Saturday, June 1, 2013

மேலாண்மை

நமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான விஷயங்களை நாம் கற்றுக் கொண்டாலும் நாம் அதனை எப்படி சேர்த்து வைக்கிறோம் என்பதிலேயே நமது வளர்ச்சி இருக்கிறது. இன்று நான் இங்கு பகிரப்போகும் நிகழ்வை நம்மில் பலரும் சந்தித்திருப்போம். சிலர் இந்த அனுபவத்தை அனுபவித்தவர்களாகவும், சிலர் இந்த அனுபவத்தைக் கொடுத்தவர்களாகவும் இருப்பர். நான் எனது அனுபவத்தை மட்டுமே சொல்ல விழைகிறேன். யாருக்கு எது தேவையோ அதனை எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த வாரத்தில் எனது சக ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு புதிய வேலையைக் கொடுத்தார். நான் அந்த வேலைக்கு புதிது எனத் தெரிந்தே அந்த வேலையைக் கொடுத்தார் என்னிலும் வயதில்/அனுபவத்தில் ஒன்றிரண்டு வருடங்கள் மூத்தவரான அந்த சக ஊழியர். அவர் அடுத்த நாள் விடுமுறை எடுக்கிறார் என்றாலும் வீட்டில் இருந்து நான் செய்து அனுப்பும் வேலையைக் கொண்டு அவர் தனது வேலையைத் தொடர்வதாகச் சொன்னார். அவர் கொடுத்த வேலையைக் குறிப்பெடுத்துக் கொண்டு அடுத்த நாள் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தேன்.

காலையில் அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்து அந்த வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தேன். மதிய உணவையும் இருந்த இடத்திலேயே சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடர்ந்தேன். மாலை நாலரை/ஐந்து மணி அளவில் எனக்கு வேலை கொடுத்தவர் அலுவலக தொலைபேசியில் அழைத்தார்.

வேலை முடிந்ததா எனக் கேட்டார்.

இன்னும் மூன்றில் ஒரு பங்கு வேலை மீதம் இருப்பதாகச் சொன்னேன்.

அதனைக் கேட்ட அவர், இந்த வேலையைத்தான் காலையில் இருந்து செய்கிறாயா அல்லது வேறு ஏதேனும் வேலையில் பாதி நேரத்தைச் செலவிட்டு இப்பொழுது தான் இதனை ஆரம்பிக்கிறாயா எனக் கேட்டார்.

நான் காலையில் இருந்து இந்த வேலையை மட்டுமே செய்வதாகச் சொன்னேன்.

என்னது.! இந்த வேலைக்கு இன்று ஒரு நாள் முழுவதும் எடுத்துக் கொண்டாயா??? இந்த வேலையை நான் இரண்டு மணி நேரத்தில் முடித்திருப்பேன். இதற்கு ஒரு நாளா??? சரி, வேலையை முடித்து விட்டு எனக்கு அனுப்பி வை. நான் இரவு சரி பார்த்து எனது வேலையைத் தொடர்கிறேன் எனச் சொன்னார்.

இரண்டு மணி நேரத்தில் அவராலேயே முடிக்க முடியும் என்றால் செய்து கொள்ள வேண்டியது தானே என்று சொல்ல எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், கோபத்தை விட வேலையைத் தெரிந்து கொள்வது தான் முக்கியம் என்று மறுபேச்சு பேசாமல் முடித்து அனுப்புவதாக மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்தேன். அந்த வேலையை முடித்து அனுப்ப இரவு ஏழரை ஆனது வேறு கதை.

எனது மனதை அரித்துக் கொண்டே இருந்த விஷயம், இரண்டு மணி நேரத்தில் முடித்திருப்பேன் இந்த வேலையை எனச் சொன்னது தான்... எனது கற்பனை, இரண்டு மணி நேரத்தில் இந்த வேலையை முடித்துக் காட்டுங்கள், நான் வேலையை விட்டே சென்று விடுகிறேன் எனச் சவால் விடலாமா என பல விதமான எண்ணம் ஓடியது. நிற்க.!

நான் குறிப்பிட்ட இந்த நபர் நாளை மேலாளர் போன்ற உயர் பதவிகளுக்குச் செல்லும் போது  அவருக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணிப் பார்த்தேன். மிகுந்த கவலை உண்டானது.

ஏன் என்று கேட்கிறீர்களா??? மேலாளராக இருப்பவர் தனது கீழ் உள்ளவர்களுக்கு வேலை தெரியாத போது அவர்களை ஊக்குவித்து அவர்களிடம் வேலை வாங்குதலே புத்திசாலித்தனமே ஒழிய, நான் இரண்டு மணி நேரத்தில் முடிப்பேன் என தற்பெருமை பேசுவது கண்டிப்பாக புதிதாக வேலை பார்ப்பவருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்கி அவரது வேலை பார்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். வேலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் புதிதாக வந்தவரின் திறமையும் முழு அளவில் வெளிவர விடாமல் பாதிப்பை உருவாக்கும்.

மேற்சொன்ன நபரின் மேலான்மை என்னைப் பொறுத்தவரை தவறானது என்றே சொல்வேன்.

இன்னொரு உதாரணம்.

நான் இங்கிலாந்துக்கு வர காரணமாய் இருந்த வேலை பற்றிய ஆய்வறிக்கை மே முதல் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டிய சூழல். நான் அடுத்து இரு வாரங்கள் இந்தியா வாசம் என்பதால் அவசர அவசரமாய் ஆய்வறிக்கைத் தயார் செய்து கொண்டிருந்தோம் நானும் எனது மேலாளரும். நான் ஆய்வு செய்து கொடுத்த ஒரு தகவல் அட்டவணையின் ஒரு இடத்திற்கான முடிவுகள் சரி வர இல்லையே என வருத்தப்பட்டுக் கொண்டு, முடிவுகளைச் சரி பார்த்தாயா எனக் கேட்டார். சரிபார்த்தேன், எதற்கும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கிறேன் எனச் சொல்லி எனது வேலையைச் சரிபார்த்தேன். பிழை ஏதும் இல்லை. பிறகு எதற்கும் இருக்கட்டுமே என நான் செய்த வேலைக்குத் தேவையான தகவல்களை ஆய்வு செய்தால் அதில் பிழை இருந்தது தெரிய வந்தது. பெங்களூருவில் இருக்கும் சக ஊழியர் செய்த தவறு அது. எனது காலின் கீழ் பூமி பந்து நழுவுவது போல இருந்தது. காரணம், அதனை அடிப்படையாக வைத்து நான் கிட்டத்தட்ட ஒரு மாதம் பல வேலைகளைச் செய்திருந்தேன்.

எனது மேலாளரின் முகத்திற்கு நேரே சென்று நடந்த தவறைச் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. ஏனெனில் நடைபெற்ற தவறு மிகவும் கேவலமான தவறு.

என்னுள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சரிசெய்த தகவல்களைக் கொண்டு புதிதாக வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். ஒன்றரை நாளில் வேலையை முடித்து எனது மேலாளருக்கு நடந்த தவறுக்கு மன்னிப்போடு சரியான ஆய்வறிக்கையும் அனுப்பி வைத்தேன்.

எனது மேலாளர் எனது புதிய ஆய்வறிக்கை முடிவுகளைப் பார்த்து விட்டு எனக்கு அனுப்பிய மறுமொழி, "நான் ஒரு நாள் எழுதிய ஆய்வறிக்கை மொத்தம் வீன் என்றாலும் நீ இப்பொழுது கொடுத்துள்ள முடிவுகளே அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க ஏதுவானது. நமது கருத்துகளை தரமாக வைக்கவும் இந்த முடிவுகளே உறுதுணையாய் இருக்கும். நான் மனநிறைவுடன் இருக்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம். நான் எனது ஆய்வறிக்கையை மாற்றி விடுகிறேன். நன்றி" என்பதாகும்.

இந்த மறுமொழி எனக்கு எப்படி இருந்திருக்கும் என நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
எனது வயது ஒத்தது எனது மேலாளராக இருப்பவரின் அனுபவம்.

இவரிடம் இருக்கும் பக்குவத்தையும், கடந்த வாரம் எனக்கு வேலை கொடுத்த சக ஊழியரின் பக்குவத்தையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

நான் உயர் பதவிகளுக்குச் சென்றால் இவ்விருவரில் எவரின் மேலான்மை திறனை எனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

இதனை எழுதும் சமயம் நான் முன்பு பணி செய்த இடத்தில் எனது மனதில் பதித்துக் கொண்ட வாசகமும் நினைவுக்கு வருகிறது. அது, " தலைவன் என்பவன் தன்னை உயர்த்த விரும்புபவனாக இருக்க கூடாது, தன்னைச் சார்ந்தவர்களை உயர்த்தி அதன் மூலம் தான் உயர்பவனாக இருக்க வேண்டும்" என்பதாம்.

இவற்றை விடுங்கள். ஆமாம், நீங்கள் எப்படிப்பட்ட மேலாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்???

No comments:

Post a Comment