Friday, November 2, 2012

பலகீனம்

பலம், பலகீனம் இரண்டுமே மனிதனுள் என்றும் உறைந்து கிடக்கும் ஒன்று. பலகீனத்தை வெளிகாட்டிக் கொள்ளாதவன் பலசாலி ஆகிறான். அப்படி என்றால் நாம் எப்பொழுதும் பலசாலியாகக் காட்டிக் கொள்ள நமது பலகீனத்தை வெளிக் காட்டாமல் இருக்க வேண்டும். நாம் வெளிகாட்டும் நமது உணர்வுகள் நமது பலகீனமா என்று நாம் எப்படி உணர்வது.
 
திரைப்படங்கள் பார்க்காதவர்கள் நம்மில் மிகவும் குறைவு என்பதால் திரைப்படத்தில் இருந்து இங்கு உதாரணம் சொல்வது மிகவும் பொருத்தமாக எளிதில் புரியக் கூடியதாக இருக்கும். திரைப்படத்தில் பார்த்தீர்களானால் ஒரு வன்புணர்வு காட்சியிலோ அல்லது பலம் குறைந்த ஒருவனை பலம் மிகுந்தவன் தாக்கும் போதோ பாதிப்புக்குள்ளாகுபவர்கள் தம் கையில் கிடைப்பதை எல்லாம் எதிராளியின் மீது வீசி எறிந்து தங்களைக் காத்துக் கொள்ள முனைவார்கள். நிச்சயமாய் தெரியும், தாங்கள் எரியும் சிறு கல்லோ, கண்ணாடிக் குடுவையோ அல்லது வேறு பொருட்களோ தன்னைக் காத்துக் கொள்ள உதவாது என்று.
 
இருந்தாலும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எறிவர். அவ்வாறில்லாமல் உணர்ச்சிகளைக் கொஞ்சம் அடக்கி, எதிராளியை எந்த இடத்தில் எப்படி தாக்கி நாம் தப்பிக்கலாம் என்று யோசித்தால் பிரச்சினைக்கு எளிதான தீர்வு கிடைக்கலாம். இதுவே பிரச்சினை வந்த பிறகு, அதற்கு எடுக்க வேண்டிய நல்ல தீர்வு. அதை விடுத்து கையில் அகப்பட்டதை எல்லாம் எறிவது நமது பலகீனத்தை நாமே அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காண்பிப்பது போலாகும்.
 
இந்த பலகீனங்களை நாம் நமது அன்றாட நிஜ அரசியல் நிகழ்வுகளிலும் இணைய அரசியல் நிகழ்வுகளிலும் கண்கூடாகக் காணலாம். மின்சாரப் பிரச்சினை, கூடங்குளப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என எல்லா பிரச்சினைகளிலும் சிலர் பிரச்சினைக்குண்டான உண்மையான காரணங்களை அறிந்து போராடினாலும் சிலர் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எல்லாம் மனம் போன போக்கில் இப்பிரச்சினைகளுக்கான காரணங்களாக்கி உண்மையான போராட்டத்தை நீர்த்து விடச் செய்கிறார்கள். இவர்கள் இவ்வாறு எல்லா நிகழ்வுகளையும் தாங்கள் சார்ந்த கொள்கைக்கான காரணங்களாக்குவது என்பது கையில் கிடைத்த பொருளை எல்லாம் எறிந்து தன்னைக் காத்துக் கொள்ள முனையும் பலகீனமான திரைப்பட கருப்போருள்களைப் போன்றவர். இது அவர்கள் சார்ந்த போராட்டம் பலகீனமானது என்று தம்பட்டம் அடிப்பது போலாகுமே அன்றி போராட்டம் ஆகாது என்று எப்பொழுது உணரப் போகிறார்களோ, அப்பொழுதே போராட்டத்தின் உண்மையான ஆக்ரோஷம் வெளிப்படும்... அதுவரை இவர்கள், இவர்கள் சார்ந்தவர்களின் பிரச்சனைகளை வைத்து வெறும் அரசியல் மட்டுமே செய்ய இயலும்... வேறு எதுவும் இவர்களால் ஆகப் போவது இல்லை...
 
ஹ்ம்ம்... வெற்று அரசியல் நாடகங்கள் உண்மையான போராட்டங்களாக ஆகும் நாளை எதிர்பார்த்தபடி நான்...

No comments:

Post a Comment