Friday, August 16, 2013

வினை பலன்

மதியப் பொழுதில்
அவசரமாய் ஊர்ந்து செல்கையில்
பிடி தளர கட்டுப்பாட்டை இழந்து
பொத்தென விழுந்தது அது.!
அவசரமாய் வீட்டினுள் புகுந்து
பலனைத் தேடுகிறான் இவன்...
உயிர்பிழைத்த மகிழ்வோடு
இருப்பிடம் திரும்பி தன் கைப்பசையை
சரி செய்து கொண்டிருக்கிறது அது...
அடுத்த முறை விழாமல் இருக்க.!

முயற்சி உடையார்

முயற்சி – இதனைப் பற்றி பலரும் அந்நாளில் இருந்து இந்நாள் வரை சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக முயற்சியின் பெருமையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் திருவள்ளுவரின் இக்குறள் போதுமானது எனலாம்.

தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

எனக்கு தெரிந்து முயற்சியின் பெருமையை இதனை விட சிறப்பாய் யாரும் சொல்லியதாய் தெரியவில்லை.

முயற்சி பற்றி சிறுவர்களுக்கு அவ்வப்போது சில வேடிக்கைக் கதைகள் பின்வருமாரு சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

புதையலை வேண்டி ஒருவன் பல நூறு அடிகள் அகழ்ந்தும் எதுவும் கிடைக்காமல் போனதால் முயற்சியை விடுத்து சென்றதன் பின் இன்னொருவன் அந்த குழியை மேலும் சில அடிகள் அகழ்ந்து புதையல் கிடைக்கப் பெற்றான் என்பது அதில் ஒன்று. அதாவது செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரை நமது முயற்சி இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்ற கதை இது.

இன்னொரு கதையும் உண்டு. ஒரு நாட்டின் அரசனுக்கு வாரிசுகள் இல்லாததால் தன் அரசு பொறுப்பை பொதுமக்களில் யாரேனும் ஒருவருக்கு அரசுப் பொறுப்பைத் தர எண்ணி பொதுமக்களை எல்லாம் ஒரு இடத்தில் குறிப்பிட்ட தினத்தில் கூடுமாறு அரசன் அறிவித்திருந்தான். ஒரு போட்டி அறிவித்து அதில் வெற்றி பெறுபவருக்கே அரச பதவி என்பது அரசனின் அறிவிப்பாக இருந்தது. போட்டி இன்னதென்று சொல்லாம்ல மர்மமாகவே வைத்திருந்தார் அரசர்.

தனது பிரத்யேகமான உளவாளிகள் கொண்டு வேற்று நாட்டிலிருந்து சில பலசாலிகளை வரவழைத்திருந்த அரசர் போட்டி நடக்கும் சில நாளுக்கு முன்பு அந்த பலசாலிகளைக் கொண்டு இரண்டு பெரிய கதவுகளை போட்டி நடக்கும் இடத்தில் பொருத்தி இருந்தான்.

போட்டி நாளன்று மக்கள் அனைவரும் கூடி நிற்க, அரசன் அந்த பலசாலிகளை அழைத்து கதவின் மறுபுறம் அரச சிம்மாசனத்தை வைத்து கதவை இழுத்து மூடுமாறு சொன்னான். பலசாலிகள் அனைவரும் சேர்ந்து அந்த கதவை பிரம்ம பிரயத்தனம் செய்து அடைத்தனர்.

இப்பொழுது பொதுமக்களைப் பார்த்து அரசன், இங்குள்ளவரில் எவரொருவர் தனியனாய் வந்து இந்த கதவுகளைத் திறந்து மறுபுறம் செல்கிறாரோ அவர் அரச சிம்மாசனத்தில் அமரும் தகுதி உடையவர் ஆவார் என்று அறிவித்தான்.

பொதுமக்கள் தங்களுள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அரசருக்கு பதவியை யாருக்கும் தர விருப்பமில்லாமல் இது போன்று ஒரு போட்டியை வைத்திருக்கிறார். பலபேர் இழுத்து மூடிய கதவை ஒருவனால் எப்படி திறக்க இயலும் என்று முனுமுனுக்கத் தொடங்கினர்.

சட்டென்று கூட்டத்தின் நடுவில் இருந்து ஒரு இளைஞன் தான் அக்கதவைத் திறக்க அனுமதி வழங்குமாறு அரசரைக் கேட்கிறான். அவனோ உருவத்தில் பலமில்லாதவனாய்க் காட்சியளிக்க பொதுமக்கள் அனைவரும் அவனை ஏளனமாய் பார்த்து நகைக்கத் தொடங்கினர். அதனை எல்லாம் பொருட்படுத்தாத இளைஞன் அரசரின் அனுமதியோடு கதவைத் திறக்க முயற்சி செய்ய, கதவு வெகு சுலபமாக திறந்து கொண்டது.

அரசன் அந்த இளைஞனைத் தழுவி அரச பதவியைக் கொடுத்து பின் பொதுமக்களிடம், அரசனாய் இருக்க வீரம் மட்டும் போதாது. முயற்சியும் வேண்டும். முயற்சி உடையவனால் எத்தகைய காரியத்தையும் சாதிக்க முடியும், அதனாலேயே இலகுவான கதவை பலம் பொருந்திய நபர்கள் கடினப்பட்டு மூடுவது போல ஒரு நாடகம் நடத்தி, யார் முயற்சி செய்கிறார் எனப் பார்த்ததாகச் சொல்ல பொதுமக்கள் அனைவரும் தமது புதிய மன்னரை ஆர்ப்பரித்து வாழ்த்தினர்.

இப்படித்தான் நம்மாளு ஒருத்தரு சூப்பர் மார்க்கெட்டுக்கு மளிகை சாமானம் வாங்கப் போய் இருந்தாரு. அவர் எப்பவும் வாங்கும் அரிசி கீழ் வரிசையில் வைக்கப்பட்டிருப்பதாய் அறிவிப்பு பலகைச் சொன்னது. அறிவிப்பு பலகை இருக்கும் இடத்தில் இருந்து நின்றபடி அந்த வரிசையைப் பார்த்து விட்டு காலியாகி விட்டது போலும் என்று நினைத்து வேறு கடையில் வாங்கிக் கொள்ளலாம் என இரண்டடி எடுத்து வைத்தவர், சட்டென எதையோ நினைத்தவராய் கீழே குனிந்து பார்க்க கீழ் வரிசையின் உட்பகுதியில் அவர் தேடி வந்த அரிசி இருந்தது.

வரிசையின் வெளிப்பகுதியில் இருந்த அரிசி மொத்தம் தீர்ந்து போனதால் நின்றபடி பார்த்தவருக்கு அரிசி தீர்ந்தது போன்ற தோற்றம் முதலில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எதற்கும் இருக்கட்டுமே என்று மேற்சொன்ன கதையின் இளைஞனைப் போல முயற்சி செய்ய அவருக்குத் தேவையான அரிசி கிடைத்தது.

எப்பொழுதும் தோற்றத்தைக் கண்டு அச்சப்பட்டோ, வெளித்தோற்றத்தை வைத்தோ முயற்சி செய்யாமல் இருப்பதை விட வெற்றிக்கனியைச் சுவைக்க சற்று முயற்சி தான் செய்து பார்ப்போமே… என்ன சொல்றீங்க நீங்க…

இக்கரைக்கு அக்கரை

வேளைக்கு கிடைக்கும் உணவு
பொழுது போக்கிற்கு தொலைக்காட்சி
வேடிக்கைப் பார்க்க அந்த வீட்டின் அந்தரங்கம்

துள்ளி விளையாடியபடி
மகிழ்வுடன் தான் இருந்தது
அந்த கெண்டை மீன்...
வரவேற்பறையின் கண்ணாடித் தொட்டிக்குள்.!

இருந்தும்
இரண்டு நாட்களாக சோகம்...
ஓடும் நதிநீரில் மகிழ்ந்திருக்கும்
மீனை தொலைக்காட்சியில் பார்த்ததுமுதல்.!

வீதியிலிருந்து வந்த பந்து
தொட்டியை உடைத்த ஓடையில்
துள்ளியபடி...
கண்டிப்பாய் இது மகிழ்ச்சியில் அல்ல.!

சுழற்சியும் சுகமே

விழிப்பு, உடல் தூய்மை, காலை உணவு, அலுவலகம், வேலை, மதிய உணவு, மீண்டும் வேலை, வீடு, இரவு உணவு, இளைப்பாற இணையம்...என்ன வாழ்க்கை இது. தினம் தினம் இதே சுழற்சியா. மாற்ற வேண்டும் இந்த சுழற்சியை எண்ணிக் கொண்டிருந்த போது நிலமதிர சிரிப்புச் சத்தம் கேட்டது. உண்மையில் நிலம் அதிரத்தான் செய்தது. சிரித்ததே நிலம் தானே.!

அனுதினம் நான் என்னையும், சூரியனையும் சுழல்வதையே வேலையாகக் கொண்டிருக்கிறேன். ஒரு கணம் எனது வேலையை நான் மாற்ற விரும்பினால் என்ன ஆகும் என நினைத்தாயா? பார்ப்பதற்கு எனது வேலை ஒன்றே போல் தோன்றினாலும் காலச்சக்கரத்தின் பிடியில் இந்த ஒரே வேலைக்குள்ளாக என்னுள் தான் எத்தனை மாற்றங்கள்...

சலிப்பை விடு. சுழற்சியாய் நீ தொடர்ந்து செய்யும் உன் வேலைகளால் உனக்குள் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனி. உனது மாற்றங்கள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பழகு. இந்த சுழற்சியும் சுகமாகும்.

சொல்லாமல் சொன்னது நிலம்.

நட்பெல்லாம் நட்பாமோ

ஒரு மனிதனுக்கு ரத்த பந்தமில்லாமல் அமையும் உறவுகளில் மிகவும் முக்கியமானது இல்லை அவசியமானது என்பதைப் பார்த்தால் நட்பு முதலில் வந்து நிற்கும். அத்தகைய நட்புறவு இந்நாளில் எப்படி இருக்கிறது என்றும், உண்மையில் நண்பர்கள் என்பவர்கள் யார் என்றும் இன்றைய தலைமுறையினர் புரிந்துள்ளனரா என்றால் கேள்வியே எஞ்சி நிற்கிறது. இங்கு நான் பேசப் போகும் கருப்பொருள் பெரும்பாலானோருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் நிஜம்.

துவக்கப் பள்ளி படிக்கும் காலத்தில், பெற்றோர் யாரும் உன் நண்பர்கள் பெயர் என்ன என்று கேட்டால் ஒன்று இரண்டு நண்பர்கள் பெயரைச் சொல்லுவோம். அவ்வளவு தானா என மீண்டும் கேட்டால் இன்னும் ஒன்றிரண்டு பெயர்களைச் சொல்லுவோம். இப்படித் தொடங்கும் நட்புறவானது நாளுக்கு நாள் வளர்ந்து நாளடைவில் நட்பு வட்டம் மிகப் பெரியதாகவே இருக்கிறது நம் எல்லோருக்கும்…


ஆனால் உண்மையில் நாம் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லோரும் நமது நண்பர்கள் தானா? எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா??? வீட்டின் அருகே சிறு வயது முதல் விளையாடி வந்த உறவுகளை நட்பு என்று சொல்கிறோம். துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பள்ளிக் காலங்களில் உடன் படித்தவர்களையும் நட்பு எனச் சொல்கிறோம். கல்லூரியில்(களில்) உடன் படித்தவர்களை நட்பு எனச் சொல்கிறோம். உடன் வேலை புரியும் இடத்தில் அல்லது முன்னர் வேலை புரிந்த இடத்தில் அறிமுகமானவர்களை நட்பு எனச் சொல்கிறோம். இது தவிர்த்து இன்றைய நவ நாகரிக உலகின் புது வடிவமான இணையத்தின் வாயிலாக குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிமுகமான பலரையும் நட்பு எனச் சொல்கிறோம். ஊர் நண்பர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், இணைய நண்பர்கள் என நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதாகவும் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதாலேயும் இவர்கள் எல்லாமே நமது நண்பர்கள் ஆகி விடுவரா.

கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார், குசேலன் கிருஷ்ணர் என நட்புக்கு இலக்கணம் வகுத்த தமிழ் மரபில் வந்த நாம் இன்று நட்பு என்ற பதத்தை/வட்டத்தை நமக்கு அறிமுகமான அனைத்து நபர்களுக்கும் கொடுப்பது சரிதானா? நான் அனைவரிடமும் நட்பு பாராட்டுவதைத் தவறு எனச் சொல்லவில்லை. அதே சமயம் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதை மட்டும் சற்று யோசிக்கச் சொல்கிறேன்.

நண்பனைப் பார்த்து நண்பனை அறி என்ற பழமொழி இந்நாளில் சாத்தியமா… மேலும்

உடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

என்று இருப்பதை மட்டும் தான், நான் நட்பு எனச் சொல்லவில்லை. அதே சமயம் நமது இடுக்கனை மனம் விட்டு பகிர்ந்து கொள்ள முடியாதவர்களை எல்லாம் நட்பு எனச் சொல்ல வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.

நமது சந்தோஷத்தை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அறிமுகம் மட்டும் போதுமானது. ஆனால் நமது துன்பத்தை, பிரச்சினைகளை பகிர உண்மையான நட்பு அவசியமாகிறது நமக்கு. எனக்கு எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள் எனச் சொல்லிக் கொள்வதை விட, என்னை முழுமையாக ஏற்றுக் கொண்ட நண்பர்கள் இத்தனை பேர் என்று எண்ணிக்கையில் சொல்வது சாலச் சிறந்தது.

பள்ளியில் ஆயிரம் பேர் உடன் படித்திருக்கலாம். அவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆகி விடார். நட்பாக பழகாதவர்களை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உடன் படித்தவர் என்று அறிமுகம் செய்யுங்கள். இதே தான் கல்லூரியில் உடன் படித்தவர்களுக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் அல்லாதோரை உடன் பணிபுரிபவர் என்றே பிறருக்கு அறிமுகம் செய்யுங்கள். நண்பர் அல்லாதோரை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உங்களுக்கு அவர் எப்படி அறிமுகம் ஆனார் என்று சொல்வது தான் சாலச் சிறந்ததே அன்றி, நட்பு என்ற ஒற்றை வட்டத்திற்குள் அனைவரையும் அடைப்பது சரியாகாது.

ஒரு கணம் கண்ணை மூடிச் சிந்தியுங்கள். உங்களது சுக துக்கங்களை எந்தவித தயக்கமும் இன்றி பகிரக் கூடிய ந (ண்)பர்கள் எத்தனை பேர் என்று. பிறகு முடிவெடுங்கள் நட்பென்று சொல்லும் எல்லாம் நட்பு தானா என்று….

Thanks: http://www.atheetham.com/?p=5091