Friday, August 16, 2013

வினை பலன்

மதியப் பொழுதில்
அவசரமாய் ஊர்ந்து செல்கையில்
பிடி தளர கட்டுப்பாட்டை இழந்து
பொத்தென விழுந்தது அது.!
அவசரமாய் வீட்டினுள் புகுந்து
பலனைத் தேடுகிறான் இவன்...
உயிர்பிழைத்த மகிழ்வோடு
இருப்பிடம் திரும்பி தன் கைப்பசையை
சரி செய்து கொண்டிருக்கிறது அது...
அடுத்த முறை விழாமல் இருக்க.!

முயற்சி உடையார்

முயற்சி – இதனைப் பற்றி பலரும் அந்நாளில் இருந்து இந்நாள் வரை சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக முயற்சியின் பெருமையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் திருவள்ளுவரின் இக்குறள் போதுமானது எனலாம்.

தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

எனக்கு தெரிந்து முயற்சியின் பெருமையை இதனை விட சிறப்பாய் யாரும் சொல்லியதாய் தெரியவில்லை.

முயற்சி பற்றி சிறுவர்களுக்கு அவ்வப்போது சில வேடிக்கைக் கதைகள் பின்வருமாரு சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

புதையலை வேண்டி ஒருவன் பல நூறு அடிகள் அகழ்ந்தும் எதுவும் கிடைக்காமல் போனதால் முயற்சியை விடுத்து சென்றதன் பின் இன்னொருவன் அந்த குழியை மேலும் சில அடிகள் அகழ்ந்து புதையல் கிடைக்கப் பெற்றான் என்பது அதில் ஒன்று. அதாவது செய்யும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரை நமது முயற்சி இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்ற கதை இது.

இன்னொரு கதையும் உண்டு. ஒரு நாட்டின் அரசனுக்கு வாரிசுகள் இல்லாததால் தன் அரசு பொறுப்பை பொதுமக்களில் யாரேனும் ஒருவருக்கு அரசுப் பொறுப்பைத் தர எண்ணி பொதுமக்களை எல்லாம் ஒரு இடத்தில் குறிப்பிட்ட தினத்தில் கூடுமாறு அரசன் அறிவித்திருந்தான். ஒரு போட்டி அறிவித்து அதில் வெற்றி பெறுபவருக்கே அரச பதவி என்பது அரசனின் அறிவிப்பாக இருந்தது. போட்டி இன்னதென்று சொல்லாம்ல மர்மமாகவே வைத்திருந்தார் அரசர்.

தனது பிரத்யேகமான உளவாளிகள் கொண்டு வேற்று நாட்டிலிருந்து சில பலசாலிகளை வரவழைத்திருந்த அரசர் போட்டி நடக்கும் சில நாளுக்கு முன்பு அந்த பலசாலிகளைக் கொண்டு இரண்டு பெரிய கதவுகளை போட்டி நடக்கும் இடத்தில் பொருத்தி இருந்தான்.

போட்டி நாளன்று மக்கள் அனைவரும் கூடி நிற்க, அரசன் அந்த பலசாலிகளை அழைத்து கதவின் மறுபுறம் அரச சிம்மாசனத்தை வைத்து கதவை இழுத்து மூடுமாறு சொன்னான். பலசாலிகள் அனைவரும் சேர்ந்து அந்த கதவை பிரம்ம பிரயத்தனம் செய்து அடைத்தனர்.

இப்பொழுது பொதுமக்களைப் பார்த்து அரசன், இங்குள்ளவரில் எவரொருவர் தனியனாய் வந்து இந்த கதவுகளைத் திறந்து மறுபுறம் செல்கிறாரோ அவர் அரச சிம்மாசனத்தில் அமரும் தகுதி உடையவர் ஆவார் என்று அறிவித்தான்.

பொதுமக்கள் தங்களுள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அரசருக்கு பதவியை யாருக்கும் தர விருப்பமில்லாமல் இது போன்று ஒரு போட்டியை வைத்திருக்கிறார். பலபேர் இழுத்து மூடிய கதவை ஒருவனால் எப்படி திறக்க இயலும் என்று முனுமுனுக்கத் தொடங்கினர்.

சட்டென்று கூட்டத்தின் நடுவில் இருந்து ஒரு இளைஞன் தான் அக்கதவைத் திறக்க அனுமதி வழங்குமாறு அரசரைக் கேட்கிறான். அவனோ உருவத்தில் பலமில்லாதவனாய்க் காட்சியளிக்க பொதுமக்கள் அனைவரும் அவனை ஏளனமாய் பார்த்து நகைக்கத் தொடங்கினர். அதனை எல்லாம் பொருட்படுத்தாத இளைஞன் அரசரின் அனுமதியோடு கதவைத் திறக்க முயற்சி செய்ய, கதவு வெகு சுலபமாக திறந்து கொண்டது.

அரசன் அந்த இளைஞனைத் தழுவி அரச பதவியைக் கொடுத்து பின் பொதுமக்களிடம், அரசனாய் இருக்க வீரம் மட்டும் போதாது. முயற்சியும் வேண்டும். முயற்சி உடையவனால் எத்தகைய காரியத்தையும் சாதிக்க முடியும், அதனாலேயே இலகுவான கதவை பலம் பொருந்திய நபர்கள் கடினப்பட்டு மூடுவது போல ஒரு நாடகம் நடத்தி, யார் முயற்சி செய்கிறார் எனப் பார்த்ததாகச் சொல்ல பொதுமக்கள் அனைவரும் தமது புதிய மன்னரை ஆர்ப்பரித்து வாழ்த்தினர்.

இப்படித்தான் நம்மாளு ஒருத்தரு சூப்பர் மார்க்கெட்டுக்கு மளிகை சாமானம் வாங்கப் போய் இருந்தாரு. அவர் எப்பவும் வாங்கும் அரிசி கீழ் வரிசையில் வைக்கப்பட்டிருப்பதாய் அறிவிப்பு பலகைச் சொன்னது. அறிவிப்பு பலகை இருக்கும் இடத்தில் இருந்து நின்றபடி அந்த வரிசையைப் பார்த்து விட்டு காலியாகி விட்டது போலும் என்று நினைத்து வேறு கடையில் வாங்கிக் கொள்ளலாம் என இரண்டடி எடுத்து வைத்தவர், சட்டென எதையோ நினைத்தவராய் கீழே குனிந்து பார்க்க கீழ் வரிசையின் உட்பகுதியில் அவர் தேடி வந்த அரிசி இருந்தது.

வரிசையின் வெளிப்பகுதியில் இருந்த அரிசி மொத்தம் தீர்ந்து போனதால் நின்றபடி பார்த்தவருக்கு அரிசி தீர்ந்தது போன்ற தோற்றம் முதலில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எதற்கும் இருக்கட்டுமே என்று மேற்சொன்ன கதையின் இளைஞனைப் போல முயற்சி செய்ய அவருக்குத் தேவையான அரிசி கிடைத்தது.

எப்பொழுதும் தோற்றத்தைக் கண்டு அச்சப்பட்டோ, வெளித்தோற்றத்தை வைத்தோ முயற்சி செய்யாமல் இருப்பதை விட வெற்றிக்கனியைச் சுவைக்க சற்று முயற்சி தான் செய்து பார்ப்போமே… என்ன சொல்றீங்க நீங்க…

இக்கரைக்கு அக்கரை

வேளைக்கு கிடைக்கும் உணவு
பொழுது போக்கிற்கு தொலைக்காட்சி
வேடிக்கைப் பார்க்க அந்த வீட்டின் அந்தரங்கம்

துள்ளி விளையாடியபடி
மகிழ்வுடன் தான் இருந்தது
அந்த கெண்டை மீன்...
வரவேற்பறையின் கண்ணாடித் தொட்டிக்குள்.!

இருந்தும்
இரண்டு நாட்களாக சோகம்...
ஓடும் நதிநீரில் மகிழ்ந்திருக்கும்
மீனை தொலைக்காட்சியில் பார்த்ததுமுதல்.!

வீதியிலிருந்து வந்த பந்து
தொட்டியை உடைத்த ஓடையில்
துள்ளியபடி...
கண்டிப்பாய் இது மகிழ்ச்சியில் அல்ல.!

சுழற்சியும் சுகமே

விழிப்பு, உடல் தூய்மை, காலை உணவு, அலுவலகம், வேலை, மதிய உணவு, மீண்டும் வேலை, வீடு, இரவு உணவு, இளைப்பாற இணையம்...என்ன வாழ்க்கை இது. தினம் தினம் இதே சுழற்சியா. மாற்ற வேண்டும் இந்த சுழற்சியை எண்ணிக் கொண்டிருந்த போது நிலமதிர சிரிப்புச் சத்தம் கேட்டது. உண்மையில் நிலம் அதிரத்தான் செய்தது. சிரித்ததே நிலம் தானே.!

அனுதினம் நான் என்னையும், சூரியனையும் சுழல்வதையே வேலையாகக் கொண்டிருக்கிறேன். ஒரு கணம் எனது வேலையை நான் மாற்ற விரும்பினால் என்ன ஆகும் என நினைத்தாயா? பார்ப்பதற்கு எனது வேலை ஒன்றே போல் தோன்றினாலும் காலச்சக்கரத்தின் பிடியில் இந்த ஒரே வேலைக்குள்ளாக என்னுள் தான் எத்தனை மாற்றங்கள்...

சலிப்பை விடு. சுழற்சியாய் நீ தொடர்ந்து செய்யும் உன் வேலைகளால் உனக்குள் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனி. உனது மாற்றங்கள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பழகு. இந்த சுழற்சியும் சுகமாகும்.

சொல்லாமல் சொன்னது நிலம்.

நட்பெல்லாம் நட்பாமோ

ஒரு மனிதனுக்கு ரத்த பந்தமில்லாமல் அமையும் உறவுகளில் மிகவும் முக்கியமானது இல்லை அவசியமானது என்பதைப் பார்த்தால் நட்பு முதலில் வந்து நிற்கும். அத்தகைய நட்புறவு இந்நாளில் எப்படி இருக்கிறது என்றும், உண்மையில் நண்பர்கள் என்பவர்கள் யார் என்றும் இன்றைய தலைமுறையினர் புரிந்துள்ளனரா என்றால் கேள்வியே எஞ்சி நிற்கிறது. இங்கு நான் பேசப் போகும் கருப்பொருள் பெரும்பாலானோருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் நிஜம்.

துவக்கப் பள்ளி படிக்கும் காலத்தில், பெற்றோர் யாரும் உன் நண்பர்கள் பெயர் என்ன என்று கேட்டால் ஒன்று இரண்டு நண்பர்கள் பெயரைச் சொல்லுவோம். அவ்வளவு தானா என மீண்டும் கேட்டால் இன்னும் ஒன்றிரண்டு பெயர்களைச் சொல்லுவோம். இப்படித் தொடங்கும் நட்புறவானது நாளுக்கு நாள் வளர்ந்து நாளடைவில் நட்பு வட்டம் மிகப் பெரியதாகவே இருக்கிறது நம் எல்லோருக்கும்…


ஆனால் உண்மையில் நாம் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லோரும் நமது நண்பர்கள் தானா? எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா??? வீட்டின் அருகே சிறு வயது முதல் விளையாடி வந்த உறவுகளை நட்பு என்று சொல்கிறோம். துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பள்ளிக் காலங்களில் உடன் படித்தவர்களையும் நட்பு எனச் சொல்கிறோம். கல்லூரியில்(களில்) உடன் படித்தவர்களை நட்பு எனச் சொல்கிறோம். உடன் வேலை புரியும் இடத்தில் அல்லது முன்னர் வேலை புரிந்த இடத்தில் அறிமுகமானவர்களை நட்பு எனச் சொல்கிறோம். இது தவிர்த்து இன்றைய நவ நாகரிக உலகின் புது வடிவமான இணையத்தின் வாயிலாக குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிமுகமான பலரையும் நட்பு எனச் சொல்கிறோம். ஊர் நண்பர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், இணைய நண்பர்கள் என நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதாகவும் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதாலேயும் இவர்கள் எல்லாமே நமது நண்பர்கள் ஆகி விடுவரா.

கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார், குசேலன் கிருஷ்ணர் என நட்புக்கு இலக்கணம் வகுத்த தமிழ் மரபில் வந்த நாம் இன்று நட்பு என்ற பதத்தை/வட்டத்தை நமக்கு அறிமுகமான அனைத்து நபர்களுக்கும் கொடுப்பது சரிதானா? நான் அனைவரிடமும் நட்பு பாராட்டுவதைத் தவறு எனச் சொல்லவில்லை. அதே சமயம் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதை மட்டும் சற்று யோசிக்கச் சொல்கிறேன்.

நண்பனைப் பார்த்து நண்பனை அறி என்ற பழமொழி இந்நாளில் சாத்தியமா… மேலும்

உடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

என்று இருப்பதை மட்டும் தான், நான் நட்பு எனச் சொல்லவில்லை. அதே சமயம் நமது இடுக்கனை மனம் விட்டு பகிர்ந்து கொள்ள முடியாதவர்களை எல்லாம் நட்பு எனச் சொல்ல வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.

நமது சந்தோஷத்தை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அறிமுகம் மட்டும் போதுமானது. ஆனால் நமது துன்பத்தை, பிரச்சினைகளை பகிர உண்மையான நட்பு அவசியமாகிறது நமக்கு. எனக்கு எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள் எனச் சொல்லிக் கொள்வதை விட, என்னை முழுமையாக ஏற்றுக் கொண்ட நண்பர்கள் இத்தனை பேர் என்று எண்ணிக்கையில் சொல்வது சாலச் சிறந்தது.

பள்ளியில் ஆயிரம் பேர் உடன் படித்திருக்கலாம். அவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆகி விடார். நட்பாக பழகாதவர்களை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உடன் படித்தவர் என்று அறிமுகம் செய்யுங்கள். இதே தான் கல்லூரியில் உடன் படித்தவர்களுக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் அல்லாதோரை உடன் பணிபுரிபவர் என்றே பிறருக்கு அறிமுகம் செய்யுங்கள். நண்பர் அல்லாதோரை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உங்களுக்கு அவர் எப்படி அறிமுகம் ஆனார் என்று சொல்வது தான் சாலச் சிறந்ததே அன்றி, நட்பு என்ற ஒற்றை வட்டத்திற்குள் அனைவரையும் அடைப்பது சரியாகாது.

ஒரு கணம் கண்ணை மூடிச் சிந்தியுங்கள். உங்களது சுக துக்கங்களை எந்தவித தயக்கமும் இன்றி பகிரக் கூடிய ந (ண்)பர்கள் எத்தனை பேர் என்று. பிறகு முடிவெடுங்கள் நட்பென்று சொல்லும் எல்லாம் நட்பு தானா என்று….

Thanks: http://www.atheetham.com/?p=5091

Saturday, June 1, 2013

வறட்டு கௌரவம்

கௌரவம் தெரியும். வறட்டு கௌரவம் தெரியுங்களா. எல்லோரும் இந்த வறட்டு கௌரவத்தைப் பத்தி ஓரளவு தெரிஞ்சு வச்சிருந்தாலும் தனக்குன்னு வரும் போது மறந்துடறோம். என்னையும் சேர்த்து எல்லோருமே ஏதாவது ஒரு சமயத்தில் இந்த வறட்டு கௌரவத்தைப் பார்க்காத மனுஷன்னு யாரும் இருக்குறதா எனக்குத் தெரியலை...

சேச்சே, நான் எல்லாம் அப்படி இல்லைப்பா... இந்த வறட்டு கௌரவம், போலி கௌரவத்தோட எல்லாம் நான் இல்லைப்பா அப்படின்னு சொல்றீங்களா... செத்த நேரம் அப்படியே முழுசா இந்த பதிவை படிச்சுடுங்க...

முதல்ல நாம வறட்டு கௌரவத்தோட இருக்குறமா இல்லையானு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னால வறட்டு கௌரவம் அப்படின்னா என்னனு தெரிஞ்சுக்கலாம். உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள முடியாமல், நிஜத்தை நிஜமாக ஒப்புக் கொள்ள முடியாமல் நம்மைத் தடுக்கும் உணர்வு தான் இந்த வறட்டு கௌரவம்.

உள்ளதை உள்ளபடி ஏத்துக்குறது அப்படின்னா என்னனு கேட்குறீங்களா... காலையில் பல் தெய்க்குறதுல ஆரம்பிச்சு படுக்கப போற வரைக்கும் ஆயிரத்தெட்டு உதாரணம் சொல்லலாம்.. அப்படி நாம வறட்டு கௌரவம் பார்க்கும் சில விஷயங்கள் இதோ...

என்னது பல் விளக்க பேஸ்ட் இல்லையா... பேஸ்ட் கூட வாங்கி வைக்காம வீட்ல எல்லாம் அப்படி என்ன வெட்டி முறிக்குற வேலை செய்றீங்க... இப்படி சில பேர் காலையிலேயே சாமியாடுவாங்க... பேஸ்ட் இல்லைன்றதுக்கு அர்த்தம் அவர் உபயோகப்படுத்தும் பிராண்ட் பேஸ்ட் இல்லைன்றதாவும் இருக்கலாம். ஏன்யா, தண்ணியில ஆரம்பிச்சு செங்கல் தூள், சாம்பல், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி பல்பொடி இப்படி பலதை வைச்சு பல் தேய்ச்சது தானே நம்ம முன்னோர் இனம். இப்ப பிராண்டட் பேஸ்ட் இல்லைன்னா குடியா முழுகிடும்... இப்படியே சோப்பு, சீப்பு, டாய்லெட், போட்டுக்குற சட்டை இப்படி எல்லாத்துக்கும் சொல்லிட்டுப் போகலாம்...

இப்படி எல்லாம் நான் செய்றதில்லைப்பா அப்படின்னு இன்னும் சொல்லுறவங்க அடுத்து வாங்க...

அடுத்தது என்ன பயணம் தான்... எங்க வெளியே போகனும்னாலும் வண்டி வேணும்னு சொல்றவங்க... வண்டி கூட தனக்கு விருப்பமானதா இருக்கணும். தப்பித் தவறி பேருந்துல இவங்க ஏறிட்டாலும் பக்கத்துல இருக்குறவங்களை இவங்க பார்க்குற பார்வை இருக்கே... எப்பா, ஆண்டான் அடிமைத்தனம் தோத்துடும் போங்க... என்னோட தகுதிக்கு நான் சேர் ஆட்டோவுல வர்றதா... ஸ்லீப்பர் கோச்தானா, ஏசி இல்லையா... ஏன் அல்ட்ரா டீலக்ஸ்ல புக் செஞ்சிருக்கலாமே இப்படி பல ரகமா பயணத்துல வறட்டு கௌரவம் பார்க்குறவங்க இருக்காங்க...

அப்புறம் ஆபிஸ்ல உட்கார்ர இடத்துல கூட சிலர் வறட்டு கௌரவம் பார்ப்பாங்க... என்னோட கேடர். ரேங்க் தான அவனும்... அவனுக்கு மட்டும் ஏன் தனி ரூம்... எனக்கு ஏன் இல்லை அப்படின்னோ... என்னோட ரேஞ்சுக்கு எனக்கு தனி ரூம் இல்லைனா ஐ பீல் அன்கம்பர்டபில்யா... அப்படின்னு சொல்றவங்களையும் பார்க்கும் போது அப்படியே மூக்குல நச்சுனு குத்தலாம் போலத் தோணும்...

சாப்பாடு... பசிக்கு வயத்தை நிரப்ப எதாச்சும் சாப்பிடுடான்னா அதை விட்டுட்டு டீசன்சி மெயிண்டெயின் செய்றேன்னு சில பேரு ஸ்பூன்ல சாப்பிடத் தெரியாம நுனி நாக்குல நாலு வாய் சாப்டுட்டு, ஐ ஆம் டேன் பா... ஐ ஆம் இன் டயட் யூ நோ... அப்படின்னு பீலா வுட்டுட்டு கொலை பசியோட ஆபிஸ்ல உட்கார்ந்திருந்துட்டு வீட்டுக்குப் போனதும் கைல கெடைச்சதை எல்லாம் வாயில போட்டுக்குறதைப் பார்க்கும் போது... டே, இந்த பொழப்புக்கு அப்படின்னு ஏதாச்சும் திட்டனும் போல இருக்கும்...

அடுத்து, உறக்கம்... ஏசியில பொறந்து வளர்ந்த மாதிரி, தூங்க ஏசி ரூம் இல்லையா, கட்டில் இல்லையா, பெட் இல்லையா அப்படின்னு ஆரம்பிச்சு மொஸ்கிட்டோ லிக்விட் இல்லையா, கையில் தானா அப்படின்னு சொல்லும் போது, டேய், டேய் டேய் கட்டாந்தரையில வேப்பிலை புகையைப் போட்டு உட்டுட்டு படுத்து தூங்குனவங்க வழியில வந்துட்டு ஏதோ வெள்ளைக்காரன் ஊருல பொறந்தாப்புல பேசுறியேடா அப்படின்னு பலதும் கேட்கத் தோணும்... ஹ்ம்ம் என்ன செய்றது...

உண்மையிலேயே மேல சொன்ன மாதிரி உள்ளதை உள்ளபடி எடுத்துகிட்டு வாழாம வெட்டியா பேசுறது மட்டும் தான் நாம எல்லாம் வறட்டு கௌரவம்னு நினைச்சுக்கிட்டிருக்கோம்... அதனால பெரும்பாலும் நாம இதை தவிர்த்துடுறோம்...

ஆனா இதை எல்லாம் விட இன்னொரு விஷயம் இருக்கு வறட்டு கௌரவமா... அது நிஜத்தை நிஜமா ஒப்புக்க மறுக்குறது...

அது என்ன நிஜத்தை நிஜமா ஒத்துக்குறதுண்றீங்களா. நாம் அன்றாடம் செய்யும் பல காரியங்களில் நம்மையே அறியாமல் சில தவறுகளைச் செய்வோம். ஆனால் அந்த தவறை பிறர் முன் ஒப்புக் கொள்ள மறுப்போம். உப்பு சப்பில்லாத விஷயமே ஆனாலும் நாம சரின்னு சொன்ன தப்பான ஒரு விஷயத்தை நமக்கும் தப்புன்னு தெரிஞ்ச பிறகும் ஒத்துக்கிட மாட்டோம்... நாம் செய்த காரியத்தைச் சரியென்று நிரூபிக்க பொய் மேல் பொய்யாய் சொல்லுவதும், தாம் கொண்ட கருத்து தவறென்று தெரிந்த பிறகும், அந்த தவறை பிறர் முன் ஒப்புக் கொள்ள மறுப்பதும் கூட வறட்டு கௌரவம் பார்ப்பது தான்...

இன்னும் சிலர் இதை நாசூக்கா செய்வாங்க... எப்படின்னு கேட்கறீங்களா... தான் செஞ்சது/தனது கருத்து தவறுன்னு தெரியாத வரைக்கும் வாய்கிழிய சண்டை போடுவாங்க... தவறுன்னு தெரிஞ்சுட்டாலோ அப்படியே சைலண்ட் ஆயிடுவாங்க... ஏன்னா இவங்க மனசாட்சி இவங்க தப்பான கருத்தை பேச விடாது... அவங்களோட வறட்டு கௌரவம் தன்னோட கருத்தை தப்புன்னு மத்தவங்க கிட்ட ஒத்துக்க விடாது...

இப்படி எல்லாம் எதுவும் இல்லாம, வறட்டு கௌரவமே பார்க்காம நான் வாழுறேன்னு யாராச்சும் இருந்தா உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக்குங்க... ஏன்னா இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம்  யாரும் உங்களை பாராட்ட மாட்டாங்க...

மேலாண்மை

நமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான விஷயங்களை நாம் கற்றுக் கொண்டாலும் நாம் அதனை எப்படி சேர்த்து வைக்கிறோம் என்பதிலேயே நமது வளர்ச்சி இருக்கிறது. இன்று நான் இங்கு பகிரப்போகும் நிகழ்வை நம்மில் பலரும் சந்தித்திருப்போம். சிலர் இந்த அனுபவத்தை அனுபவித்தவர்களாகவும், சிலர் இந்த அனுபவத்தைக் கொடுத்தவர்களாகவும் இருப்பர். நான் எனது அனுபவத்தை மட்டுமே சொல்ல விழைகிறேன். யாருக்கு எது தேவையோ அதனை எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த வாரத்தில் எனது சக ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு புதிய வேலையைக் கொடுத்தார். நான் அந்த வேலைக்கு புதிது எனத் தெரிந்தே அந்த வேலையைக் கொடுத்தார் என்னிலும் வயதில்/அனுபவத்தில் ஒன்றிரண்டு வருடங்கள் மூத்தவரான அந்த சக ஊழியர். அவர் அடுத்த நாள் விடுமுறை எடுக்கிறார் என்றாலும் வீட்டில் இருந்து நான் செய்து அனுப்பும் வேலையைக் கொண்டு அவர் தனது வேலையைத் தொடர்வதாகச் சொன்னார். அவர் கொடுத்த வேலையைக் குறிப்பெடுத்துக் கொண்டு அடுத்த நாள் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தேன்.

காலையில் அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்து அந்த வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தேன். மதிய உணவையும் இருந்த இடத்திலேயே சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடர்ந்தேன். மாலை நாலரை/ஐந்து மணி அளவில் எனக்கு வேலை கொடுத்தவர் அலுவலக தொலைபேசியில் அழைத்தார்.

வேலை முடிந்ததா எனக் கேட்டார்.

இன்னும் மூன்றில் ஒரு பங்கு வேலை மீதம் இருப்பதாகச் சொன்னேன்.

அதனைக் கேட்ட அவர், இந்த வேலையைத்தான் காலையில் இருந்து செய்கிறாயா அல்லது வேறு ஏதேனும் வேலையில் பாதி நேரத்தைச் செலவிட்டு இப்பொழுது தான் இதனை ஆரம்பிக்கிறாயா எனக் கேட்டார்.

நான் காலையில் இருந்து இந்த வேலையை மட்டுமே செய்வதாகச் சொன்னேன்.

என்னது.! இந்த வேலைக்கு இன்று ஒரு நாள் முழுவதும் எடுத்துக் கொண்டாயா??? இந்த வேலையை நான் இரண்டு மணி நேரத்தில் முடித்திருப்பேன். இதற்கு ஒரு நாளா??? சரி, வேலையை முடித்து விட்டு எனக்கு அனுப்பி வை. நான் இரவு சரி பார்த்து எனது வேலையைத் தொடர்கிறேன் எனச் சொன்னார்.

இரண்டு மணி நேரத்தில் அவராலேயே முடிக்க முடியும் என்றால் செய்து கொள்ள வேண்டியது தானே என்று சொல்ல எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், கோபத்தை விட வேலையைத் தெரிந்து கொள்வது தான் முக்கியம் என்று மறுபேச்சு பேசாமல் முடித்து அனுப்புவதாக மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்தேன். அந்த வேலையை முடித்து அனுப்ப இரவு ஏழரை ஆனது வேறு கதை.

எனது மனதை அரித்துக் கொண்டே இருந்த விஷயம், இரண்டு மணி நேரத்தில் முடித்திருப்பேன் இந்த வேலையை எனச் சொன்னது தான்... எனது கற்பனை, இரண்டு மணி நேரத்தில் இந்த வேலையை முடித்துக் காட்டுங்கள், நான் வேலையை விட்டே சென்று விடுகிறேன் எனச் சவால் விடலாமா என பல விதமான எண்ணம் ஓடியது. நிற்க.!

நான் குறிப்பிட்ட இந்த நபர் நாளை மேலாளர் போன்ற உயர் பதவிகளுக்குச் செல்லும் போது  அவருக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணிப் பார்த்தேன். மிகுந்த கவலை உண்டானது.

ஏன் என்று கேட்கிறீர்களா??? மேலாளராக இருப்பவர் தனது கீழ் உள்ளவர்களுக்கு வேலை தெரியாத போது அவர்களை ஊக்குவித்து அவர்களிடம் வேலை வாங்குதலே புத்திசாலித்தனமே ஒழிய, நான் இரண்டு மணி நேரத்தில் முடிப்பேன் என தற்பெருமை பேசுவது கண்டிப்பாக புதிதாக வேலை பார்ப்பவருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்கி அவரது வேலை பார்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். வேலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் புதிதாக வந்தவரின் திறமையும் முழு அளவில் வெளிவர விடாமல் பாதிப்பை உருவாக்கும்.

மேற்சொன்ன நபரின் மேலான்மை என்னைப் பொறுத்தவரை தவறானது என்றே சொல்வேன்.

இன்னொரு உதாரணம்.

நான் இங்கிலாந்துக்கு வர காரணமாய் இருந்த வேலை பற்றிய ஆய்வறிக்கை மே முதல் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டிய சூழல். நான் அடுத்து இரு வாரங்கள் இந்தியா வாசம் என்பதால் அவசர அவசரமாய் ஆய்வறிக்கைத் தயார் செய்து கொண்டிருந்தோம் நானும் எனது மேலாளரும். நான் ஆய்வு செய்து கொடுத்த ஒரு தகவல் அட்டவணையின் ஒரு இடத்திற்கான முடிவுகள் சரி வர இல்லையே என வருத்தப்பட்டுக் கொண்டு, முடிவுகளைச் சரி பார்த்தாயா எனக் கேட்டார். சரிபார்த்தேன், எதற்கும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கிறேன் எனச் சொல்லி எனது வேலையைச் சரிபார்த்தேன். பிழை ஏதும் இல்லை. பிறகு எதற்கும் இருக்கட்டுமே என நான் செய்த வேலைக்குத் தேவையான தகவல்களை ஆய்வு செய்தால் அதில் பிழை இருந்தது தெரிய வந்தது. பெங்களூருவில் இருக்கும் சக ஊழியர் செய்த தவறு அது. எனது காலின் கீழ் பூமி பந்து நழுவுவது போல இருந்தது. காரணம், அதனை அடிப்படையாக வைத்து நான் கிட்டத்தட்ட ஒரு மாதம் பல வேலைகளைச் செய்திருந்தேன்.

எனது மேலாளரின் முகத்திற்கு நேரே சென்று நடந்த தவறைச் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. ஏனெனில் நடைபெற்ற தவறு மிகவும் கேவலமான தவறு.

என்னுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சரிசெய்த தகவல்களைக் கொண்டு புதிதாக வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். ஒன்றரை நாளில் வேலையை முடித்து எனது மேலாளருக்கு நடந்த தவறுக்கு மன்னிப்போடு சரியான ஆய்வறிக்கையும் அனுப்பி வைத்தேன்.

எனது மேலாளர் எனது புதிய ஆய்வறிக்கை முடிவுகளைப் பார்த்து விட்டு எனக்கு அனுப்பிய மறுமொழி, "நான் ஒரு நாள் எழுதிய ஆய்வறிக்கை மொத்தம் வீன் என்றாலும் நீ இப்பொழுது கொடுத்துள்ள முடிவுகளே அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க ஏதுவானது. நமது கருத்துகளை தரமாக வைக்கவும் இந்த முடிவுகளே உறுதுணையாய் இருக்கும். நான் மனநிறைவுடன் இருக்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம். நான் எனது ஆய்வறிக்கையை மாற்றி விடுகிறேன். நன்றி" என்பதாகும்.

இந்த மறுமொழி எனக்கு எப்படி இருந்திருக்கும் என நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
எனது வயது ஒத்தது எனது மேலாளராக இருப்பவரின் அனுபவம்.

இவரிடம் இருக்கும் பக்குவத்தையும், கடந்த வாரம் எனக்கு வேலை கொடுத்த சக ஊழியரின் பக்குவத்தையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

நான் உயர் பதவிகளுக்குச் சென்றால் இவ்விருவரில் எவரின் மேலான்மை திறனை எனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

இதனை எழுதும் சமயம் நான் முன்பு பணி செய்த இடத்தில் எனது மனதில் பதித்துக் கொண்ட வாசகமும் நினைவுக்கு வருகிறது. அது, " தலைவன் என்பவன் தன்னை உயர்த்த விரும்புபவனாக இருக்க கூடாது, தன்னைச் சார்ந்தவர்களை உயர்த்தி அதன் மூலம் தான் உயர்பவனாக இருக்க வேண்டும்" என்பதாம்.

இவற்றை விடுங்கள். ஆமாம், நீங்கள் எப்படிப்பட்ட மேலாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்???

Tuesday, April 23, 2013

மதில் மேல்


உரசி விட்டு
ஒன்றுமறியாதவனாய் நிற்கிறான்...
கூட்டத்தினூடே.!

அருகருகே இருந்தவை
விலகி நிற்கின்றன

உரசலா.!!! விரிசலா.!!!

***********************************


கல்லெறிந்து விட்டு
காணாமல் போனான்...
காற்றாக.!

கண்ணாடித் தண்ணீர்
கடல் அலையாய்

கலங்குமா??? நிலைக்குமா???

***********************************


காதலிக்கிறீர்களா
கேட்டு விட்டு மறைந்தான்...
கணப்பொழுதில்.!

பிணைப்பில் இருந்தவை
பிரிவைத் தேடின

நட்பா... காதலா...


Friday, April 19, 2013

சிரிப்பான்


வெறுப்பை எழுத்தில் விலக்க சரியாய்
சிரிப்பான் எழுதி பழகு.

எதிர்வரும் வாதம் பதராய் உணர
சிரிப்பான் பதிலாய் இருத்து.

வார்த்தையின் பின்தொடர் வாதம் தவிர்க்க
சிரிப்பான் சிறந்த மொழி.

உறவினைப் பாழாக்கும் கோபமொழி நீங்க
சிரிப்பானை  உன்மொழி ஆக்கு.

நகைச்சுவை காண நகையாய் அதற்கு
சிரிப்பானைத் தந்து பழகு.

சிறுமையைக் கண்டு விலக நினைத்தால்
சிரிப்பானைக் கையில் எடு.

வளர்த்த விரும்பாத வாதமா? முற்றாய்
சிரிப்பானை போட்டு முடி.

தவிர்க்க விரும்பும் வாதமா? காட்டாய்
சிரிப்பான் அளித்து உணர்த்து.

சிரிப்பானின் வாயிலாய் எள்ளலைக் காட்ட
சிறுமையே நல்கும் அது.

சிரிப்பார்; சிரித்து திரிப்பார்; அவர்க்கு
சிரிப்பான் சிறந்த மொழி.

Tuesday, April 9, 2013

பனிப்பொழிவு


இதோ கொட்டிக் கொண்டிருக்கிறது
குளிர்காலப் பனிப்பொழிவு

வேலை நாள்தான்
ஆனால் விடுப்பு கொடுத்து விட்டார்கள்
அலுவலகத்தில்.

என்ன செய்ய?

இறுக்கி அணைத்து
சல்லாபித்திருக்க
மனைவி இன்னும் அமையவில்லை…

குளிருக்கு இதமாய்
ஆல்கஹாலைப் பருக
இன்னும் கற்றுக் கொண்டிருக்கவில்லை

உடன் பிறந்தவர்களுடனோ
நட்புகளுடனோ
பனியை வீசியெறிந்து விளையாட
நான் இந்த நாட்டுக்காரனில்லை…

சில காலம்
பணி நிமித்தமாய் கடல் கடந்த
வந்தேறிகளுள் ஒருவன்

வெப்பமூட்டப்பட்ட அறையில் நின்றவாறு
சாளரத்தின் வழியே வேடிக்கை பார்க்கிறேன்

துணையேதுமின்றி
ஓடியாட…
உறங்க…
வழியேதுமின்றி

பசிக்கு கத்தவும் வழியின்றி
ஒடுங்கிக் கொண்டு
பனிப்பொழிவை வெறித்துக் கொண்டிருக்கிறது அது….

என்னைப் போல.!


படத்துக்கு நன்றி: http://wuppenif.com/tag/nature/

பிரசுரித்தமைக்கு நன்றி : வல்லமை

Saturday, February 16, 2013

நூலைப் போல

நூலைப் போல..


முப்பது வருடங்களுக்கு முன்பு…

என்னங்க, உங்களைத்தான்… இங்க கொஞ்சம் வாங்களேன்.!

ஏன்டி, இப்படி ஊருக்கே கேட்குறாப்புல கத்துற.! வந்துட்டு தானே இருக்கேன். அதுக்குள்ள என்ன அவசரம்…

இங்க பாருங்க… உங்க பையன் என்ன காரியம் செஞ்சு வச்சிருக்கான்னு நீங்களே பாருங்க…

ஹி ஹி ஹி…

என்ன சிரிக்குறீங்க? நேத்து தான் பெட்ஷீட்டைத் துவைச்சுப் போட்டேன், தெரியுமா? குளிப்பாட்டி வந்து பெட்ல போட்டுட்டு அலமாரியில இருந்து துணி எடுத்து வந்து பார்க்குறேன், அதுக்குள்ள இப்படி பெட்ஷீட் புல்லா ஈரம் பண்ணி வைச்சிருக்கான்… உங்களுக்கு சிரிப்பா இருக்கா??? உங்களுக்கும் உங்க பையனுக்கும் என்ன வந்துச்சு… நான் ஒருத்தி சம்பளமில்லா வேலைக்காரி கிடைச்சிருக்கேனில்ல… நல்லா சிரிங்க…

ஏன்டி கத்தி கூப்பாடு போடுற… குழந்தைங்கன்னா அப்படித்தான்… இதுக்கா ஊருக்கே கேட்குறாப்புல கத்திட்டு இருக்க… சரி, நீ போ… போய் அடுப்படியைக் கவனி… நான் இவனுக்கு துணி மாத்திட்டு, பெட்ஷீட்டையும் மாத்தி வைக்குறேன்… போதுமா…

போதுமே.! உங்க புள்ளைய ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாதே… என் வாயை அடைச்சுடுவீங்களே. என்னமோ செய்யுங்க, நீங்களாச்சு உங்க புள்ளையாச்சு…

இன்று.!

ஏம்மா, இப்படி படுத்துற…. பக்கத்துல தானே பெட்பேன் இருக்கு. எடுத்து யூஸ் செய்யலாமில்லை…

(சற்று முனகலுடன்) எழுந்திரிச்சு எடுக்குறதுக்குள்ள இப்படி ஆயிடுச்சுடா…
மாசத்துக்கு எத்தனை பெட் தான் வாங்குறதோ… இதுக்கே நான் தனியா சம்பாதிக்கணும் போல…

என்ன ஆச்சுப்பா, ஐயையோ பெட்ல ஈரம் போயிட்டாளா… சரி சரி, நீ டென்ஷனாவாம ஆபிஸ் கிளம்பு… நான் சுத்தம் செஞ்சுடுறேன்…

போதும்பா… அம்மாவை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே. உடனே பரிஞ்சு பேச வந்துடுவீங்களே.! என்னமோ செஞ்சு தொலைங்க… நான் கிளம்புறேன். எல்லாம் என் தலையெழுத்து...

Thursday, January 17, 2013

அச்சாணி

அச்சாணி அல்லது கடையாணி. இதனை நாம் நமது வாழ்வில் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட அதைப்பற்றி கேள்வியாவது பட்டிருப்போம். தெரியாதவர்களுக்காக... அச்சாணி என்பது, மாட்டு வண்டியிலோ குதிரை வண்டியிலோ சக்கரம் வண்டியிலிருந்து கழன்று விடாமல் தாங்கிப் பிடிக்கும் ஆணி...

இந்த அச்சாணி பற்றி பேசுவதென்றால் நிறைய பேசலாம். முன்பெல்லாம் மாட்டு வண்டிகளில், மாட்டின் கழுத்துமணி தரும் தாளத்துக்கு ஜதி சேர்ப்பது போல இந்த அச்சாணியில் கட்டப்பட்டிருக்கும் மணியின் சத்தம் வருவதைக் கவனித்திருக்கலாம். மாட்டு வண்டியில் அதிகம் பயணப்படாதவன் என்றாலும் நானும் சிறுவயதில் சில முறை பயணம் செய்திருக்கிறேன்.
மாட்டுக்கு கழுத்து மணி இருப்பது சரி. இந்த அச்சாணிக்கு எதுக்கு மணி கட்டியிருக்காங்க. அழகுக்காகவான்னா, அழகுக்காக மட்டுமல்ல அச்சாணி கழன்று விழுந்து விட்டதா இல்லையா என அறிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கட்டுமே அப்படின்னு தான்...

அச்சாணி இல்லாத வண்டி அரை கெஜம் தாண்டாதும்பாங்க எங்க ஊருல... ஆனா இது உண்மையா.? முத்து படம் பார்த்திருப்பீங்க. அதுல வடிவேலு அச்சாணியைக் கழட்டி கையில வச்சுகிட்டு இருப்பாரு. வண்டி ஓடும். காருக்கு எதுக்கு அச்சாணி அப்படின்னு கேட்கவும் வண்டி குடை சாயவும் சரியா இருக்கும். இதுதான் அப்படின்னா அயன் படம் பார்த்திருந்தீங்கன்னா பிரபுவும் சூர்யாவும் வில்லனைப் பார்த்துட்டு திரும்புற கடைசிக் காட்சியில் வில்லன் பிரபுவிடம் லட்டுளை வச்சேன்னு பார்த்தியா நட்டுல வைச்செண்டானு, டயரை வண்டியுடன் பிணைத்திருக்கும் நட்டைக் கீழே போடுவார். அதே சமயம் கார் தடுமாறி விபத்துக்குள்ளாகி பிரபு மரணிப்பார். இந்த படத்தின் காட்சிகள் எல்லாம் என்ன சொல்ல வருது...

சின்ன வயதில் அப்பா தான் செய்த வயல் வேலைகளை பற்றி அடிக்கடி எங்களிடம் பேசுவார். அப்படித்தான் ஒருநாள், முத்து படத்தின் மேற்சொன்ன காட்சியைப் பார்த்து சிலாகிச்சு அவர் வாழ்வில் நடந்த நிகழ்வைப் பற்றி பேசினார்.

வயலில் இருந்து நெல்மூட்டைகளை மாட்டு வண்டியில் எடுத்துக் கொண்டு களத்துமேட்டுக்கு வந்திருக்கிறார் அப்பா... களத்து மேட்டில் மூட்டைகளை இறக்கிய பின் தான் கவனித்து இருக்கிறார், வண்டியில் அச்சாணி இல்லையென்று. எங்கு கழன்று விழுந்திருக்கும் என யோசித்தவாறு களத்து மேட்டில் இருந்து வண்டியை வீட்டுக்கு திருப்பலாம் எனத் திருப்பினால் வண்டி திரும்புவதற்குள்ளாகவே சக்கரம் கழன்று விழுந்து விட்டதாம்.
சரி என்று கழன்று விழுந்த அச்சாணியை வந்த வழியே தேடிச் சென்றால் அச்சாணி நெல் வயலில் மூட்டைகளை ஏற்றும் இடத்திலேயே விழுந்து கிடந்ததாம். அப்பாவுக்கு, அச்சாணி இல்லாமல் வண்டி குடை சாயாமல் எப்படி இந்த வயல் வெளிகளின் மேடு பள்ளத்தில் வந்தது என்ற ஆச்சர்யம் ஒன்றுமில்லையாம். ஏனென்றால் அச்சாணி இல்லையென்று நமக்கு தெரிந்த பிறகு மட்டுமே வண்டி அரை கெஜம் கூட தாண்டாது அப்படின்னு சொன்னார். மேலும், இதுதான் உண்மையும் கூட. நான் நிறைய நிகழ்வுகளை இப்படி கண்ணால் பார்த்திருக்கிறேன் எனச் சொன்னார்.

இது எதேச்சையாக நடக்கும் நிகழ்வா, இதற்கு காரணம் என்ன? இதையெல்லாம் ஆராயும் எண்ணம் நமக்கில்லை.

ஆனால் நமது வாழ்க்கையின் தத்துவம் இந்த அச்சாணியில் அடங்கி இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். நமது வாழ்க்கை என்னும் வண்டி ஓட பலவித அச்சாணிகள் அவசியமாக இருக்கிறது. அதில் சில அச்சாணிகள் நம்மை அறியாமல் கழன்று விழும் பொழுது வாழ்க்கை என்னும் வண்டியில் சேதம் ஏற்படுவதில்லை. ஆனால், ஏதாவதொரு அச்சாணியை இழந்து நிற்கிறோம் என நாம் உணரும் பொழுது அது நம்மை மனதளவில் கண்டிப்பாக சேதப்படுத்தி விடுகிறது. அச்சாணியின் இருப்பை அறிந்து கொள்ள அச்சாணிக்கு மணி கட்டுவது போல நமது வாழ்க்கையின் அச்சாணிகளுக்கும் நாம் ஒரு மணியைக் கட்டி விட்டு ஜாக்கிரதையாக இருந்தால் நமது மனதின் சேதத்தை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்....

Wednesday, January 16, 2013

பரிசுச் சீட்டும் பழமொழியும் - அதீதம் கடைசிப்பக்கத்தில் வெளியானது

எனது சின்ன வயதில் எங்கள் வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் மளிகை கடைக்கு எதேச்சையாக நேற்று சென்றிருந்தேன். தொழில் போட்டி காரணமாக சிறிய இடத்திற்கு மாற்றலாகி இருந்த கடையில் எப்பொழுதும் போல கடைக்காரர் சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கையில் இரண்டு சிறுவர்கள் பொருட்கள் வாங்க கடைக்கு வந்தனர். ஒருவன் பத்து ரூபாய் தாளைக் கடைக்காரரிடம் கொடுத்து தக்காளி வாங்கி கொண்டிருந்தான். பக்கத்தில் இருப்பவன், டேய், எட்டு ரூபாய்க்கு மட்டும் தக்காளி வாங்குடா, ரெண்டு ரூபாய்க்கு பரிசுச்சீட்டு வாங்கலாம் என்றான்.

பரிசுச்சீட்டு பற்றி தெரியாதவர்களுக்காக…  பரிசுச்சீட்டு எனும் சீட்டில் ஒன்றிலிருந்து நூறு வரை சில எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். முன்னாட்களில் எண்களுக்கு பதிலாக ஜோக்கர்களும் சில சீட்டுகளில் இருக்கும். ஜோக்கர் வந்தால் பரிசு எதுவும் கிடையாது என்று அர்த்தம். ஆனால் இப்பொழுது வரும் பரிசுச் சீட்டுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு எண் கண்டிப்பாக இருக்கிறது.

குறிப்பிட்ட எண்களுக்கு குறிப்பிட்ட பரிசு என ஒரு பரிசு விளம்பரமும் இருக்கும். முதல் இருபத்தைந்து எண்களுக்கு நடிகர்களின் ஸ்டிக்கர்கள் அடுத்த இருபத்தைந்து எண்களுக்கு ஊக்கு போன்ற சிறிய சிறிய பரிசுகள் என  எல்லா சீட்டுக்கும் ஏதாவது ஒரு பரிசு இருக்கும்.

தக்காளி வாங்க வந்த சிறுவன், “போடா அம்மா திட்டுவாங்க” என்று சொல்லி விட்டு நகர முற்படுகையில் முன்னவன், “டேய், நான் கூட வீட்டுக்கு பொருள் வாங்கி போகும் பொது இப்படி தாண்டா ஒன்னு ரெண்டு பரிசுச்சீட்டு வாங்குவேன்… ” பரவாயில்லை வாங்குடா எனச் சொல்ல, தக்காளி வாங்க வந்த சிறுவன் பயந்து கொண்டு தக்காளி மட்டும் வாங்கியவாறு வீடு நோக்கி நகரத் தொடங்கினான்…

அந்த நிகழ்வைப் பார்த்ததும் என் மனது சொல்லிக் கொண்டது மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்கப் பார்க்குதுன்னு…

மெதுவாய் கடைக்காரரிடம் சொன்னேன்… அண்ணா, இந்த பயலோட அம்மாட்ட நீங்களாச்சும் மளிகை பொருட்கள் வாங்க கொடுக்கும் பணத்தில் பரிசுச்சீட்டு வாங்குறான்னு சொல்லலாமில்லைனு கேட்டேன்…

எங்கப்பா சொல்லுறது, கொடுக்குற பணத்துக்கு மளிகை சாமான் குறைவா ஏன் வருதுன்னு என்னைய வந்து கேட்டா தானே சொல்ல முடியும். அவங்க அம்மா இங்க வர்றதே இல்லை…. நானும் என் பொழப்பைப் பார்க்கனுமில்லைன்னாரு….

ம்ம்ம்…இப்படியே  நாங்கள் பேசிக் கொண்டிருக்க முன்பு வந்த சிறுவர்களில் பரிசுச்சீட்டு வாங்க சொன்ன சிறுவன் பத்து ரூபாய் தாளைக் கொடுத்து இரண்டு சீட்டுகள் வாங்கினான். இரண்டுக்கும் அவன் எதிர்பார்த்த பரிசு கிடைக்காமல் ஏதோ பரிசு விழ வருத்தத்துடன் நகர, நானும் என் மனதில், ” என்னதான் எண்ணையத் தடவிட்டு மண்ணுல புரண்டாலும் ஓட்டுறது தானே ஓட்டும்” எனச் சொல்லிக் கொண்டு எனது வீட்டுக்கு நகர்ந்தேன்…

நம்மால வேற என்ன செய்ய முடியும்… சரிதானுங்களே…

அதீதத்தில் படிக்க : http://www.atheetham.com/?p=3807

 

சாதாரணன் - 2

என்றும் எதிலும் தன தோல்வியை ஒத்துக் கொள்ளத் தயங்கும்/மறுக்கும் இணையப் புலி மனது, வீடியோ எடுக்காமல் போனால் என்ன? என்ன நடக்கிறது என்று பார்த்து வெறும் எழுத்துகளில் எழுதி வைப்போமே, என்று வேடிக்கைப் பார்க்க என்னை உந்தியது..


நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் அப்படி என்ன தான் செய்து கொண்டிருந்தார்கள்...

 சிலர் அந்த காலைப் பொழுதிலும் உறங்கிக் கொண்டு இருந்தார்கள்...

சிலர் கூட்டம் கூட்டமாய் அமர்ந்து ஊர் கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள்..
 
சிலர் தீப்பெட்டியின் பெட்டி பகுதி ஒட்டிக் கொண்டு இருந்தார்கள்(எங்கள் ஊரில் பல பேருக்கு இதுதான் சம்பளம் தரும் வேலை)...

சிலர் சுள்ளி பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள்...


சிலர் விறகு வெட்டிக் கொண்டு இருந்தார்கள்...

ஹ்ம்ம்... நாடு செழிக்கட்டும் என்று மனதுள் சொல்லியவாறு வீட்டுக்குள் நுழைந்தேன்...


இப்பொழுது ஒரு சிறிய விவரம்... கேள்விப்பட்டது மட்டுமே... இது பொய்யாகவும் இருக்கலாம்...

நாளொன்றுக்கு இவர்களுக்கு அரசு தரும் கூலி 130 ரூபாய்.


வேலை செய்யாமலேயே பணம் வழங்குவதற்காக ஒரு ஆளின் தினக் கூலியில் இருந்து இருபது ரூபாய்கள் குறைவாகவே அதாவது 110 ரூபாய்கள் மட்டுமே இவர்களுக்கு தரப்படுகிறதாம்....
 
இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஆண்டொன்றுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடியும்... ஆனால் சில இடங்களில், முதல் 100 நாள் வேலை செய்தவர் இன்னொரு பெயரில் மேலும் 100 நாட்களும் இதே மாதிரி வேலை செய்கிறார்களாம்.. அப்படி நடக்கும் இடங்களில் வேலை செய்பவருக்கு கூலி 70 மிச்சம் வேலை வழங்குபவருக்கு....


இப்படி நடந்தால் எப்படி தேசம் உருப்படும் என்று பலவாறாக யோசித்து பக்கம் பக்கமாக எனது இணையப் புலி மனம் எனது மனதில் தட்டச்சிக் கொண்டிருக்க, சாதாரனான இன்னொரு மனம் உனது அலுவலக வேலை நேரத்தில் எப்பொழுதும் அலுவலக வேலை மட்டும் தான் நீ பார்க்கிறாயா, அலுவலக நண்பர்களுடன் பேசுவது, காபி குடிக்க கேண்டீன் சென்று அரட்டை அடிப்பது, இணையத்தில் பொழுதைக் கழிப்பது, உன்னுடைய சொந்த வேலைகளைச் செய்வது என உனது தகுதிக்கு ஏற்றவாறு நீயும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் தானே. அலுவலகத்தின் நாலு சுவற்றுக்குள் நீ செய்யும் தவறுகள் உனக்கு நியாயம், அதே வேலையை பொதுவில் ஒருவன் செய்தால் உனது மனம் அரசாங்கத்தைச் சாடும்... உனக்கும் அவர்களில் ஒருவரைப் போல அரசாங்கம் சும்மா உட்கார பணம் கொடுத்தால் நீயும் கண்டிப்பாக போக மாட்டாய் என்பது என்ன நிச்சயம் என்று சாட்டையடியாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக மீண்டும் சாதாரனனிடம் தோற்று காணாமல் போனது இணையப் புலி மனம்...

சாதாரணன் - 1



எப்பொழுதும் போல வார விடுமுறைக்கு வீட்டிற்க்குச் சென்றிருந்தேன். சுமார் பத்து மணி அளவில் எனது வீட்டிற்கு அருகாமையில் ஆண், பெண் என சுமார் இருபது ஆட்கள் அமர்ந்து இருந்தனர். அதிலிருந்து சில ஆட்கள் மட்டும் ஒரு அரை மணி நேரம் அருகில் இருக்கும் கால்வாயில் இருந்து தூர் வாரிக் கொண்டிருந்தனர்.


ஊரில் அந்த வார நிகழ்வுகள், குடும்ப நிலவரம் இவற்றைப் பற்றி பேசும் காலைச் சிற்றுண்டியுடன் கூடிய குடும்ப மாநாடு அரங்கேறிக் கொண்டிருந்தது எனது வீட்டில். எதற்காக நம் வீட்டிற்கு அருகில் இத்தனை பேர் கூடி இருக்கிறார்கள். என்ன வேலை செய்கிறார்கள் இங்கு கேட்டபடி நான்....


மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்ய வந்தவர்கள் இவர்கள் - இது அப்பா...

இந்த வாரம் முழுக்க இப்படித்தான் வந்து வெறுமனே உட்கார்ந்து விட்டு பொழுதைக் கழித்து விட்டு போகிறார்கள். இப்படி சும்மா உட்கார்ந்திருக்க கவர்ன்மெண்டு காசு கொடுக்கும் பொது யாரு கஷ்டப்பட்டு விவசாய வேலை செய்ய வருவாங்க - சுய புலம்பலுடன் அம்மா...


டேய், நீதான் இணையத்துல அப்பப்ப எதுனா எழுதுறியே, இதை வீடியோ புடிச்சு இதைப் பத்தியும் எழுதேண்டா - அண்ணன்.

கண்டிப்பாக எழுதுகிறேன் - நான்.

எதுக்குப்பா ஊரு பொல்லாப்பு... யாருக்குத் தெரியாது இந்த திட்டம் இப்படி தான் வீணாப் போகுது அப்படின்னு. நீங்க ஏதாச்சும் எழுதி எதுக்கு பிரச்சினையை வேணும்னு இழுத்து தோளுல போட்டுக்குறீங்க.... பாசத்தில் அப்பா அம்மா இருவரும்....


தப்பு செய்யுற அவங்களே பயப்படாம தப்பு பண்ணும் பொது அவங்க செய்யுற தப்பை பொது வெளியில் எழுதப் போறதுக்கு நானு ஏன்பா பயப்படனும்... இணையப் புலியாய் நான்...

மாநாடு முடிந்தது... சாப்பிட்டக் கை கழுவியதும் நேரே என்னிடம் இருக்கும் ஒரு சிறிய கேமராவில் அந்நிகழ்வுகளை படம் பிடிக்க கேமராவைத் தேடி அதற்கு பேட்டரிகளை தயார் செய்து கொண்டிருந்தேன்.

என்னடா பண்ணுற, கேமராவைத் தூக்கி அது இருந்த இடத்துல வை. நான் நாளைக்கு ராஜஸ்தான் புறப்பட்டுடுவேன்... நீ நாளைக்கு பெங்களூர் போய்டுவ... வீட்டுல அப்பா அம்மா மட்டும் தான்... நீ எழுதுனதை யாராச்சும் பார்த்து நாளைக்கு வீட்டுக்கு வந்து கரைச்சல் பண்ணா என்ன பண்ணுவ... நாம வீட்டுப் பக்கம் இருந்தா பிரச்சினையை பார்த்துக்கலாம்... தேவை இல்லாம ஏன் அப்பா அம்மாவுக்கு பிரச்சினையை கொண்டு வந்து போடுவானேன்... - அதே அண்ணன்....


நாட்டை விட வீடு தான் முக்கியம்... இணையப் புலி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட இந்த முறையும் என்னுள் இருந்த சாதாரணனே வெற்றி பெற்றான்...

- தொடரும்.

Wednesday, January 9, 2013

வெண்பாவில் கற்கலாம் வெண்பா


வரவேற்பு பா:

பொழுதைக் கழிக்க பழுதின்றி வெண்பா
எழுதிப் பழகுவோம் வா.

பாடம்

பதத்தைப் பிரித்தே அசையை அறிதல்
முதல்வகுப் பாகும் அறி.

அசைகள் வகையினில் நேர்நிரை என்று
பெயரில் இரண்டாம் அறி.

குறில்தனித்தோ அன்றி குறிலுடன் ஒற்றோ
நெடில்தனித்தோ அன்றி நெடிலுடன் ஒற்றோ
வருதலைச் சொல்லிடுவோம் நேர்.

குறிலிணைந்தோ அன்றி குறிலிணைந்து ஒற்றோ 
குறில்நெடிலோ அன்றி குறில்நெடிலோடு ஒற்றோ
வருதலைச் சொல்வோம் நிரை.

ஈற்றடி முச்சீராய் ஏனைய(மற்றவை) நாற்சீராய்
பார்த்துநீ பாடல் அமை.

ஈற்றுச்சீர் தான்தவிர்த்து வெண்பாவில் சொற்களெலாம்
ஈரசையோ மூவசையோ கொண்டிருக்க வேண்டுமப்பா
கூற்றிதனை எண்ணத்தில் கொள்.

ஈரசை தன்னில் முடியும் அசையது
நேரசை என்றால் தொடர்தல் நிரையாம்
நிரையசை என்றால் தொடர்வது நேராம்
உரையிதை நெஞ்சில் நிறுத்து.

மூவசை யாக வரும்சொல் அனைத்தும்
நேரசைக் கொண்டு முடிந்து; தொடர்வதும்
நேரசைக் கொண்டென்று அறி.

நாள்;மலர் காசு பிறப்பிவ் வசையையொத்தே
வெண்பாவின் ஈற்று வரும்.

அடியைப் பொறுத்து குறள்;சிந்து அளவடி
பஃறொடை மற்றும் கலியென வெண்பா
வகைகளில் ஐந்தாம் அறி.

ஈரடி கொண்டே இருந்திடும் வெண்பா
குறளாம் பெயரில் அறி.

மூவடி கொண்டே இருந்திடும் வெண்பாவை
சிந்தியல் என்பர் அறி

நாலடி கொண்டே இருந்திடும் வெண்பா
அளவடி யாகும் அறி.

ஐமுதல் ஈரா றடிகளைக் கொண்டது
பஃறொடை யாகும் அறி.

ஈரா றடியினை வெண்பா கடக்க
கலியென் றழைப்பர் அறி.

இந்த பாக்களை, வெண்பா எழுத ஒரு ஆரம்பப் புள்ளியாக வைத்துக் கொள்ளலாம்... இவைகள் எல்லாம் வெண்பாவிற்கு அடிப்படை விதிகள் மட்டுமே. 

முழுமையான வெண்பா எழுத அடி எதுகை, பொழிப்பு மோனை என இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவற்றையும் மேலும் வெண்பா வகைகள், அவற்றுக்குண்டான விதிமுறைகள் ஆகியவற்றையும் இன்னொரு பதிவில் ஆரம்பித்து வெண்பா வடிவில் தர முயற்சி செய்கிறேன்...

Sunday, January 6, 2013

தோல்வி வெறி

//
தோல்வி மனிதனுக்கு வெறி மூட்டும்
வெறியில் மதி மாறும்
எதிரி அது சமயம் இடம் கண்டு இடிப்பான்
வெறி மேலும் வீங்கும்
நெறி கெட்டு அறம் விட்டு தடம் மாறி
படுகுழியில் வீழ்வான்... இல்லை
எதிரி வீழ வைப்பான்
//
.
மடிகணினியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது கர்ணன் பட வசனம்.

எத்தனை ஆழமான வார்த்தைகள். எந்த விஷயத்தில் ஆகட்டும், நமக்கு ஏற்படும் தோல்வி நம்முள் ஒரு வெறியை உருவாக்கி விட்டுத்தானே செல்கிறது. மனம் தடுமாறும் அந்த ஒரு நிமிட வெறியை எதிரி கண்டு கொண்டு இடித்து விடுவானானால் மேலும் அவ்வெறி கூடி நாம் இன்னது செய்கிறோம் என அறியாமலேயே படுகுழியில் வீழ்ந்திடுவோம். எதிரி நம்மை வீழ்த்தி இருப்பான்.

வெறி அடங்கி மதி தெளியும் பொழுது மீள முடியாத பழியைச் சேர்த்திருப்போம்.

அட, இதே கருத்தோடு ஏதோ வரிகள் தொலைக்காட்சியில் ஒலிக்கிறதே...

//
காசு பணமெல்லாம் கரைஞ்சா திரும்பும்
பேரு போனா திரும்பாது...
//

உண்மை தானே நமது தோல்வியின் வெறியில் நமது செயல்பாடுகள் காசு பணத்தையா கரைக்கப் போகிறது. பெயரைத்தானே.! ஒரு முறை பெயர் கெட்டு விட்டால் கெட்டுப் போனது தானே...

ஏனோ அப்பாவின் அறிவுரையும் இச்சமயம் நினைவில் வருகிறது...

//
மகனே.! நல்லவன்னு பேரு வாங்கறது கஷ்டமில்லை, அதைக் காப்பாத்தறது தான் கஷ்டம்... ஏன்னா, நீ செய்யும்/சொல்லும் ஒரு செயல்/சொல் கெட்டதா இருந்ததுனா அதுநாள் வரை நீ பாடுபட்டு சேர்த்து வைச்சிருந்த நல்லவன்ற பேரு அத்தோட காணாமப் போயிடும். அதுக்கு பிறகு நீ எப்பவுமே கெட்டவன் தான்...
//

ஹ்ம்ம்... இதுவும் உண்மை தானே... என்ன நான் சொல்றது...