமிழ்க்கவியுலகில் கம்பருக்கென்று தனி இடம் ஒன்று எப்பொழுதும் உண்டு. கம்பனின் கவிநயத்தைக் கண்டு பொறாமைப்படாமல் இருக்க யாராலும் முடியாது. அவன் தொட்டுச் சென்ற ஒவ்வொரு விஷயமும் அவன் சொல்வழியே நம் கண் முன்னால் நிற்கும். அவன் எழுதிய கவிதைகள் ஆயிரம் கதைகள் சொல்லும்.


கவிஞர்களுக்கு எப்பொழுதுமே சற்று கர்வம் அதிகம். அது கல்விச்செல்வத்தால் வரும் பெருமிதம் கலந்த கர்வம். கவிஞர்களின் இந்த கர்வம் எவரையும் எந்த கோணத்திலும் பாட வைக்கும் சக்தியை அவர்களுக்குக் கொடுக்கும். கம்பனும் இப்படி கர்வத்தோடு தான் எழுதும் ராமாவதாரத்திற்கு பந்தம் பிடிக்க ஒருவரை ஆணையிட்டான்... யாரைத் தெரியுமா... காளியை...


ஆம்... ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு வாழும் காளி தேவியை பந்தம் பிடிக்கச் சொல்லி கட்டளையிட்டானாம் கம்பன். அதுவும் எப்படி,


"ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே

வொற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை-பற்றியே

நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்

பிந்தாமற் பந்தம் பிடி"


என ஆணையிட்டானாம்.


அதாவது, ஒற்றியூரை காத்து நிற்பதற்காக இங்கு தங்கியிருக்கும் காளியே, ஒற்றியூரை காத்த அரசனாம் ராமனின் உண்மை சரிதத்தை பற்றி நான் சொல்வதை தன் மாணாக்கர்கள் தொடர்ந்து தங்கு தடையின்றி பிழையேதுமின்றி எழுதி முடிக்க அனைவருக்கும் ஒளி சீராகத் தெரியும் வகையில் பந்தம் பிடிப்பாயாக என்று கம்பர் கட்டளை இட்டாராம்...


கம்பரின் கட்டளையை ஏற்று காளி பந்தம் பிடிக்க ராமாவதாரம் எழுதி முடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்...


இப்படிப்பட்ட கம்பரின் புகழைச் சொல்ல நாம், "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்னு" சொல்வது சரிதானுங்களே...


இரத்த புளியம்பழம்

வீட்டுக்கு வந்தால் எப்பொழுதும் தோப்புக்கு ஒரு முறை சென்று வருவது போல இன்றும் மின்சாரம் இல்லாத நடுப்பகலில் தோப்புக்குச் சென்றேன். தோப்பைச் சுற்றிக் கொண்டு வரும் பொழுது கண்ணில் பட்டது புளியம்பழம். எக்கி எக்கி குதித்து ஒரு வழியாக ஒரு பழத்தை பிடுங்கி வாயில் வைத்தேன்...

புளியம்பழத்தின் புளிப்பு என்னை எனது பள்ளிக் காலத்திற்கு அழைத்துச் சென்றது. வருடத்தில் ஒவ்வொரு சீசனில் ஒரு விளையாட்டு என மாறும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மே வரையில் எப்பொழுதும் விளையாட்டாக எங்களுக்கு அமைவது கில்லி தாண்டலும், ஒத்தையா இரட்டையாவும் தான்...

ஒத்தையா இரட்டையாவில் பெரும்பாலும் கையில் பிடிக்கும் பொருள் புளியங்கொட்டை தான். வீட்டில் முறத்துக்கு புளியங்கூழைத் தடவி முறத்தை தடிமனாக்க வைத்திருக்கும் புளியங்கொட்டையில் சிறிது எடுத்துக் கொண்டுச் சென்று விளையாடுவது வழக்கம். அது போக பள்ளியின் பின்புறம் இருக்கும் சந்தையில் ஆங்காங்கே வளர்ந்திருக்கும் புளியம்ரம் தான் எங்கள் ஒத்தையா ரெட்டையா விளையாட்டுக்கு ஜீவன்.

ஒரு முறை இப்படி சந்தையின் பின் புறம் இருக்கும் புளியமரத்தில் இருந்து புளியங்கொட்டை எடுக்க அம்மரத்தில் இருந்த புளியம் பழத்தை பிடுங்கிச் சாப்பிட்டோம். எப்பொழுதும் புளிப்பாக புளியம்பழம் சாப்பிட்டுப் பழகிப் போன எனக்கு அந்த புளியம்பழத்தின் இனிப்புச் சுவை மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

நண்பர்களிடம் விசாரிக்க அதை இரத்த புளியம்பழம் என்றார்கள். அதைச் சாப்பிட வாயெல்லாம் சிவப்பு நிறமாக மாறியது போலவும் ஒரு தோற்றம். (புளி சாப்பிட்டா நாக்கு பொங்குவதால் ஏற்பட்ட அச்சரச் சிவப்பு அல்ல அது). அன்று முழுவதும் இரத்த புளியம்பழம் பற்றித்தான் பேச்சு வகுப்பு முழுவதும்.

ஏன் அதுக்கு இரத்தப் புளியம்பழம்னு பேரு வந்தது தெரியுமாடா? வருஷா வருஷம் அந்த மரத்துக்குச் சேவல் இல்லை ஆடு வெட்டி அதோட இரத்தத்தை மரத்துக்கு ஊத்தி பூஜை செய்வாங்கடா... அதான் அது இரத்தச் சிவப்பா இருக்கு இனிப்பாவும் இருக்கு... இப்படி பல கதைகள் அன்று முழுவதும் வகுப்பில்... உண்மை எதுவென இன்று வரை தெரியவேயில்லை...

இதையெல்லாம் நினைத்துக் கொண்டே தோப்பைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க தென்னம் புருடை காலை வழுக்கி கால் பிரள... சர்ரக்.... என்ன பார்க்குறீங்க... சர்க்கார் முள் காலைக் குத்திடுச்சு... நான் காலில் இருக்குற முள்ளை எடுத்துப் போட்டுட்டு நெருப்பால சுடணும்... என்னோட புளியம் பழம் கதை கேட்டாச்சுல்ல... உங்களுக்கு இந்த இரத்த புளியம்பழம் பத்தி ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க உண்மையான சமாச்சாரமா இருந்தாலும் சரி, இல்லை கதையா இருந்தாலும் சரி...

குறும்பாக்கள்

தாகம்:

தாகத்தில் வறளும் நாக்கு

தூரத்தில் மின்னும் தண்ணீர்

எதிர்திசையில் பறக்கும் பறவை

பின் தொடர்ந்து செல்லும் வேடன்


மரணம்:

விதி மீறல்

கையூட்டாய்ப் பணம்

பறக்கும் வாகணம்

எதிரில் இயமன்.


மோகம்:

உடையில் மாற்றம்

சினிமா விளம்பரம்

எதிரினக் கவர்ச்சி

உயிர்த்தெழும் உடற்பசி.


கையூட்டு:

விரைவு சேவை

எதிலும் முதல் இடம்

சரியாய் தவறு செய்தல்

ஒழுகவிடும் ஓட்டை சட்டம்.

சராசரி மனிதன்

இன்று மாலை இருசக்கர வாகணத்தில் அப்பாவோடு பயணம் செய்து கொண்டிருந்தேன்...தேசிய நெடுஞ்சாலை ஏழு கிருஷ்னகிரியில் சேலம் சாலையும், சென்னை சாலையும் சந்திக்கும் இடம்.

கடமை தவறாத அதிகாரிகள் வண்டியை ஓரம் கட்டச் சொன்னார்கள். எனக்கு முன்பு ஒருவனையும் ஓரம் கட்டச் சொல்லி இருந்தார்கள்... எனகு பின்னால் வருபவர்களையும் ஒவ்வொருவராக ஓரம் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.

எனக்கு முன்னால் சென்றவன், எதற்காக ஐயா வண்டியை ஓரம் நிறுத்தச் சொல்கிறீர்கள் என்றான்...

அதிகாரி சிரித்துக் கொண்டே, ம்ம்ம்... பணத்துக்குத்தான், எடு பணத்தை என்கிறார்.

எதற்கு ஐயா பணம் என்றான்...

ம்ம்ம்... ஓட்டுனர் உரிமம் இருக்கா என்றார்.

இல்லை, வீட்டில இருக்கு... வீடு இங்க தான் என்று ஏதோ முகவரி சொல்லிக் கொண்டிருந்தான்...

நானும் அப்பாவும் இறங்கினோம்...

அப்பா, எதற்கு இவர்களிடம் வம்பு என்று பணத்தை எடுத்தார்... ஓட்டுனர் உரிமம் இல்லையா சார் என்றான் அப்பாவைப் பார்த்து...

அப்பாவிடம் லைசன்ஸ் இருந்தது. வண்டி ஓட்டிய என்னிடம் தான் லைசன்ஸ் இல்லை... இல்லை என்றால் சில மாதங்களுக்கு முன்பு பேருந்தில் ஒரு புண்ணியவான் எனது கைப்பையை அவரது அவசரத் தேவைக்காகவோ, அல்லது எனது அஜாக்கிரதையாலோ தவறிப் போனதில், எனது ஓட்டுனர் உரிமமும் தவறிப் போனது.

அப்பா, அவரது லைசன்ஸைக் காண்பிக்க முற்படுகையில் என்னுடைய லைசன்ஸைக் கேட்டார். நான் தொலைந்து விட்டது. இல்லை என்றேன்...

இருநூறு ரூபாய் கொடுங்கள் என்றார்.

சரி, என்று அப்பாவும் பணத்தைக் கொடுக்க, லைசன்ஸ் எடுங்க சார் என்று என்னைப் பார்த்துச் சொல்லியவாறு பணத்தை வாங்கி பையில் போட்டுக் கொண்டார்.

மாதம் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பங்கு இப்படி அநியாயமாகக் கொடுக்கப்பட்டு விட்டதே, என்று எனக்கு ஏகத்துக்கும் வருத்தம்...

அப்பாவிடம் மெதுவாகக் கேட்டேன்... அப்பா, உரிமம் இல்லாமல் ஓட்டினால் எவ்வளவு அபராதம் இருக்கும்... நாம் அபராதத் தொகை கட்டியிருக்கலாமே ரசீதுடன் என்றேன்.

அப்பா சிரித்துக் கொண்டே, உனக்கு என்ன நீ நாளைக்கு ஊருக்குப் போயிடுவ. யாரு இந்த அபராதத்தைக் கட்ட நீதிமன்றம் போறது... போடா போடா, மாசக் கடைசி ஆச்சே, சிட்டி லிமிட் தாண்டற வரைக்கும் நாம ஓட்டிக்கலாமான்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. உன்கிட்ட பேசிட்டே வந்ததுல மறந்து போயிட்டேன் என்றார்...

கம்முனு நான் நிறுத்தாம வந்திருக்கலாமோன்னு கேட்டேன்... சொல்லி வாயை மூடும் முன்னே சாலையோரமாக நின்ற்ய் கொண்டிருந்த சாலை ரோந்து வண்டி ஒன்றை நாங்கள் கடக்க நேரிட்டது...

உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன், அங்க அபராதம் கட்டாமல் ஏமாற்றி தப்பிப்பவர்களை மடக்கிப் பிடிக்க நின்று கொண்டிருப்பார்களோ என்று...

ஹ்ம்ம்... என்ன தான் நாமெல்லாம் வாய் கிழிய சட்டம் பேசினாலும், சட்டத்திற்கு முன்னால் எல்லாம் சராசரி மனிதர்கள் தானே...

பி.கு: மக்களே இது மாசக் கடைசி, அதனால ஓட்டுனர் உரிமம் கையில் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுங்க... இல்லாட்டி கையில் நூறு அல்லது இருநூறு ரூபாய் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுங்க...

Wednesday, February 1, 2012

ஆசு ...

என்னடா இது, இப்படி மொட்டையா ஆசு...ன்னு தலைப்பான்னு பார்க்குறீங்களா... இன்று மின்மடல் படித்துக் கொண்டிருக்கும் போது ஆசுகவி ஆசு உரை அப்படின்னு வார்த்தைகள் கண்ணுல பட்டுச்சு... இதைப் பார்த்த உடனே எனக்கு எனது பள்ளி கால நினைவலை ஒன்று என் மனதைத் தொட்டுச் சென்றது... அதை உங்களிடம் பகிர்ந்துக்கலாமேன்னு தான் இந்தக் கட்டுரை...

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது கணக்கு பாடம் முழுதும் அத்துப்படி... எப்போது என்ன கணக்கு கொடுத்தாலும் இவன் போட்டு விடுவான் என்கிற அளவிற்கு நல்ல பெயர் வகுப்பில்... எப்பொழுதும் நான் தான் கணக்கில் முதல் மதிப்பெண் வேறு வாங்குவேன்...

2001 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ம் தேதி, எனது பிறந்த நாள் அன்று சிறிய வகுப்பறைத் தேர்வு. தேர்வுப்பாடம் கணக்கு. அதற்கு முன்தினமே தேர்வைப் பற்றிய அறிவிப்பும் சொல்லி இருந்தார்கள். நமக்கு தான் கணக்குப் பாடம் அத்துப்படி ஆச்சே என்று சற்று தலைக்கனத்தோடு, ஒரே ஒரு முறை மட்டும் ஒப்புக்கு எனது புத்தகத்தை புரட்டிப் பார்த்து விட்டு, வகுப்பறை சென்றேன்... பிறந்த நாள் கொண்டாட்டம் வேறு... அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியோடு அன்றைய பொழுது தொடங்கியது...

வகுப்பறைத் தேர்விற்கான நேரம் வந்தது. அனைவரும் தேர்வு எழுத தயாராய் அமர்ந்திருந்தோம்... வினாத்தாள் கொடுக்கப்பட்டது... தேர்வு எழுத ஆரம்பிக்கிறேன்... வினாக்கள் பலமுறை நான் விடை எழுதிய வினாக்கள் தான். ஆனால், அன்று என்னால் ஒரு வினாவிற்கான விடையையும் எழுத முடியவில்லை... எந்த வினாவை ஆரம்பித்தாலும் விடை பாதியில் நிற்கிறது. அடுத்த படி எப்படி போக வேண்டும் என்பது மேகம் மறைத்த நிலவாய் மறைந்து(மறந்து) போனது...

எனது வெற்று விடைத்தாளை எடுத்துக்கொண்டு சென்று ஆசிரியரிடம் கொடுத்தேன்... ஆசிரியர் எனது விடைத்தாளையும் என்னையும் பார்த்து விட்டு, "நான் உனக்கு ஒன்றும் சொல்லப் போவதில்லை... இதற்கான காரணத்தை நீயே அறிந்து கொள்" என்று சொல்லி விட்டு எனது பேப்பரில் பெரிய பூஜ்ஜியம் ஒன்றை எனது மதிப்பெண்ணாக அளித்து என்னைத் திருப்பி அனுப்பி விட்டார்...

அன்று எனக்கு ஒரு விஷயம் புரிந்தது... என்ன தான், நாம் திறமை மிகுந்தவர்களாக இருந்தாலும், எந்த போட்டியில் இறங்கும் போதும் போட்டிக்கான மரியாதைக் கொடுத்து நம்மை தயார்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும் என்பதே அந்த பாடம்... இந்த விலை உயர்ந்த பாடத்தை கற்று கொடுத்தது எனது பிறந்த நாளில் எனக்கு கிடைத்த பூஜ்ஜியம் மதிப்பெண்...

ஆகவே நண்பர்களே, எந்த ஒரு நிலையிலும், உங்களுக்கு தெரிந்த விஷயமே ஆனாலும், நாம் எளிதாக இதனைச் செய்து விடலாம் என்கிற இறுமாப்போடு செல்லாமல், அதற்குண்டான மரியாதைக் கொடுத்து நம்மைத் தயார் செய்து கொண்டு செல்வதே நமக்கு நல்லது. தயார் செய்யாமலும் நீங்கள் அந்த செயலை செய்து முடிக்கலாம்... ஆனால் தயார் செய்து கொண்டு சென்றால் உங்களின் போட்டியில், உங்களை நீங்கள் அடுத்த படிக்கு எடுத்துச் செல்வீர்கள்...

"ஆசுகவி ஆம்இவன் ஆசுஉரை ஆம்இவன்
பேசும் வாயனைத்தும் ஏசும் புரிந்திடுநீ
ஆன்றோர் சபைதனில் சற்றே இடறிட
ஆதலால் நீதயாராய் போ. "