Sunday, December 25, 2011

இல்லாள் ஒரு பார்வை

இல்லாள், இல்லாள்னு சொல்றாங்களே... அப்படின்னா யாருங்க? ஒரு மனுஷனோட வாழ்வில் இந்த இல்லாளுக்கு அப்பிடி என்ன தான் முக்கியத்துவமுங்க. இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள் மட்டும்தானா... இந்த கேள்விக்கெல்லாம் விடை தேட மூதுரை பாடல்களை கொஞ்சம் பார்க்கலாமா...

இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்னு ஏற்கனவே நாம பார்த்திருந்தாலும், அந்த இல்லாள் பற்றிய முற்போக்குச் சிந்தனையை மூதுரையின் ஒரு பாடல் எளிமையாச் சொல்ல வருதுங்க. அது என்னன்னா, ஔவையார் அந்த காலத்திலேயே உறவில் திருமணம் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியிருக்காருன்றதுதான். அப்படி என்ன தான் பாடலில் சொல்லி இருக்காங்க அந்த அம்மானு பார்க்கையில, நாம் நமது வாழ்வை, உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள், சுற்றம் என்று சுருக்கி கொள்ளக் கூடாது. அது ஏன்னா, எப்படி வியாதிகள், நம்மோட உடலோட இந்த உறவுகளைப் போலச் சேர்ந்து பிறந்தாலும். அதுக்கு மருந்துகளா நம்முடன் பிறக்காத எங்கோ மலைகளில் இருக்கும் மூலிகைச் செடிகள் இருக்கிறதோ, அப்படி நமது வாழ்வில் உடன் பிறந்தவர்களாலும் சுற்றத்தாலும் ஏற்படக்கூடிய மனசஞ்சலமானது நமது உறவுக்கு அப்பாற்பட்டு வரும் உறவான மனைவியால் தீரும். மனைவி என்பவள் நமது மனநோயைத் தீர்க்கும் மருந்துன்னு சொல்லி இருக்காருங்க.

இப்ப இந்த கருத்தை வலியுறுத்தும் பாடலைப் பார்க்கலாமா...

"உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு."

இதுமட்டுமா,

இல்லாள் பற்றி வேறு ஒரு பாடலில் ஔவையார் குறிப்பிடும் போது சொல்றாங்க, இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றுமே இல்லையாம். இதை மேம்போக்காக படிச்சமுன்னா, இல்லத்தரசின்னு ஒருத்தி, ஒரு வீட்டில் இருந்தால், அந்த வீட்டில் அது இல்லை இது இல்லைன்னு சொல்லி வருத்தப்பட ஒன்னுமே இருக்காதுன்னு அர்த்தம் வந்தாலும் மறைமுகமாக இன்னொரு பொருளையும் சொல்றாருங்க ஔவையார். இல்லத்தரசியான மனைவி மட்டுமே ஒருத்தன் மனசுல இருந்துட்டா அவன் கிட்ட இல்லைன்னு சொல்ல முடியாத அளவு எல்லா செல்வமும் அவனை வந்து சேரும்ன்றதுதாங்க அது.

அத்தோட நிறுத்தினாரா ஔவையார், இல்லையே.... எப்படி ஒரு நாணயத்தோட இரண்டு பக்கத்துல ஒரு பக்கம் மட்டும் பார்த்து நாணயத்தை மதிப்பிட முடியாதோ, அப்படி இல்லாள் பற்றிய ஒரு கருத்தை மட்டும் வைச்சு நாம இல்லாள் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியாதில்லையா... அதுக்காக இல்லாளின் மறுபக்கத்தைப் பற்றியும் ஔவையார் சொல்லுறார். அப்படி என்ன தான் சொல்றாருன்னு பார்ப்போமா...

"இல்லாள்னு ஒருத்தி ஒரு வீட்டுல இல்லாம போனாலும் சரி, அல்லது இல்லாளாக அமைபவள் எவர்க்கும் அடங்காமல், அனைவரையும் எதிர்த்து கடுமையான சொற்களைப் பேசி பிறர் மனம் நோகும் வகையில் நடந்து கொள்பவளாக இருந்தாலும் சரி, அந்த வீடு புலி தங்கிப் போன புதர் போல சிதைஞ்சு போயிடுமாமுங்க... கருத்தைப் பார்த்துட்டு இந்த கருத்துச் சொன்ன பாடலைப் பார்க்காமப் போனா எப்படி... இதோ இக்கருத்தை வலியுறுத்தும் மூதுரை பாடல்...

"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலிகிடந்த தூறாய் விடும்."

இத்தோடு நிறுத்தினாரா இந்த அம்மா... ஒரு நல்ல இல்லாளின் பிரிவு தரும் வேதனையைப் பற்றிப் பாடும் போது சொல்றாங்க,

"தாயோடு அறுசுவை போம்
தந்தையோடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்
மாய வாழ்வு உற்றாருடன் போம்
உடன் பிறப்பால் தோள் வலி போம்
பொற்தாலியோடு எவையும் போம்"

இப்படிச் சொல்லி, ஒருத்தன் வாழ்க்கையில ஒவ்வொரு உறவின் பிரிவும், எதையாச்சும் ஒன்னைத்தான் எடுத்துக்கிட்டு போகும், ஆனா இல்லாள் ஒருத்தியோட பிரிவு ஒரு மனுஷனோட வாழ்க்கையில், எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிடும்ன்றார்.

இதையே தான் கண்ணதாசனும் உன் கண்ணில் நீர் வழிந்தால் அப்படின்ற பாட்டுல, இல்லாளின் பெருமையைச் சொல்லும் போது,

"உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி" அப்படின்னு சொல்லி,

பிறகு ஒரு மனிதன் வாழ்க்கையில மனைவின்னு சொல்றவ எத்தனை முக்கியம்னு சொல்ல,

"காலச் சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் இன்னல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்" இப்படியும் சொல்லி இருப்பார்.

தான் ஒருத்தி இருக்கும் வரை தன் கணவனுக்கு எந்த குறையுமே இல்லாம அவனை எப்பவும் தாங்கி நிற்கும் சுமைதாங்கியா வாழ்ந்துக்கிட்டு இருப்பவதான் ஒரு மனைவின்றதை கண்ணதாசன் எவ்வளவு அழகாச் சொல்லி இருக்கார் பாருங்களேன்...

இல்லாள் என்பவள் ஒருத்தனுக்கு நல்லவளாக அமைஞ்சுட்டா, அவ இல்லத்தை ஆள்பவள் மட்டுமில்லைங்க... அவனோட உள்ளத்தையும் ஆள்பவள் தான்...

Tuesday, December 13, 2011

வெண்பாக்கள் சில...

எரியும் நெருப்பாய் தெரியும் சுடரில்
எரிந்தது மீளா மறுமுறை - அஃதாய்;
கடந்த பொழுதில் கிடந்தே தவிக்க
கடந்தது வாராது அறி.

உடலை வருத்தி உளத்தை அடக்கி
குடலைச் சுருக்கி கடுந்தவஞ் செய்தும்
பிரசன்னம் ஆகா இறையவன் பார்க்க
பிறரிடம் காட்டுநீ அன்பு.

விழியால் விடுத்த புதிரை விலக்க
பழியாய் கிடந்தேன் பதிலதைத் தேடி
தவியாய் தவித்து தணலாய் தகித்து
கவியாய் அலையும் மனது.

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 9

நானும் துரை ஐயாவும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பாஸை எந்த கேரேஜுக்கு எடுத்துச் செல்வது யாரை எப்படி உதவி கேட்பது என்று புரியாமல் இருக்க, நரேஷ் அண்ணா சாப்பிட அமர்ந்திருந்ததால், அவர் வெளிவரும் வரை காத்திருப்போம் எனக் காத்திருந்தோம். அதற்கு முன்பாகவே எங்களுடன் காரை மீட்க காலையில் வந்த ஊர்காரர் ஒருவரை நாங்கள் பார்க்க, அவரது துணையுடன் மேட்டூரில் கேரேஜ் ஒன்றைத் தேடி நாங்கள் மண்டபத்திலிருந்து, புறப்படும் போது சொல்லிக் கொள்ளாமல் செல்கிறோமே என்று லேசான மனவருத்தத்துடன் புறப்பட்டோம்.

கேரேஜ் செல்லும் வழியில் மேட்டூர் நீர்த்தேக்கம் வர, துரை ஐயா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்னை நமது நண்பர்களுடன் சென்று இருக்குமாறும், தான் வண்டியை கேரேஜில் விட்டு விட்டு வந்து சேருகிறேன் என்றும் சொன்னார். ஒரு வேளை கேரேஜ் மேட்டூரில் கிடைக்காமல் போனால் எனது நேரம் விரயமாகுமே, எனது நண்பர்களுடனான சந்திப்பும் விடுபட்டு போகுமே என்று நினைத்துதான் துரை ஐயா இப்படிச் சொல்கிறார், எதற்கு அத்தகைய தர்மசங்கடமான நிலைமையை அவருக்கு உருவாக்க வேண்டும் என்று எண்ணியவாறு நான் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இறங்கி கொண்டேன்.

உதயனுக்கு போன் செய்து நண்பர்கள் இருக்கும் இடம் கேட்டுக் கொண்டு நானும் நண்பர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டேன். நான் சென்ற சமயத்தில் ச.கி.ந ஐயா, ஸ்டாலின் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு என்று எனக்கு ஐஸ்கிரீம் தர, ஸ்டாலின் அண்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி விட்டு, எனக்கு தோதான இடத்தில் அமர்ந்து கொண்டேன். அங்கிருந்தவர்களின் அனைவரையும் காலை முதல் சந்தித்திருந்தாலும் ஒருவருடன் அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்பது தெரிந்தது.

அவரை வில்லனிடம் காண்பித்து, அவர்தான் ஆசாத் ஐயாவா எனக் கேட்க, வில்லன் ஆசாத் ஐயாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான். பரஸ்பரம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் நண்பர்கள் அளவளாவிக் கொண்டிருந்த சமயத்தில், இஜ்ஜீனியோ அண்ணியின் சமையல் குறிப்புகள் ஏன் தற்பொழுதெல்லாம் வருவதில்லை எனக் கேட்ட போது தான் ஸ்டாலின் அண்ணா, நமது நண்பர்களால் அவரது வீட்டில் கஞ்சி மட்டுமே அவருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யும் பாசத்தை இணையத் துண்டிப்பால் துண்டாக்கி இருக்கிறார் என்ற செய்தி தெரிய வந்தது.

ஆசாத் ஐயா வாசகர் வட்டத்தை ஆரம்பிக்கலாம் எனச் சொல்ல, எப்பொழுதும் சந்திப்பின் இறுதி நிமிடங்களில் மட்டுமே பேச வாயைத் திறக்கும் என்னை அறிமுகம் செய்யுமாறு ஸ்டாலின் அண்ணாவும், விழியன் அண்ணாவும் சொன்னார்கள். அறிமுகத்தோடு வாசிப்பனுபவத்தையும் சொல்லச் சொன்னார்கள். புத்தக வாசிப்பே செய்தி்ராத நான், எங்கு வாசிப்பு அனுபவத்தைப் பகிர? எனது சுய புராணத்தைப் பாடியே எங்களிடம் இருந்த ஒரு மணி நேரத்தில் பெரும்பகுதியை நான் கொன்று விட, விழியன் அண்ணா, நேரம் இல்லாமையைச் சுட்டிக் காண்பிக்க கொஞ்சம் வேகமாக எனது அறிமுகத்தை முடித்துக் கொண்டேன்.

அதன் பின் ஸ்னாபக் வினோத், தனது அறிமுகத்தையும், தான் படித்த வேல்சாமியின் கோவில் நிலம் சாதி புத்தகத்தைப் பற்றியும், ஷோபா அவர்களின் இன்னொருவர் புத்தகத்தைப் பற்றியும் சிலாகித்துப் பேசினார். அவ்விரு புத்தகங்களும் தமிழர்களின் தொன்மையைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் சொல்வதாகவும், தமிழர்கள் தங்களது தொன்மையை எப்படி இழந்தார்கள் என்பதையும் அப்புத்தகங்கள் சொல்வதாகவும் சொன்னார்.

அதன்பிறகு, வேறு யாரேனும், கடந்த வாசகர் வட்டத்திற்குப் பிறகு புத்தகம் ஏதும் படித்திருந்தால் அதைப் பற்றி பேசச் சொல்ல, உதயன் பேச ஆரம்பித்தான். கடந்த வாசகர் வட்டத்தில் கண்மணி குனசேகரன் பற்றி அஞ்சலை என்ற புத்தகத்தால் நிலாரசிகன் மூலமாக அறிய வந்த உதயன், கண்மணி குனசேகரன் எழுதிய இன்னொரு புத்தகமான நெடுஞ்சாலை பற்றிப் பேசினான்.

கண்மணி குனசேகரன் பற்றி உதயன் சொல்லும் பொழுது, கண்மணி குனசேகரன் எழுதியவற்றை யோசிக்காமல் வாங்கலாம் என்று விழியன் அண்ணா சொல்ல, அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை, தனது மனதில் நெடுஞ்சாலை பற்றிய அனுபவத்தைச் சொல்ல ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த உதயனால் புரிந்து கொள்ள முடியாமல் போனது. பின்பு, கண்மணி குனசேகரன் புத்தகத்தை நம்பி வாங்கலாம், அவரது எழுத்தாக்கம் அவ்வளவு அருமையாக இருக்கும் என விளக்கம் கொடுத்ததும் உதயன் அசடு வழிய சிரித்து, நெடுஞ்சாலை புத்தகத்தின் மீதான தனது வாசிப்பனுபவத்தைச் சொல்லலானான்.

உதயன், தனது வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் தான் பணிபுரிந்த பொழுது, பேருந்து பராமரிப்புத் துறையில் தான் கண்ட அனைத்தையும் அப்புத்தகத்தில் மீண்டும் கண்டதாகச் சொன்னான். புத்தகம் முழுவதும் ஒரு பேருந்தின் டிரைவர், கன்டக்டர் மற்றும் மெக்கானிக் வாழ்க்கையைச் சுற்றி சுற்றி அவர்களது அன்றாட வேலையில் இருக்கும் பிரச்சினைகளை அழகாக எடுத்துக் காட்டுவதாகக் கூறினான். அய்யனார் என்ற கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை வலம் வந்தாலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து சேவையைத் தரும் டிரைவர், கன்டக்டர், மெக்கானிக் இன்னும் பிறரின் வேலைகளின் அவலங்களை அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை படம் பிடித்துக் காட்டுவதாகக் கூறினான்.

தான் முன்பு வேலைபார்த்த இடத்தில் இருப்பவர்களுக்கு, அப்புத்தகத்தை வாங்கி படிக்கவும், புத்தகம் வாங்க முடியவில்லை என்றால் தானே வாங்கித் தருவதாகவும் சொல்லியிருப்பதாகவும் சொன்னான். இவ்வாறாக வாசிப்பனுபவத்தை உதயன் சொல்லிக் கொண்டிருக்க, நேரம் இல்லாமையால் விழியன் அண்ணா மற்றும் ஸ்டாலின் அண்ணா குடும்பத்தினர் தாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று சென்னை கிளம்ப தயாராக வேண்டும் எனப் புறப்பட்டுச் சென்றார்கள். அதன் பிறகு எஞ்சியிருந்த நாங்கள் சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு பிறகு நாங்களும் விடுதி சென்றோம். அங்கு நான் நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.

இங்கு நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது, வாசிப்பனுபவம் என்று சொல்கிறார்களே, என்னடா இது என்று சலிப்போடு நினைக்கும் என்னைப் போன்றவர்களுக்காக, அன்றைய வாசகர் வட்டத்தில் நான் அறிந்து கொண்ட உண்மை இது.

"அனைத்து நிகழ்வையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ள ஆயுள் ஒன்று போதாது என்று உணர்ந்த ஆன்றோர்கள், தங்களது அனுபவங்களை புத்தகமாகத் தருவது, நாம் அனுபவிக்காமல் படிப்பதின் மூலமாக அந்த அனுபவத்தை அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே. அதனால் நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்க, அந்த புத்தகத்தின் அனுபவம் உங்களுக்கு நல்லதோர் படிப்பினையும், காலத்தை மிச்சமும் செய்து தரும்."

வாசகர் வட்டத்தில் கண்ட இன்னுமோர் சுவையான நிகழ்வு. அங்கு அமர்ந்திருந்தவர்களின் கண்களில், பேசுபவர் என்ன சொல்ல வருகிறார் என்ற ஆர்வம். நான் பேசும் பொழுது கவனித்தவற்றைச் சொல்கிறேன். டேமேஜர் மேடம் தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதைக் கேட்பதைப் போல கேட்டுக் கொண்டிருந்தார். சுதாகர் ஐயாவோ அத்தனை கூர்மையாக ஒவ்வொருவர் பேசுவதையும் கவனித்து வந்தார். தனது மனதில் படுவதை பட்டென்று கேட்டு விடுகிறார். ஸ்னாபக் வினோத், ஆர்வம் மிகுதியாகக் கொண்டுள்ளார். அந்த ஆர்வ மிகுதி எண்ணத்தை வேகமாக பறக்க விடுவதால் சொல்லும் வேகமாக அவசர கதியில் வந்து விழுகிறது. உதயன், என்ன சொல்ல... எப்படி இருந்தவன்? புத்தகத்தைப் படித்த பிறகு அவனுள் அவனை அறியாமலேயே பல மாற்றங்கள் வந்துள்ளது. ஒவ்வொன்றையும் அவன் சிலாகித்துப் பார்க்கும் பார்வை... அப்பப்பா, நிச்சயமாக முயன்றால், நாளை இவனும் எழுத்தை ஆளலாம்.

ச.கி.ந. ஐயாவோ, வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவனைப் போல அத்தனை பவயமுடன் அனைவரின் வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருக்க, ஆசாத் ஐயா பார்வையில் தான் எத்தனை தீர்க்கம்... தெரிந்ததில் மட்டுமே தெளிவுடன் தன் கருத்தை வைக்கும் அந்த பாங்கு,ம்ம்ம்... இஜ்ஜீனியோ அண்ணி, ஓவியாவைக் கவனித்துக் கொண்டு நாங்கள் பேசுவதையும் கவனிக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, ஸ்டாலின் அண்ணா தன்
பார்வையில் எதையோ சாதிக்கக் காத்துக் கொண்டிருக்கும் வெறி, எதையோ எப்படி மாற்றப் போகிறோம் என்ற ஏக்கம், அடுத்தவர் பேசும் போது, பேசுபவரை உதாசீனப்படுத்தாமல் கவனிக்கச் சொல்லும் கட்டளைப் பார்வை என இருக்க, விழியன் அண்ணா, நடக்கும் அனைத்தையும் அமைதியாக அதே சமயம் ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருந்தார். வித்யா அண்ணியோ, குழலியுடன் விளையாடிக் கொண்டிருப்பது போல இருந்தாலும் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டு, தான் ரசித்த வார்த்தைகளுக்கு அளவாய் ஒரு புன்னகைச் செய்தும் வாசகர் வட்டத்தை ரசித்திருக்க, என் பக்கத்தில் வில்லன் எப்பொழுதும் போல விளையாட்டுத்தனமாய் விஷமத்தனமாய் எனத் தனக்கே உரிய பாணியில் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

மொத்தத்தில் நந்தா அண்ணா திருமணமும் சரி, நண்பர் குழாம் சந்திப்பும் சரி, நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் என்னைப் பல மடங்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இணையத்தில் என்ன கண்டாய் என்று கேட்பவர்களிடம், இதயங்கலந்த இனிய உறவுகளைப் பெற்றேன் எனப் பெருமைப் பட்டுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாக்கித் தந்த நந்தா அண்ணாவிற்கும், நண்பர்களுக்கும் எனது மகிழ்ச்சியான வணக்கங்கள்.

(பி.கு: ஒரு பயணம் இன்னொரு பயணத்திற்கு அடிகோலுகிறது என்று விழியன் அண்ணா தனது வலைப்பக்கத்தில் ஒரு முறை சொல்லி இருந்ததைப் போல, நந்தா அண்ணா திருமண பயணத்தின் முடிவு, ரமேஷ் முருகனின் திருமண பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.)

(விடுபட்ட செய்திகள் ஏதேனும் இருந்தால் நண்பர்கள் பகிரவும்)

- முற்றும்.

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 8

முக்கியமான ஒன்றைச் சொல்ல வில்லையே. நாங்கள் திருமண மண்டபத்திற்குத் திரும்பிய பொழுது நேரம் மதியம் இரண்டரையைக் கடந்திருந்தது. பண்புடன் நண்பர்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை நம்மையும் பாஸையும் நலம் விசாரித்து முடிக்க, பாஸை மீட்டு வந்த செய்தியும், பாஸில் இருந்து களவு போன பொருட்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.

காலையில் ஒற்றை ஹாயுடன் பிறந்த நாளைக் கொண்டாடும் ஸ்டாலின் அண்ணாவிடம் விடைபெற்றுச் சென்ற நான், மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பியதும் தான் பார்க்க முடிந்தது. அதுவும் அழகியதோர் சூழலில். அச்சூழல்...

//ஓவியமொன்று
உயிர்பெற்று மிதந்து வந்தது

என்ன இது அதிசயம்
எட்டித் தொட முயன்றேன்...

மானா
ஒற்றை வார்த்தையில்
எட்டாக்கனியாகி விலகியது...

தேடலின் இன்பம் காண
தேடி விழைந்தபடி நான்

ஓவியமாய் ஓவியா...//

ஆம், ஓவியாவுடன் தான் அண்ணனைப் பார்த்தேன். காலையிலேயே பார்க்க வேண்டும் என நினைத்திருந்த என் தங்கம் ஓவியாவை மதியம் தான் பார்க்க முடிந்தது. எத்தனை அழைத்தும் ஒட்டவில்லை ஓவியா என்னுடன்.

பாஸைப் பார்த்ததும் ஓவியா சொன்ன வார்த்தை, "இந்த அண்டி வாணாம்பா" என்பது தான். ஸ்டாலின் அண்ணா எத்தனைச் சமாதானப்படுத்தியும் அக்குழந்தை மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை...

தேவதைகளின் உள்ளமொழி
இரண்டில் ஒன்று தான்...

வேண்டும்... வேண்டாம்...

எத்தனை தான் மகிழ்வைத் தந்தாலும்
வேண்டுமென விரும்பிய பொருட்கள்
பயம் காட்டி விட்டால்
வேண்டாம்தான் அவர்களுக்கு...

பயம் தெளியும் வரை.!

இது இவ்வாறாக இருக்க, நானோ ஓவியாவை எப்படியும் என் கைகளில் ஏந்த வேண்டும் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து முயன்று கொண்டிருந்தேன். விளைவு,

பக்திக்கு அவசியம்
பொறுமையும் விடாமுயற்சியும்

போதகரின் வாக்கு
உண்மையானது நேற்று...

தேவதையை ஏந்தும் தவத்தில்
தேவதை மனமிறங்கவில்லை...

தேவதையைத் தந்தவர்கள்
இறங்கினார்கள்...

ஒரே ஒரு முறை சென்றுவர
தேவதையை பணித்தார்கள்...

என்ன அதிசயம்...

தேவதையை நான் ஏந்தவில்லை...
என்னை ஏந்தினாள் தேவதை

உபரியாக
வானத்தில் மிதக்கும் வரமாய்...
கன்னத்திற்கொன்றாய் முத்தம்.!

இப்படியாக ஓவியாவுடன் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தேன்.

நிற்க,

வண்டியை இப்படியே வைத்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது, கேரேஜ் பக்கம் எங்கேனும் எடுத்துச் சென்று ஓரளவு சீர்படுத்தினால் தானே துரை ஐயா தூத்துக்குடி வரை செல்ல முடியும் என்று எண்ணியவாறு, தேடினால் உதவிக்கு வந்திருந்த ஊர்காரர்கள் யாரும் கண்ணுக்குக் கிடைக்கவில்லை.

அப்பொழுதுதான் நமது நண்பர்கள், நம்மை மதிய விருந்துக்கு நினைவுபடுத்தினார்கள். நண்பர்கள் அனைவரும் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் காத்திருப்பதாகச் சொல்லி, என்னையும், துரை ஐயாவையும் சாப்பிட்டு விட்டு அங்கு வந்து தங்களுடன் இணைந்து கொள்ளும்படி அன்புக்கட்டளை இட்டு சென்றார்கள். சரி என்று, நானும் துரை ஐயாவும் சாப்பிட அமர்ந்தோம்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மணமக்கள் எங்களுக்கு எதிராகச் சாப்பிட வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் துரை ஐயாவிற்கு, தன்னால் பிரசாத்தும் மணமக்களைச் சந்திக்க முடியவில்லையோ என்ற வருத்தம் மேலிட, நந்தா அண்ணாவிடம் அறிமுகம் செய்து கொண்டாயா என்று கேட்டார். நான் காலையில் நந்தா அண்ணனைச் சந்தித்ததைச் சொல்லியதும் தான் அவர் மனம் சற்று அமைதியடைந்தது.

மணமக்களை எதிர்புறம் பார்த்ததும் நான் மனமார

"தான்போல் சுயமது தன்துணைக்கு உண்டென்று
நான்விடுத்து என்றுமினி நாமென்(ற) உணர்வோடு
தேனினிய நந்தாநீர் தெள்ளியநற் பாதியொடு
வான்புகழ பல்லாண்டு வாழ்"

என்று மனதிற்குள் வாழ்த்தி விட்டு, மதிய விருந்தை திருப்தியுடன் உண்டு துரை ஐயாவுடன் வெளியே வந்தேன்.

நல்ல விருந்து, ஒரே ஒரு குறை எங்கள் பகுதிக்கு பிரியாணி வராமல் போனது தான்... :))) இருந்த உணவையே முழுமையாகச் சாப்பிட முடியவில்லை என்பது வேறு விஷயம் என்றாலும் பிரியாணி வரவில்லை என்பதால், நந்தா அண்ணன் இன்னொரு முறை எனக்கு மட்டுமேனும் பிரியாணியுடன் விருந்து படைக்க வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 7

வண்டியை ஒரு வழியாக மேலே கொண்டு வந்த பின் வண்டி ஸ்டார்ட் ஆகிறதா என ஸ்டார்ட் செய்து பார்த்தோம். ஒருவழியாக வண்டியைத் தள்ளி ஸ்டார்ட் செய்தால் பத்து அடி தூரம் சென்று வண்டி நின்று விட்டது. டீசல் காலியாகி இருக்கும் என்பதால் டீசல் போட்டால் வண்டி ஓடும் என முடிவுக்கு வந்தோம்.

ஆனால், டீசல் டேங்க் ஓட்டையாகி இருந்ததால் அதனைத் தற்காலிகமாகச் சீர்படுத்த முடியுமா எனப் பார்க்க வண்டியை ஓரங்கட்டி, ஆராய முயன்றார் நம்முடன் வந்த ஊர்காரர் ஒருவர். அவர் வண்டிக்கு கீழாகச் சென்று ஆராய்ந்து பார்த்ததில், டீசல் டேங்க் மட்டுமல்ல, டீசல் டேங்க் பியூரிபையரும் ஓட்டையாகி இருப்பதால் தான் வண்டி ஸ்டார்ட் ஆவதில் பிரச்சினை இருக்கிறது.

பியூரிபையர் ஓட்டையை மட்டும் சரி செய்து வண்டியை எடுத்துக் கொண்டு ஊர் சென்று விடலாம். அங்கு சென்று மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார். மேலும் டீசல் ஒழுகிக் கொண்டே இருப்பதால் டீசல் டேங்க் ஓட்டையை M-seal கொண்டு அடைக்க முடியாது என்பதையும் சொன்னார். அவர் சொல்வது தான் சரியெனப் பட, அப்படியேச் செய்யலாம் என முடிவெடுத்தோம். பியூரிபையரை மட்டும் எப்படியேனும் சரி செய்ய வேண்டுமென்று தீவிரமாக அந்த நபர் யோசித்து ஒரு குச்சியை உடைத்து அதனை ஆப்பை போல அழகாகச் செதுக்கி அந்த ஓட்டையை லாவகமாக அடைத்தார்.

நாலு எழுத்து படித்து விட்டாலே நாம் எல்லாம் தெரிந்தவர்கள் என்று ஆணவமாக இருக்கும் இன்றைய நவநாகரீக உலகில், நடைமுறைச் சிக்கல்களை லாவகமாகச் சமாளிக்கும் திறமை கொண்ட இவர்களின் ஆற்றல் என்னை வியப்படையச் செய்தது. ஒருவழியாக வண்டியைச் சரிசெய்து, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த டீசலை பாஸில் ஊற்றி வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகவில்லை.

இனி காத்தருப்பதில் பயனில்லை என்று, நாங்கள் எடுத்துச் சென்றிருந்த வண்டியுடன் பாஸைக் கயிற்றால் கட்டி toe செய்து இழுத்து செல்லலாம் என்று முடிவெடுத்தோம். இதில் மிகப் பெரியச் சிக்கல் என்னவென்றால் நாங்கள் பயணமாக இருப்பது மலைப்பாதை. துரை ஐயாவின் வண்டியோ ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் பிரேக் பிடிக்காதாம். அப்படி இருக்க வண்டியை இழுத்துச் செல்வது என்பது எப்படிப்பட்ட சவால் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எங்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவரோ, பியூரிபையரில் டீசல் வந்து சேராததால் தான் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன்கிறது. வண்டி நகர நகர அவ்வப்பொழுது பாஸை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யுங்கள். ஸ்டார்ட் ஆகி விட்டால் வேகமாகச் சென்று விடலாம் எனக் கூற, சிறிது நேரத்தில் அப்படியே நடந்தது. பாஸ் ஸ்டார்ட் ஆகி விட்டது. பாஸ் ஸ்டார்ட் ஆனதும் எங்கள் வண்டியுடன் கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு, பாஸை முன்னே போக வைத்து நாங்கள் பின்னே தொடர்ந்தோம்.

தமிழக எல்லை வந்த சில நேரத்தில் நாங்கள் பாஸைக் கடந்து, கடனாக ஆட்டோ ஓட்டுனர்களிடம் வாங்கி வந்திருந்த கயிறைத் திருப்பிக் கொடுத்து திருமண மண்டபத்திற்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு முன்னாக பாஸ் வந்திருந்தது. பாஸை ஆப் செய்து விட்டால் மறுபடியும் ஸ்டார்ட் செய்வது சிரமம் என்றதால் பாஸ் உறுமிக் கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில், தங்களது ஊர்காரர் திருமணத்திற்கு வந்த உறவுகள் என்ற ஒரே காரணத்திற்காக ஓடி ஓடி உதவி செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய சார்பிலும், துரை ஐயா சார்பிலும் கோடி நன்றிகள்... அவர்களுக்கு நாம் என்றென்றும் கடன்பட்டவர்களாகவே இருப்போம்.