Wednesday, December 19, 2012

ஆறறிவா அரை குறை அறிவா

நண்பர் ஒருவர் அறிவைப் பற்றி ஒரு மடல் போட்டிருந்தார். படித்ததும் எனக்கு மிகப் பெரும் சந்தேகம். அறிவு என்றால் என்ன? என்பதே அது. இதைப் பற்றி மேலும் சிந்திக்கும் போது அதைவிட இன்னொரு பெரிய கேள்வி என் முன்னே வந்து நின்றது. அது, ஆறறிவு படைத்தவன் மனிதன் என்று நாம் சொல்லிக் கொள்கிறோமே அந்த ஆறறிவுகள் என்ன? என்பதுதான்.

யோசித்து யோசித்துப் பார்த்தேன். அறிவு இருந்திருந்தால் தானே பதில் கிடைத்திருக்கும். இல்லாத ஒன்றை கொண்டு எதற்கு நாம் கஷ்டப்பட வேண்டும் என்று தேடுபொறியில் ஆறறிவு என்றால் என்ன எனத் தேடிப் பார்த்தேன். தேடுபொறி சொன்னது, ஆறறிவுகள் முறையே பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு மற்றும் பகுத்தறியும் அறிவு என்று.

ஓ.... இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா என்று மேலும் ஒவ்வொரு அறிவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். முதலில் வந்தது பார்க்கும் அறிவு. அதாவது பார்வைத் திறன் கொண்டு உணரப்படுவது அல்லவா. உண்மையில் சொல்லுங்கள் மற்ற எல்லா உயிர்களினும் பார்க்கும் திறன் மனிதனுக்குத் தான் மேம்பட்டு இருக்கிறதா. கண்டிப்பாக இல்லை தானே. ஏன், மனிதனுக்கு இயற்கையாக இருக்க வேண்டிய பார்வைத்திறனே சரியாக இல்லாமல் தானே நம்மில் பெரும்பாலும் கண்ணாடி என்னும் செயற்கைக் கண்ணைப் பொருத்திப் பார்க்கிறோம். கண்ணாடி பற்றி அறியாத மிருகங்கள் எல்லாமே கண்ணாடி இல்லாமலே நல்ல பார்வைத் திறனை கொண்டிருக்கிறதே... அப்படியானால் பார்வைத் திறன் என்னும் பார்வை அறிவு நம்மிடம் முழுமையாக இருக்கிறதா.... இல்லை அரை குறையாக இருக்கிறதா???

அடுத்தது கேட்கும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு தொடும் உணர்வு என ஒவ்வொன்றைப் பற்றியும் என்னுள் யோசித்த போது தாவர இனமோ, விலங்கினமோ எதுவோ ஒன்று மனிதனைக் காட்டிலும் இந்த அறிவுகளில் சிறந்தே விளங்கி வருகிறது. அப்படியானால் இந்த ஐந்து அறிவுகளிலும் மனிதன் மற்ற உயிர்களிடம் இருந்து அறிவு குறைவானவனாகத் தானே இருக்கிறான். அதாவது அரை குறை அறிவுடன் தானே இருக்கிறான்.

இப்பொழுது ஆறாவது அறிவான பகுத்தறிவுக்கு வருவோம். தாவரம்/விலங்குகளிடம் இருக்கும் ஏனைய ஐந்து அறிவுகளை உணர்ந்த மனிதனால் அவைகளிடம் பகுத்தறிவு இருக்கிறதா இல்லையா என உறுதியாக கூற முடியாததால் முடிவாய்ச் சொல்லி விட்டான் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு இருக்கிறது என்று. உண்மையில் இது சரியா...

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள் வீட்டில் நான் சிறு வயதாக இருக்கும் போது ஒரு பூனை வளர்த்து வந்தோம். சில சமயங்களில் அந்த பூனை வெளியே சென்று ஏதோ சில தாவரங்களைத் தின்று விட்டு வந்து கக்கி வைக்கும். எதற்காக அம்மா இவ்வாறு பூனை செய்கிறது என்று கேட்டால், அப்பூனைக்கு உடல் சுகமில்லாமல் இருந்திருக்கும். அதற்கான மருந்தைத் தான் எடுத்துக் கொண்டு இவ்வாறு கக்கி தனது உடலைச் சரி செய்து கொள்கிறது என்றார்கள். எனக்கு மிகப் பெரும் சந்தேகம். இந்த பூனை எங்கு சென்று மருத்துவம் படித்திருக்கும். எப்படி இதற்கு தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் மருத்துவ முறை தெரிந்து கொண்டது என்பது தான் அது.

இது மட்டுமா, எல்லா விலங்குகளுக்கும் விஷ செடிகள் எது நல்ல செடிகள் எது, எது தனக்கு நன்மை விளைவிப்பது எது தனக்கு தீமை விளைவிப்பது என நன்றாய் தெரிந்து வைத்திருக்கிறது. அப்படியானால் இது போன்று பகுத்து அறிந்து கொள்ளும் பக்குவத்தை பிற உயிர்கள் கொண்டுள்ளது எவ்வாறு? அப்படியானால் ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டுமில்லையா? பிற உயிர்களிடத்தும் இருக்கிறதா???

மனிதன் கொண்டிருப்பது ஆறறிவா இல்லை, அனைத்திலும் அரை குறை அறிவா?

எனக்கென்னவோ மனிதனிடத்து அரை குறை அறிவு இருப்பதாகவே படுகிறது... அரை குறை அறிவு தான் மனிதனுக்கு இருக்கிறது என்று நீங்களும் என்னுடன் பயணிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கான கேள்வி.

அரை குறை அறிவோடு இருக்கும் போதே இவ்வளவு ஆட்டம் போடும் நாம் ஆறறிவும் ஒழுங்காக கிடைக்கப் பெற்றிருந்தால் இன்னும் என்னென்ன செய்திருப்போம்...

அப்பப்பா.... நினைக்கவே பயமாய் இருக்கிறதே...!

Tuesday, November 20, 2012

பயணங்கள் முடிவதில்லை

பயணம் ஆரம்பமானது. ஆம் அன்றுதான் நான் என் தாயின் கருவறை விடுத்து அழுதவாறு தரையைத் தொட்டு வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தேன். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் எழுப்பினாலும் இனம் புரியாத பயத்தோடும், பயத்தை வெளிப்படுத்தும் வகை அறியாமலும் எனது பயணம் அழுகையுடன் ஆரம்பமானது. எனது தொடர்ந்த அழுகை, பசிக்காக இருக்குமோ என்று எனது தாய் எனக்கு தாய்ப்பாலைக் கொடுக்க என் பிஞ்சு உள்ளத்தில் ஆழமாய் ஒரு விஷயம் பதிந்தது. “அழுகை, நமது தேவை என்ன என்பதை நம்மைச் சார்ந்தவர்கள் அறிந்துக் கொண்டு அத்தேவையை நிறைவேற்றவே என்பதும் அழுகையே தேவையைத் தீர்க்கும் கர்ப்பத்தரு” என்பதுமாம் அது.
நாட்கள் வாரமாகி, வாரங்கள் மாதமாகி, மாதங்கள் சில வருடங்களாகும் வரை எனக்கு உண்மையில் அழுகை “காமதேனு”வாகவே காட்சி அளித்தது. காமதேனுவாக காட்சி அளித்த அழுகை ஒரு திருவிழாவின் போது, நான் வேண்டும் என்று அடம்பிடித்து அழுது கேட்ட சில பொருட்கள் கிடைக்காததால் எனக்கு காமதேனுவாகத் தெரியவில்லை. அழுகையின் மீதான நம்பிக்கை அவநம்பிக்கையானது. அன்று முதல் நான் எதற்காகவும், எந்த காரணத்திற்காகவும் அழுவதில்லை என்று உறுதி பூண்டேன்.
எனக்கு பள்ளிப்படிப்பின் பயணம் ஆரம்பமான காலம் அது. படிப்பில் சுமாராக இருந்ததால் எனது பெற்றோர்கள் எங்கள் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தத்தையும், அழுகையும் தரவில்லை, மாறாக என்னுள் முயற்சியும், போட்டி மனப்பான்மையுமே வளரத் தொடங்கியது. இந்த முயற்சியும் போட்டி மனப்பான்மையும் என்னை பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்தவனாக்கியது. எனது அறிவால் என்னை விஞ்ச யாருமில்லை என்ற அளவில் வளர்ந்த நான் எனது அறிவை மெய்ப்பிக்க என்னை ஒரு அலுவலகத்தில் இணைத்துக் கொண்டேன்.
எனது அறிவாற்றலால் சற்று தலைக்கணத்தோடு இருந்த எனக்கு பேரிடியாக அமைந்தது அலுவலக நிகழ்வுகள். எனது அறிவாற்றல் பொதுமக்களுக்கு பயன்படக்கூடியதாக இருந்த போதிலும், அலுவலகத்தினரால் எனது அறிவாற்றல் நிராகரிக்கப்பட்டது. நான் ஒவ்வொரு முறை என்னை நிரூபிக்க பெருமுயற்சி எடுத்த போதும் எனது மக்களுக்கான சேவையில் நாட்டமில்லாத அலுவலகம் என்னை மட்டம் தட்டிக் கொண்டே இருந்தது. நாளடைவில் நானும் அலுவலகத்துக்கு ஏற்ப என்னை எதிர்நோக்கி வரும் எத்தகைய பிரச்சினைகளையும் பக்குவமாக, நிதானமாக சமாளிக்கும் கலையைக் கற்றுக் கொண்டேன்.
எனது இனிமையான வாழ்க்கைக்கு, மேலும் இனிமை சேர்க்க நான் என் இல்வாழ்க்கைப் பயணத்தில் அடி எடுத்து வைத்தேன். அலுவலகம் கற்றுக் கொடுத்த பொறுமையும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறமையும் எனது இல்வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிக்க எனக்கு உதவியாக இருந்தது. அன்றுதான், நான் “முயற்சியையும், போட்டி மனப்பான்மையையும் விட சகிப்புத் தன்மையும், பிரச்சினைகளுக்கேற்ப சமயோசிதமாக நடந்து கொள்ளும் விதமுமே வாழ்க்கைக்கு அவசியமானது” என்பதை புரிந்து கொண்டேன்.
இல்வாழ்க்கையின் பயணத்தில் எனக்கு கிடைத்த அரிய பிள்ளைச் செல்வங்களும், என்னைப் போலவே அந்தந்த வயதின் போது அழுகையையும், போட்டி மனப்பான்மையும், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறமையையும் கொண்டிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த போதும், எனக்கு மனம் உறுத்தலாகவே இருந்தது. ஏனோ என்றுமில்லாமல் இன்று என்னைப் பெற்று வளர்க்க கஷ்டப்பட்ட பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்றும், நான் பள்ளியிலும் கல்லூரியிலும் முதலாவதாக வருவதற்கு தடையென நினைத்தவர்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிப்பும், அலுவலகத்தில் முன்னேறுவதற்காக தெரிந்தே பொது மக்களுக்கு செய்த துரோகத்திற்கு இறைவனிடம் பிரார்த்தனையும் செய்ய வேண்டுமென்று எண்ணிய போதும் என்னால் படுத்த இடத்தில் இருந்து எழ முடியவில்லை. என்னைச் சுற்றிலும் எனது உடலைக் கட்டிக் கதறும் உறவினர்களைக் கண்டு என்ன நடந்தது என்று யூகிக்க முடியாமல் மெல்ல மெல்ல காற்றோடு காற்றாக கலந்து கொண்டிருந்தேன் நான்.
நான் பிரிந்த அதே சமயம், எங்கொ ஒரு மூலையில் ஒரு குழந்தை தன் தாயின் கருவறை விடுத்து, அழுதவாறு தரையைத் தொட்டு வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்தது. யாருக்குத் தெரியும், அக்குழந்தை நானாகவும் இருக்கக் கூடும். பயணங்களுக்கு ஏது முடிவு.

Friday, November 2, 2012

பலகீனம்

பலம், பலகீனம் இரண்டுமே மனிதனுள் என்றும் உறைந்து கிடக்கும் ஒன்று. பலகீனத்தை வெளிகாட்டிக் கொள்ளாதவன் பலசாலி ஆகிறான். அப்படி என்றால் நாம் எப்பொழுதும் பலசாலியாகக் காட்டிக் கொள்ள நமது பலகீனத்தை வெளிக் காட்டாமல் இருக்க வேண்டும். நாம் வெளிகாட்டும் நமது உணர்வுகள் நமது பலகீனமா என்று நாம் எப்படி உணர்வது.
 
திரைப்படங்கள் பார்க்காதவர்கள் நம்மில் மிகவும் குறைவு என்பதால் திரைப்படத்தில் இருந்து இங்கு உதாரணம் சொல்வது மிகவும் பொருத்தமாக எளிதில் புரியக் கூடியதாக இருக்கும். திரைப்படத்தில் பார்த்தீர்களானால் ஒரு வன்புணர்வு காட்சியிலோ அல்லது பலம் குறைந்த ஒருவனை பலம் மிகுந்தவன் தாக்கும் போதோ பாதிப்புக்குள்ளாகுபவர்கள் தம் கையில் கிடைப்பதை எல்லாம் எதிராளியின் மீது வீசி எறிந்து தங்களைக் காத்துக் கொள்ள முனைவார்கள். நிச்சயமாய் தெரியும், தாங்கள் எரியும் சிறு கல்லோ, கண்ணாடிக் குடுவையோ அல்லது வேறு பொருட்களோ தன்னைக் காத்துக் கொள்ள உதவாது என்று.
 
இருந்தாலும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எறிவர். அவ்வாறில்லாமல் உணர்ச்சிகளைக் கொஞ்சம் அடக்கி, எதிராளியை எந்த இடத்தில் எப்படி தாக்கி நாம் தப்பிக்கலாம் என்று யோசித்தால் பிரச்சினைக்கு எளிதான தீர்வு கிடைக்கலாம். இதுவே பிரச்சினை வந்த பிறகு, அதற்கு எடுக்க வேண்டிய நல்ல தீர்வு. அதை விடுத்து கையில் அகப்பட்டதை எல்லாம் எறிவது நமது பலகீனத்தை நாமே அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காண்பிப்பது போலாகும்.
 
இந்த பலகீனங்களை நாம் நமது அன்றாட நிஜ அரசியல் நிகழ்வுகளிலும் இணைய அரசியல் நிகழ்வுகளிலும் கண்கூடாகக் காணலாம். மின்சாரப் பிரச்சினை, கூடங்குளப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என எல்லா பிரச்சினைகளிலும் சிலர் பிரச்சினைக்குண்டான உண்மையான காரணங்களை அறிந்து போராடினாலும் சிலர் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை எல்லாம் மனம் போன போக்கில் இப்பிரச்சினைகளுக்கான காரணங்களாக்கி உண்மையான போராட்டத்தை நீர்த்து விடச் செய்கிறார்கள். இவர்கள் இவ்வாறு எல்லா நிகழ்வுகளையும் தாங்கள் சார்ந்த கொள்கைக்கான காரணங்களாக்குவது என்பது கையில் கிடைத்த பொருளை எல்லாம் எறிந்து தன்னைக் காத்துக் கொள்ள முனையும் பலகீனமான திரைப்பட கருப்போருள்களைப் போன்றவர். இது அவர்கள் சார்ந்த போராட்டம் பலகீனமானது என்று தம்பட்டம் அடிப்பது போலாகுமே அன்றி போராட்டம் ஆகாது என்று எப்பொழுது உணரப் போகிறார்களோ, அப்பொழுதே போராட்டத்தின் உண்மையான ஆக்ரோஷம் வெளிப்படும்... அதுவரை இவர்கள், இவர்கள் சார்ந்தவர்களின் பிரச்சனைகளை வைத்து வெறும் அரசியல் மட்டுமே செய்ய இயலும்... வேறு எதுவும் இவர்களால் ஆகப் போவது இல்லை...
 
ஹ்ம்ம்... வெற்று அரசியல் நாடகங்கள் உண்மையான போராட்டங்களாக ஆகும் நாளை எதிர்பார்த்தபடி நான்...

Thursday, November 1, 2012

ஒன்னுமே புரியலை ஒலகத்துல


வர வர இந்த ஒலகத்துல ஒன்னுமே புரிய மாட்டேங்குதுங்க... அப்படி என்ன தான் புரியலைன்னு கேட்கறீங்களா... சொல்றேன் கேளுங்க...

வாழைப்பழத்துல ஊசி இறக்குறாப்புல சில விஷயங்களை நம்ம கூட இருக்குறவங்க செய்வாங்கங்க... அது புகழ்ச்சியா, இகழ்ச்சியானு நமக்கு சட்டுனு புரியவே புரியாதுங்க... அப்படி என்ன தான் பேசுறாங்கன்னு கேட்கறீங்களா... கேட்டுட்டு நீங்களாச்சும் சொல்லுங்க இது புகழ்ச்சியா இகழ்ச்சியானு...

ஒருநாள் எதேச்சையா ஒரு பாட்டு பாடிட்டு இருந்தேங்க. பக்கத்துல நான் பாடறதைக் கேட்ட ஒரு நண்பன், மச்சி, எப்படிடா உன்னால மட்டும் இப்படி முடியுது... இத்தனை நாள் உன்கூட இருந்திருக்கேன். உனக்கு பாடத் தெரியும்னு ஒரு வார்த்தை சொல்லலை... எத்தனை கச்சேரிடா மச்சி செஞ்சிருக்கனு கேட்டான்...

டேய், நான் ஏதோ சும்மா பொழுது போகாம பாடுவேன். அவ்வளவு தான். ஓவரா பில்டப் செய்யாதடா. நானெல்லாம் கச்சேரி பண்ணா கல்லால தான் அடிப்பாங்க. வாடா பேசாமன்னு சொன்னேங்க...

விட்டானா எமகாதகப் பய, டேய் என்னாடா சொல்லுற நீ... கண்ட கண்ட கழுதைக எல்லாம் பாடுறேன்ற பேர்ல கத்திட்டு இருக்கு... நீ பாடறதுக்கு என்னடான்னு என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க...

நான் அப்படியே ஆடிப் போயிட்டேன். கழுதைக கத்துற கூட்டத்துல நீயும் போய் கத்தேன்டானு சொல்ல வர்ரானா... இல்லை உண்மையாவே என்னைப் புகழ்றானா... ஒன்னுமே புரியலைங்க...

இதுக்கு பதிலை எனக்காக மட்டும் கேட்கலைங்க... உங்களுக்கும் சேர்த்து தான் கேட்கறேன். நீங்க ஒரு நாலு வரி கவிதை மாதிரி எழுதுனாலோ, இல்லை கதை, கட்டுரைன்னு எழுதிட்டாலோ, எதுவுமே இல்லை சும்மா ஒரு நாலு வார்த்தை நறுக்குனு பேசிட்டாலோ உங்களைச் சுத்தியும் இப்படி நாலு பேரு கேட்டிருப்பாங்க இல்லை... அதனால தான் கேட்குறேன்... இவங்க நம்மள புகழ்றாங்களா, இகழ்றாங்களா...

சொல்லுங்க... ஒன்னுமே தெரியாத பசங்க எல்லாம் இணையத்துல எவ்ளோ பில்டப்பு கொடுக்குதுங்க... நீங்க பதில் சொல்லாம போனா எப்படி... ஹலோ சார், எங்க ஓடுறீங்க... பதிலைச் சொல்லிட்டுப் போங்க... 

Friday, October 26, 2012

சுயநலம்

எப்பொழுதும் போல அறையில் தொலைக்காட்சிப் பெட்டியின் ஏதோ ஒரு அலைவரிசையில் பழைய திரைப்பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது...
 
//
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
//
என்ற கவிஞர் வாலியின் வரிகளை கேட்டதும் என்னையும் மீறி ஏதோ ஒன்று என்னைச் சிரிக்க வைத்தது.
 
கவிஞர் அவர்கள் இப்பாடல் வரிகளை எழுதிய காலத்தில் வேண்டுமானால் இவ்வரிகள் சரியானதாக இருந்திருக்கலாம்... ஆனால் இன்று நிலைமை இப்படித்தான் இருக்கிறதா...
 
பூமி மட்டுமல்ல பூமியின் மேல் ஓடும் நீரையும் மனிதன் தன சுயநலத்திற்காக இன்று பிரித்து வைத்து வேடிக்கைப் பார்க்கிறான்... இதே நிலை தொடர்ந்தால் காற்றையும், வானத்தையும் நெருப்பையும் கூட மனிதன் பிரித்து விடுவானோ என்ற அச்சம் எனக்குள் எழத் தொடங்கி விட்டது...
 
அதே சமயம், பஞ்சபூதங்களும் மானுடர் எவர்க்கும் சொந்தம் என்று உணராது சுயநலத்தோடு மனிதன் தன்னுள் அவற்றை அடைத்து வைக்க பார்க்கும் இந்த பைத்தியக்காரத்தனத்தை எண்ணிப் பார்க்கையிலே அச்சத்தையும் மீறி சிரிப்பு வந்து தொலைகிறது...
 
பெரும் பூமியை ஒருவன் அடக்கி ஆண்டாலும் அவன் இறந்த பின் அவனுக்கு கிடைப்பது என்னவோ ஆறடி மண் தான்... அந்த ஆறடி மண்ணும் அவனுக்கு சொந்தமில்லை. அந்த மண்ணுக்கு தான் இவன் உணவாகிறான்.
 
ஒருவன், தன்னிடம் இருக்கும் நீரைத் தர மறுத்து தன்னிடமே தண்ணீரை சேமித்து வைக்க எண்ணினாலும் தலைக்கு மேலே தண்ணீர் போனால் அந்த தண்ணீரிலேயே அவன் முழுகி உயிர் விட வேண்டியது தான்...
 
உயிர் போகும் தருவாயில் இதனை உணர்ந்து பயன் என்ன? இருந்தும் நம்மில் பலர் " செத்த பின் பாலை ஊற்றுவேன், ஆனால் தாகத்திற்கு தண்ணீர் தர மாட்டேன்" என்று தானே வாழ்ந்து வருகிறோம்...
 
ஈகைத் திருநாளான இன்றைய நன்னாளிலாவது இதனைச் சிந்தித்து பார்த்து, நம்மிடம் இருப்பதை முடிந்த அளவு பிறருக்கு கொடுத்து நாமும் மகிழ்வுடன் இருந்து பிறருக்கும் மகிழ்ச்சி தர எத்தநிப்போம் ...
 
இதுவும் இல்லையா, தர்மம் தலைகாக்கும் என்னும் சுயநலம் கொண்டேனும் பிறருக்கு கொடுத்து வாழ்வோம்.
 
இதுவும் இல்லையா, கொடுத்து வாழவில்லை என்றாலும் பிறரைக் கெடுத்து நாம் நமது சுயநலத்தைப் பேணாதிருப்போம்.
 
இருப்போமா..?

Thursday, October 25, 2012

அழுக்கு

மாடு வளர்ப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா... பார்த்திருந்தால் நான் சொல்வது உங்களுக்கு எளிதில் புரியும். மாடுகளை மண் தொழுவத்தில் சில வீடுகளில் கட்டி வைத்திருப்பர். இந்த மண் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாடுகளை பொங்கல் அன்றோ அல்லது சில விசேஷ தினங்களிலோ குளிப்பாட்டுவர். அவ்வாறு மாடுகளை குளிப்பாட்டும் போது அந்த மாடுகளின் மேல் இருக்கும் சாணி, கோமியம் கலந்த மண் முதலான அழுக்குகள் அனைத்தும் சுத்தமாகத் தேய்த்து போகும்படி சுத்தமாக குளிப்பாட்டுவர். அவ்வாறு குளிப்பாட்டி முடித்து மாடுகளைத் திரும்ப தொழுவத்திற்கு அழைத்துச் செல்லும் போது மாடுகள் வழி நெடுகும் ஏதாவது புற்போரிலோ அல்லது மரத்திலோ தன்னை உரசித் தேய்த்தவாறு செல்லும். இது அந்த மாடுகளின் மீதிருந்த அழுக்குகள் நீங்கியதால் அவற்றுக்கு ஏற்படும் தினவு தரும் தொல்லை. மாடுகள் தினவு தரும் தொல்லையைச் சற்று பொறுத்துக் கொண்டால் சுத்தமாக இருக்க முடியும். ஆனால் தினவு தரும் தொல்லையைத் தாங்காமல் குளிப்பாட்டிய ஈரம் காயாத போதே மண்ணிலும் அழுக்கிலும் புரண்டால் குளிக்கும் முன் இருந்த அழுக்கைக் காட்டிலும் குளித்த பின் அதிக அழுக்குடையதாக அந்த மாடு ஆகி விடும்.
 
இது போலத்தான் மனிதர்களாகிய நாமும். நம்மிடையே இருக்கும் தீய பழக்கங்களான மன அழுக்குகளை விட்டொழிக்கும் போது மன அழுக்குகள் நீங்கியதைத் தாங்காமல் மனமானது மீண்டும் அழுக்குகளை நாடிச் செல்லும். அவ்வாறு மனம் மீண்டும் அழுக்குகளை நாடிச் செல்லும் பொழுது மனதைக் கட்டுபடுத்த நாம் நற்பேருகளைப் பெறுவோம். அன்றி மனத்தைக் கட்டுபடுத்தாமல் மீண்டும் அழுக்கை நோக்கி நாம் செல்வோமானால் நம்மை அது பேரழிவிற்கு இட்டுச் செல்லும்.
 
தீதோன்றை விட்டுவிட மீண்டுமதை தீண்டாதே
தீண்ட;வரும் மீளாப் பழி.

Wednesday, October 24, 2012

தாய்மொழி

கடந்த சனிக்கிழமை திருப்பதி சென்றிருந்தேன். பெருமாளின் தரிசனத்துக்காக அறைகளில் அடைக்கப்பட்டிருந்த நான் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தவாறு பொழுது போக்கி கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் சில குழுந்தைகள் குழுமமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே பேசிக் கொண்டிருந்ததில் இருந்து உறவினர்கள் என்று தெரிந்து கொண்டேன்... அதில் ஒரு குழந்தையைப் பார்க்கும் போது நான் சிறுவயதில் திருப்பதிக்கு சென்றிருந்த பொது நடந்து கொண்ட விதத்தை எனக்கே மறுஒளிபரப்பு செய்வது போல இருந்தது அந்நிகழ்வு. என்ன, சிறு சிறு வித்தியாசங்கள். நான் ஆண், அந்த குழந்தை பெண். நான் தமிழ் பேசுபவனாக இருந்தேன் அன்று இந்த குழந்தை தெலுங்கு பேசுபவராக இருக்கிறார். அவ்வளவே...
 
நடந்தது என்ன எனக் கேட்கிறீர்களா? இதுதான் நடந்தது. குழுமமாக இருந்த குழந்தைகள் அனைவரும் உறவினர்களாக இருந்த போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகுப்பில், ஒவ்வொரு மொழியின் வாயிலாக தங்கள் பள்ளிப்படிப்பைப் படிப்பவர்களாக இருக்கிறார்கள் போலும். சில குழந்தைகள் தெலுங்கு வழியாக படிப்பவர்களாகவும் சில குழந்தைகள் ஆங்கிலம் வழியாக படிப்பவர்களாகவும் இருந்ததை அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து அறிந்து கொண்டேன்...
 
அந்த குழந்தைகளுக்கு இடையே நடந்த விளையாட்டு இதுதான். விளையாட்டுக்கு நடுவராக அந்த குழந்தைகளின் தாய்களில் ஒருவர் இருந்தார். குழந்தைகளில் ஒரு குழந்தை பெருக்கல் வாய்ப்பாடிலிருந்து ஒரு பெருக்கல் கேள்வியை முன்வைக்க அதற்கு மற்ற குழந்தைகள் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு குழந்தை மட்டும் மிகவும் வேகமாக பதிலைச் சொல்லி விட்டு, எனது பதில் சரிதான் என்ன பந்தயம் எனக் கேட்டவாறு இருந்தது...மெல்லிய புன்முறுவலுடன் அடுத்து என்ன நடக்கிறது எனப் பார்க்கலானேன்.
 
இந்த விளையாட்டு ஒரு புறமிருக்க நடுவராயிருந்த அந்த தாய், குழந்தைகளைப் பார்த்து சரி ஒவ்வொருவராக பெருக்கல் வாய்ப்பாடு சொல்லுங்கள் எனக் கேட்கலானார். ஒவ்வொரு குழந்தையாக பெருக்கல் வாய்ப்பாடு சொல்லிக் கொண்டிருந்தனர். சில குழந்தைகள் தெலுங்கிலும் சில குழந்தைகள் ஆங்கிலத்திலும் பெருக்கல் வாய்ப்பாடைச் சொல்ல நடுவராக இருந்த தாய் ஆங்கிலத்தில் வாய்ப்பாடு சொல்பவர்களை தெலுங்கில் வாய்ப்பாடு சொல்லக் கேட்க ஆங்கில வழியில் படித்த குழந்தைகள் தெலுங்கில் பெருக்கல் வாய்ப்பாடைச் சொல்ல முடியாமல் தவித்தார்கள். என்னதான் நாம் ஆங்கிலத்தில் படித்தாலும் நமது தாய்மொழியில் பெருக்கல் வாய்ப்பாடு கூட சொல்ல முடியாத அளவிற்கா நாம் நமது தாய் மொழியை மறப்பது என்று நொந்து கொண்டவாறு எப்படி பெருக்கல் வாய்ப்பாடை தெலுங்கில் பாடுவதேன்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
அங்கு கவனித்த விஷயங்கள்,
அந்த குழந்தைகளில் தாய் மொழியில் படித்த குழந்தைகள் வேகமாக பெருக்கல் வாய்ப்பாடை படித்தார்கள். ஆங்கில வழியில் படித்தவர்கள் ஆங்கில வழியில் பெருக்கல் வாய்ப்பாடை படிக்க கஷ்டப்பார்கள். நிச்சயம் கடினமாகத் தானே இருக்கும். ஏனென்றால் மனதில் தாய்மொழியில் இருப்பதை அக்குழந்தை தாய் மொழியில் சொல்லத் தெரியாமலேயே அதனை ஆங்கிலத்தில் மொழி மாற்றி ஒப்புவிக்கும் பொழுது நேரம் அதிகம் எடுக்கத் தானே செய்யும் .
 
இன்னொன்று ஆங்கில மோகத்தால், தமிழ் மட்டுமல்ல பிற மொழிகளும் பாதிப்புக்கு உள்ளான வண்ணம் இருக்கிறது ஆனால் பிற மொழி பேசும் பெற்றோர்கள், தமது குழந்தை ஆங்கிலம் பேசினாலும் தமது தாய் மொழியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தங்களது தாய்மொழியை குழந்தைகளுக்கு கற்பிக்கவும் செய்கிறார்கள்... தமிழ் பேசும் நாமும் நம்மைச் சூழ்ந்துள்ள அக்கம் பக்கத்தினரும் இதனைச் செய்கிறோமோ????
 

( சிறுவயதில் நானும், சுற்றத்தார் சூழ்ந்திருக்கும் போது தமிழில் பெருக்கல் வாய்ப்பாடை வேகமாகச் சொல்லியும், எண்களை வேகமாக எண்ணியும் என்னை அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு விளையாடிய விளையாட்டை, இன்று அந்த குழந்தைகள் குழுமத்தில் தெலுங்கு பேசும் ஒரு குழந்தை செய்வதைப் பார்த்ததும் என்னை நானே பார்ப்பதாக உணர்ந்தேன்... ஹ்ம்ம்...)

Sunday, October 14, 2012

இன்னுமா இருக்கிறது காதல்?


"காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல் "
 
என்றான் பாரதி. சாவினைத் தேடிக் கொள்ளத் தூண்டும் அளவிற்கு காதல் கொடுமையானது எனப் பாரதி சொல்லியிருக்கிறானே. அப்படி என்னதான் இருக்கிறது இந்த காதலில்? காதல் என்பது உண்மையில் இருக்கிறதா, இல்லையா? எனத் தேடி புரிந்தவற்றை வகையாகச் சொல்லவே இந்த கட்டுரை.
 
காதலைப் பற்றித் தெரிந்து கொள்ள பாரதிக்கு முன்னர் யாரேனும் சொல்லி இருக்கிறார்களா எனத் தேடித் பார்த்தால், இதிகாசங்கள், புராணங்கள், சங்க இலக்கியங்கள் என எல்லாமே காதலைத் தொட்டு சென்று இருப்பதைக் காண முடிந்தது. ஒவ்வொன்றையும் படிக்க படிக்க காதலில் இத்தனை வகையா என ஆச்சர்யமூட்டும் அளவிற்கு தகவல் குவிகிறது. எல்லாவற்றையும் எழுத நேரம் போதாதாகையால் காதலை பண்டைய நூல்கள் சொல்லிய விதத்தினை மேலோட்டமாக பார்த்து விட்டு நகரலாம்.
 
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்"  என்று ஒருவனுக்கு ஒருத்தி எனும் கொள்கையோடு இராமாயணம் சென்றால், இன்னொரு பக்கத்தில் மகாபாரதமோ, அர்ஜுனன் திரௌபதி, சுபத்திரை, உலூபி என பல மாதர்களுடன் காதல் புரிந்ததைச் சொல்கிறது. இராமாயணம், சூர்ப்பனகைக்கு ராமன் மேல் எழும் ஒரு தலைக் காதலைச் சொன்னால், மகாபாரதமும், ஊர்வசிக்கு அர்ஜுனன் மேல் எழும் ஒரு தலைக் காதலைச் சொல்லி இருக்கிறது. இதிகாசங்களைக் கடந்தும் பார்த்தோமானால் முத்தொள்ளாயிரத்தின் பல பாடல்கள் காதலையும், காதலின் பிரிவையும், காதலின் பிரிவால் வாடும் காதலர்க்கு வரும் பசலை நோயையும் எத்தனைப் பாங்காய்ச் சொல்லி இருக்கிறது. இவை மட்டுமல்ல இன்னும் எத்தனை எத்தனையோ இலக்கிய நூல்கள் எடுத்துக் கொண்டாலும் அவை அத்தனையிலும் காதல் இழையோடியிருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
 
பொருந்தும் காதலை மட்டுமல்ல பொருந்தாக் காதலையும் நமது முன்னோர்கள் கைக்கிளை, பெருந்திணை என வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது என்ன பொருந்தும் காதல், பொருந்தாக் காதல்? ஒத்த வயதுடைய ஒரு ஆடவனும் பெண்ணும் காதல் புரிந்தார்கள் என்றால் அது உலக வழக்கத்திற்கு பொருந்துவதாக இருப்பதைக் குறிப்பிட அதனைப் பொருந்தும் காதல் என்றும், ஒரு வயது முதிர்ந்த ஆடவன் இளம் பெண்ணைக் காதலிக்கிறான் என்றால் அதனை பொருந்தாக் காதல் (கைக்கிளை) எனவும், ஒரு வயது முதிர்ந்த பெண், இளம் ஆடவன் மேல் கொள்ளும் மையலுக்கு பொருந்தாக் காதல் ( பெருந்திணை) எனவும் குறிப்பிட்டு வந்துள்ளனர் நமது முன்னோர்கள்.
 
இப்படி பலதரப்பட்டதாக கருதப்பட்ட காதலானது இன்று எப்படி இருக்கிறது அல்லது இன்னுமும் காதல் இருக்கிறதா? என நடைமுறையை நோக்குங்கால் நம்மக்களும் பண்டைய குறிப்பேடுகளில் இருக்கும் காதலுக்கு சளைத்தவர்கள் அல்ல என்னும் சொல்லும் வகையில் பலதரப்பட்ட காதலோடு வாழ்ந்து வருகிறார்கள் என்பதே கூடு. கீழே விழுந்த பெண்ணின் கைக்குட்டையை அவளிடம் எடுத்துக் கொடுக்கும் ஆடவனுக்கு அவள் மேல் காதல் வந்து விடுகிறது. முகவரி கேட்கும் பெண்ணுக்கு முகவரி சொல்ல அப்பெண் மேல் காதல் வந்து விடுகிறது சில காளைகளுக்கு. ம்ம்ம், இன்னும் சொல்லப் போனால் ஒருவரை ஒருவர் பார்த்து சில காதல், ஒருவரை ஒருவர் பாராமல் தொலைபேசி, இணையம் வாயிலாக சில காதல்கள், தடுக்கி கீழே விழப் போனவளைத் தாங்கி பிடிக்க சில காதல்கள் என இன்றைய காலத்திலும் வகைவகையானக் காதல்கள். பண்டையக் காலத்தில் அகத்திணையில் குறிப்பிட்ட கைக்கிளை, பெருந்திணைக் காதல்களுக்கும் இன்று பஞ்சமில்லை.
 
பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை காதலில் காமம் கலந்திருந்தாலும் காதலும் காமமும் வெவ்வேறு என வகைப்படுத்துவது தான் எப்படி? உண்மையில் காதல் என்ற ஒன்று, இன்று இருக்கிறதா, அல்லது காமம் மட்டுமே காதலாக கருதப்படுகிறதா? இன்றைய நாளேடுகளில் காதலைப் பற்றிய செய்தி வராத நாளேடு கிடையாது எனலாம். நாடகக் கலையின் வளர்ச்சியாகக் கருதப்படும் சினிமாவோ அப்பப்பா, புது வகைக் காதல்களை நாள்தோறும் உற்பத்தி செய்த வண்ணம் இருக்கிறது. நாளேடுகளும், சினிமாவும் காதலை ஒரு காமத்திற்கான வடிகாலாக சித்தரித்து இன்றைய தலைமுறையினரை காமத்தையே காதல் என்று நம்பும் வகையில் செய்திருக்கிறது எனச் சொன்னாலும் அது மிகையாகாது. உண்மையில் காமம் மட்டும் தான் காதலா? இன்றைய தலைமுறையிடம் காதல் இருக்கிறதா...
 
இந்த கேள்விகளுக்கு பதிலாக, நாம் ஒன்றைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காமம், காதல் இரண்டும் வெவ்வேறு. காதலில் காமமும் இருக்கிறது என்பதுவே அது. காமத்தின் வடிகாலாக இருக்கும் ஒரு விலைமாதுவிடமோ/ விலைஆடவரிடமோ  ஒரு ஆண்/பெண் காமத்தை மட்டுமே பகிர முடியும். ஆனால் ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆணுக்கும் இடையேயான புரிந்துணர்வுடனும், ஒருவர் பிறர் நலம் விரும்புதலுடனும் கூடிய காமத்தில் மட்டுமே காதலை உணர முடியும். இத்தகைய காதலை இன்றையத் தலைமுறையினர் புரிந்து வைத்துள்ளார்களா என்பதை ஒரு சிறு விளக்கம் கூறி இக்கட்டுரையை முடித்து விடுகிறேன்.
 
கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இல்லை எனப் பதிலைச் சொல்பவர்களைப் பற்றிய கவலைத் தேவையில்லை நமக்கு. ஆனால் இருக்கிறார் எனச் சொல்பவர்கள் அக்கடவுளை எவ்வாறு காண்கின்றனர் என்பதைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகிறது. வெறும் கற்சிலைகளைக் கடவுள் என்று நினைப்பவனால் எப்படி கடவுளைக் காண முடியாதோ, கற்சிலைக்குள் இருக்கும் கடவுளைக் கண்டவன் எப்படி கடவுளைக் குறித்து பேருவகை அடைகிறானோ அப்படியே காதலும்... காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை எனப் பதில் சொல்பவர்களைப் பற்றிய கவலைத் தேவையில்லை நமக்கு. ஆனால் காதல் இருக்கிறது எனச் சொல்பவர்களுள் சிலர் காமத்தை மட்டுமே காதல் எனச் சொல்லி காதலைப் புரிந்து கொள்ளாமலும், காமத்தை தாண்டிய காதலை கண்டவர்கள் காதலால் பேருவகையும் அடைகிறார்கள் என்பதுமே நிஜம்.
 
எப்படி கற்சிலையை மட்டுமே கடவுளாக நம்புவதால் கடவுளுக்கு எந்த பழியும் சேரப் போவதில்லையோ, அப்படி காமத்தை மட்டுமே காதல் என நம்புபவர்களால் காதலுக்கும் எந்த பழியும் சேரப் போவதில்லை... நாம் நம்புகிறோமோ இல்லையோ, காதலும் கடவுளைப் போல நேற்று, இன்று நாளை என கால பாகுபாடின்றி என்றும் நிலைத்து நிற்கும்.
 
வாழ்க காதல்... வளர்க மனிதம்...

வீரம் - அதீதத்தில் கடைசிப்பக்கமாக வெளியான கட்டுரை


வீரம் என்பது, தன்னை எதிர்ப்பவரை அழிப்பதா? இல்லை, அடுத்தவரை தன் பலத்தால் அடக்குவதா? உண்மையில் வீரம் என்றால் என்ன? வீரன் என்பவன் யார்? கோபத்தில் ஒருவன் கத்தியால் நான்கைந்து நபர்களைக் கொன்று விட்டால் அவன் வீரனாகி விடுவானா? இல்லை தன் பலத்தால் பிறரை அடக்கி தன் ஆளுமையை அவர்கள் மீது நிலைநிறுத்திக் கொள்ளும் ஒருவன் வீரனாகி விடுவானா?


எது தான் வீரம்? யார்தான் வீரர்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேட விழைகையில் ஆய்விற்காக முன் நிற்பது போர் தானே. நமது நாட்டில் தான் ஆரம்பகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனை விதமான போர்கள் நடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு போரும் தன்னுள் எத்தனை வீரர்களையும், அவர்களது வீர கதையையும் கொண்டிருக்கிறது. அத்தனையும் ஆய்விற்காக எடுத்து விடை தேடுவது என்பது எளிதான காரியம் இல்லை. ஆதலால், சட்டென என் மனதில் தோன்றும் ஒரு போரின் இரண்டு நிகழ்வுகளை மட்டும் இங்கு காணலாம்.


மகாபாரதப் போர். போர் ஏறத்தாழ முடிந்து விட்டது. பதினெட்டாம் நாள் போரில், துரியோதனன் தன் தொடை முறிந்து உயிர் பிரியும் நிலையில் இருக்கிறான். அன்று இரவு சேனாதிபதியாக பொறுப்பேற்கும் அஸ்வத்தாமன் துரியோதனன் உயிர் பிரியும் முன்னே பாண்டவர்களை அழிப்பதாக சபதம் பூண்டு இரவோடு இரவாக பாண்டவரின் பாசறைச் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த இளம் பாண்டவர்களை, பாண்டவர்களே உறங்குகிறார்கள் என நினைத்து அவர்கள் தலை கொய்து துரியோதனனிடம் வந்து பாண்டவர்களை வீழ்த்தி விட்டதாக பெருமை கொள்கிறான். அந்த அர்த்த ஜாம இரவில் அஸ்வத்தாமன் கொண்டு வந்து போட்ட தலைகளை கூர்ந்து நோக்கிய துரியோதனன், இளம் பாண்டவர்களை கொன்றதற்காக அஸ்வத்தாமனைக் கடிந்தவாறு உயிர் துறக்கிறான்.


அஸ்வத்தாமனுக்கோ துரியோதனன் கடிந்தது பெரியதாகப் படவில்லை. தனது சபதம் நிறைவேறாமல் போனதே என்று கடும் கோபமுற்று என்ன செய்வதென்று புரியாமல் உலாவிக் கொண்டிருந்தான். அதே நேரம் தனது மக்கள் இளம் பாண்டவர்களை அழித்த அஸ்வத்தாமனை அழிக்க வேண்டும் என்ற பாஞ்சாலியின் கதறலுக்கிணங்க அஸ்வத்தாமனைத் தேடி பாண்டவர்கள் வருகிறார்கள். பாண்டவர்களைக் கண்ட அஸ்வத்தாமன் மேலும் சினமுற்று ஆயுதங்கள் ஏதும் இல்லாததால் அருகில் இருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து மந்திரத்தால் அதனை பிரம்மாஸ்திரமாக்கி, கண்ணன் தடுத்தும் கேளாமல் பாண்டவர்கள் மேல் எய்து விடுகிறான். 


பிரம்மாஸ்திரத்தை தடுக்கும் வல்லமை இன்னொரு பிரம்மாஸ்திரத்திற்கே உண்டென்பதால் அர்ஜுனன், தானும் பிரம்மாஸ்திரத்தை எய்து அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தை தடுக்கிறான். ஒரு பிரம்மாஸ்திரமே உலகை அழிக்கும் வல்லமை உள்ளது. ஆனால் இங்கு இரண்டு பிரம்மாஸ்திரங்களின் பிரயோகத்தால் அண்டம் நடுங்கிக் கொண்டிருக்க கண்ணன் அர்ஜுனனை பிரம்மாஸ்திரத்தை திரும்ப பெறுமாறு கேட்க அதன்படி அர்ஜுனன்னும் பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறான். ஆனால், அஸ்வத்தாமனோ பிரம்மாஸ்திரத்தை எய்ய மட்டுமே அறிந்தவன், திரும்பப் பெறும் வழி அறியாதவனாதலால். அதனை பாண்டவ வம்சத்தின் கடைசி வாரிசாக இருந்த உத்திரையின் கருவின் மேல் திருப்பி கருவை அழித்து விடுகிறான். 


இந்நிகழ்வில் அஸ்வத்தாமன் தனியொரு ஆளாக நின்று, கோபத்தின் உச்சியில் இரவு நேரத்தில் இளம் பாண்டவர்களை அழித்தான், பிரம்மாஸ்திரம் எய்து உலகையே அழிக்கும் வல்லமை படைத்திருந்தான் என்பதால் அவனை வீரன் என்று சொல்லி விட முடியுமா? ஒரு அஸ்திரத்தை முழுமையாக கற்றுக் கொள்ளாமல் உலகையே அழிக்க நினைத்து பின் அதனை பாண்டவர்களின் இறுதி வாரிசாக வரவிருந்த உத்தரையின் கருவுக்கு திருப்பி விட்ட அஸ்வத்தாமன் வீரனா? தான் எய்த பிரம்மாஸ்திரத்தை திருப்பி எடுத்துக் கொண்டால் அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரம் தமது இறுதி வாரிசை அழித்து விடும் என்றும் தெரிந்தும் உலக நன்மைக்காக, எய்த அஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்ட அர்ஜுனன் வீரனா? இங்கு வீரம் என்பது எதில் அடங்கி இருக்கிறது?


இதே போன்று இன்னொரு நிகழ்வு. துரோணர் கௌரவர்களின் படைக்கு தளபதி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரம். துரோணர் துரியோதனனுக்கு தருமரைக் கொல்ல மாட்டேன் ஆனால் அவரைச் சிறைப் பிடித்து தருகிறேன் என்று உறுதி அளித்து அதற்காக அர்ஜுனனை தருமரிடமிருந்து பிரித்து தொலைவே அழைத்துச் செல்லுமாறு பணித்தார். அர்ஜுனனும் போரின் உக்கிரத்தில் தான் தனது அண்ணன் தருமரை விடுத்து நெடுந்தொலைவு வந்து விட்டதை அறியாமல் போர் புரிந்து கொண்டிருந்தான். இதுதான் தக்க சமயம் என துரோணர், தருமரைச் சிறைபிடிக்கும் எண்ணத்துடன் சக்கர வியூகம் அமைத்து தருமரை நெருங்கிக் கொண்டிருந்தார்.


வியூகத்தை உடைக்காவிடில் தருமர் சிறைபிடிக்கப்படுவது உறுதி என்னும் நிலைமையில் என்ன செய்வதென்று தெரியாமல் தருமரும், பீமனும் குழம்பிக் கொண்டிருந்தனர். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே சக்கர வியூகத்தின் உள்நுழையவும், வெளிவரவும் தெரியும். அர்ஜுனனோ தருமரை விடுத்து நெடுந்தொலைவில் போர் புரிந்து கொண்டிருக்கிறான். நிலைமையை உணர்ந்த அபிமன்யு தருமரிடம் சென்று, பெரியப்பா எனக்கு சக்கர வியூகத்தின் உள் நுழையத் தெரியும் ஆனால் வெளியேறத் தெரியாது எனச் சொல்ல தருமர், அபிமயுவை சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழையச் சொல்கிறார். தருமரின் எண்ணம் அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழையும் பொழுது பீமன் முதலிய பல வீரர்களும் உள் நுழைந்து விட்டால் பின் வியூகத்தை எப்படியும் உடைத்து வெளியேறி விடலாம் என்பதாம். 


சக்கர வியூகத்திற்குள் தன்னைத் தவிர வேறு எவரும் உள் நுழைய இயலாவிடில் தான் வெளியேற இயலாது என்று நன்கு தெரிந்த அபிமன்யு தனது பெரியப்பாவைக் காப்பதற்காக தனது உயிரை பணயம் வைத்து சக்கர வியூகத்துள் நுழைகிறான். நுழைந்தவன் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் அனாயசமாகத் தோற்கடித்து சிதறச் செய்கிறான். அபிமன்யுவின் வீரத்தைப் பார்த்த துரோணர் நேர்மையான முறையில் இவனைக் கொல்லுதல் இயலாதென்பதை உணர்ந்து யுத்த முறைக்குப் புறம்பான முறையில் அவனைக் கொன்றும் விடுகிறார்.


இந்நிகழ்வில் அபிமயுவிற்கு தான் சக்கர வியூகத்தின் உள்நுழைந்தால் வெளியேறுவது இயலாது தனது உயிரை இழக்க நேரிடும் என நன்றாகத் தெரியும். இருந்தும் தனது பெரியப்பாவிற்காக, தான் சார்ந்த படையின் நலனுக்காக தனது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்த அபிமன்யு, வீரனா? வீரனென்றால், இதில் வீரம் என்பது எதைக் குறிக்கிறது?


இரு நிகழ்வுகளையும் மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்து, வீரம் என்பது என்ன? வீரன் என்பவன் யார் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்களேன்...


இன்றைய நமது அன்றாட அலுவலக வேலைகளிலும் நமக்கு மேலதிகாரிகளாக இருப்பவர்களில் சில வீரர்களைக் காண முடியும். இவர்கள் தமது கீழ் வேலை செய்பவர்களிடம் சில வேலையைக் கொடுத்து அவ்வேலையில் இருக்கும் கடின தன்மையைக் கூறி தாமும் தமது சக பணியாளர்களுடன் சேர்ந்து அவ்வேலையை முடித்து வெற்றி காண்பார்கள். 

இன்னும் சில மேலதிகாரிகளோ, தங்களின் கீழ் பண்புரிபவர்களிடம் சில வேலையைக் கொடுப்பார்கள், வேலையைக் கொடுக்கும் பொழுது இந்த வேலை ஒன்றும் கடினமானது இல்லை, இப்படி இப்படி செய்து எளிமையாக முடித்து விடலாம் என்று வாயாலேயே வேலையை முடித்து, நானே செய்து விடுவேன், இருந்தும் உனக்கு அனுபவம் கிடைக்க இவ்வேலையைத் தருகிறேன் எனச் சொல்வார்கள். இந்த மாதிரி சூழநிலையில் அகப்பட்டுக் கொண்ட சில பணியாளர்கள், தங்கள் வேலையை முடிக்கத் தெரியாமல் தம்மால் முடியவில்லை எனச் சொல்லி மேலதிகாரியிடமே அவ்வேலையைத் திருப்பிக் கொடுத்தாலோ, மேலதிகாரி, தனக்கும் அந்த வேலை தெரியாது. நான் சொல்லிய படிச் செய்தால் முடித்து விடலாம் என்று, தான் நினைத்ததாகச் சொல்லி அவ்வேலையை முடிக்க வேறொருவர் உதவியை நாடுவார்கள். இவர்களும் வீரர்கள் தான். வாய்ச்சொல்லில் மட்டும்.!


நாம் உண்மையில் வீரராக இருக்கப் போகிறோமா, வாய்ச்சொல்லில் மட்டும் வீரராக இருக்கப் போகிறோமா. முடிவு நம் கையில் தான்.

அதீதத்தில் படிக்க லிங்க் :http://www.atheetham.com/?p=2689

Monday, September 24, 2012

திரிசங்கு

படிப்பில்
முனைவருமில்லை
அரிச்சுவடியுமில்லை...

பதவியில்
உயர்ந்துமில்லை
கடையிலுமில்லை...

வருவாயில்
பணக்காரனில்லை
ஏழையுமில்லை...
என்ன கொடுமை இது...
வாழ்க்கையில் மட்டுமல்ல
நடக்கும் வழியிலுமா இப்படி...

வேகமாய்ச் செல்லும் நண்பர்கள் நால்வர்
ஆமையாய்த் தங்கும் நண்பர்கள் நால்வர்

முன்செல்லவா
பின்தங்கவா...

முன்னவருடன் சேர்ந்தால்
பின்னவர்க்கு கோபம்...

பின்னவருடன் தங்கினால்
முன்னவர்க்கு வருத்தம்...

முடிவு செய்து விட்டேன்...
தனிமையே என்றாலும்
திரிசங்கே நிம்மதி தான்.!

சந்தர்ப்பம்

இரவை மட்டுமே பார்த்திருப்பவன்
விண்மீணைச் சிலாகிக்கிறான்...
எத்தனைச் சூரியன்கள்.!

பகலைப் மட்டுமே பார்ப்பவன்
சூரியனைச் சிலாகிக்கிறான்...
ஒன்றே நன்று.!

இரவிற்கான
பகலின் விண்மீணாய்
பகலிற்கான
ஒற்றைச் சூரியனாய்
வலம்வர காத்திருக்கிறேன்...

பகல் விண்மீணாயும்
இரவுச் சூரியனாயும்
புடம் போட்டபடி...

எனக்கான காலம் நோக்கி.!

ஆறாம் அறிவு

பல காலமாக எழுத நினைத்த பதிவு இது...
 
மனிதன் பிற உயிரிணங்களை விட ஒரு படி மேலானவனாம்... காரணம் என்ன என்று கேட்டால் அவனுக்கு தான் ஆறாம் அறிவு இருக்கிறதாம்... சரி, அந்த ஆறாம் அறிவைப் பயன்படுத்தி என்ன செய்தாயடா என்றால், இன்று காலையில் எழுவதில் இருந்து உறங்கும் வரை உபயோகம் செய்யும் பொருட்கள் எல்லாமே இந்த ஆறாம் அறிவால் வந்தது தான் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கண்டுபிடித்திருக்கிறான் மனிதன்... எதனைக் கண்டுபிடித்தவனும், தான் மட்டும் உபயோகம் செய்ய எதையும் கண்டுபிடிக்கவில்லை. மனிதர் அனைவருக்கும் பயன்படட்டுமே என்று தான் கண்டுபிடித்தான்...
 
ஆனால், எதனையும் கண்டுபிடிக்காமல், நம்மைப் போன்ற மக்கள் நலனுக்காக நாம் ஏதும் செய்ய முடியுமா என்று சிந்திக்காமல், ஊர் சுற்றித் திரியும் சிலர் இந்த ஆறாம் அறிவால் என்ன செய்தார்கள் தெரியுமா... விளம்பரம் தேடிக் கொள்வது... பெருமை பேசித் திரிவது... என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... அதையும் எப்படி செய்தார்கள் தெரியுமா.... தன் சொந்தத்தில் ஒருவன் சாதித்தால், எங்கள் சாதியே இவ்வளவு அறிவுமிக்கவர்கள் என்றும், தன் சொந்தத்தில் இல்லாமல், தன் ஊர்காரனாயிருந்தால் அவன் எங்க ஊருடே என்றும், தனது மாவட்டம் என்றால், என்னுடைய மாவட்டம் என்றும், தனது மொழி பேசுபவன் என்றால் தன் மொழிக்காரன் என்றும், தனது மாநிலம் என்றால் தன் மாநிலத்துக்காரன் என்றும், தனது நாட்டவன் என்றால் தன் நாட்டவன் என்றும் சொல்லி சொல்லி பெருமைப்பட்டு கொள்வது...
 
எதற்கடா இவன் யாரோ சாதித்ததற்கு, இத்தனை பெருமை அவனுக்குத் தேடித் தருகிறான் என்று ஆழ்ந்து பார்த்தல் தான் தெரியும், அது சாதித்தவனை பெருமைப்படுத்த அல்ல, சாதித்தவனை வைத்து தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமைப் பட்டுக் கொள்ள செய்யும் தந்திரம் என்று. இது மட்டுமா செய்வான் இவன், தான் சாராத மற்றவர்களை சமயம் பார்த்து மட்டம் தட்டவும் செய்வான். ஏன் என்றால் அப்பொழுதும் தன்னைத் தவிர, தன்னைச் சார்ந்தவர்களைத் தவிர அனைவரும் மட்டமானவர்கள் என்று சொல்லி தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமை தேடிக் கொள்ளவே...
 
எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்... எத்தனை நாள் உயிரோடு வாழ்வோம் என்று தெரியாத இந்த அற்ப வாழ்வில், தான் தான் பெரியவன் என்று யாருக்கு நிரூபிக்க இத்தனை போராட்டம்... உண்ணும் உணவிற்கு உழைத்தோமா, உடன் இருப்பவர்களுக்கு உதவினோமா, உதவ முடியாத பட்சத்தில் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்தோமா என்றில்லாமல் எதையேனும் செய்து தன்னை முன்னிலைப்படுத்தி தற்பெருமைத் தேடிக் கொள்ளும் இந்த அற்பமான எண்ணம் தான் ஆறாம் அறிவா...
 
வீடு நாம் இருக்க ஒரு இடம், மொழி நமது உணர்வை பகிர ஒரு கருவி, இறை நம்மை நாம் கட்டுப்பாடோடு வைக்க உதவும் ஒரு நிலை என்பதை நாம் என்று உணரப் போகிறோம்... எங்கும் எதிலும் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள, சக மனிதனை மனிதனாகப் பாராமல் பிறருக்குத் தீங்கு செய்வது எதற்காக... தான் தான் சரி என்று தன்னை உயர்த்திக் காண்பித்து அடுத்தவனை தனக்கு கீழ் கொண்டு வரச் செய்யும் முயற்சிகள் எதற்காக...
 
விளங்கவில்லை... நமக்கு கிடைத்த இந்த ஆறாம் அறிவால் நாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம்... எத்தனை பேருக்கு உதவிகரமாக இருக்கிறோம்... இல்லை எவருக்கும் உபாதையாக இல்லாமலாவது இருக்கிறோமா... விளங்கவில்லை... இனியேனும் சாதி, மதம், மொழி, இனம், நாடு என்று நம்மை முன்னிலைப்படுத்தாமல் மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்து தன்னைப் போல பிறரையும் எண்ணி வாழ நமக்கு உதவுமா நம் ஆறாம் அறிவு... ?????

Thursday, September 13, 2012

தனிமையின் செலவு

யாருமற்ற பொழுதுகளில்
செய்வதறியாது
செலவு செய்ய எத்தனிக்கிறேன்...

உடைக்க முடியாத
உண்டியலில் உலுக்கி எடுத்தவாறு...
சில நினைவுகளை.!

வட்டியாக வளர்ந்து நின்றது
செலவு.!

அவள்

அத்த பொண்ணா எனக்கு ஆசையக் காட்டி
மனசை என்னுள்ளார தச்சுட்டு போன..
மிச்சம் மீதியின்னு ஏதும் இல்லாம
என்னை உன்னுள்ளார அள்ளிட்டுப் போன...

கையப் புடிச்ச நாளு முதலா
காலைப் பொழுதைஉன் கண்ணில் முழிச்சேன்...
ஓடி ஆடி என் வேலைய முடிச்சு
மிச்சப் பொழுதைஉன் நெஞ்சில் கழிச்சேன்...

மஞ்சம் சேர்ந்தஎன் மாமன் மவளே
என்னை விட்டுட்டு நீ எங்கடீ போன...
என்ன செய்யுவேன் ஏது செய்யுவேன் ..
எங்கே தேடிநான் உன்னைச் சேருவேன்...

பெத்தவ வீட்டுக்கு சொல்லிட்டு போவ...
மத்தவ வீட்டுக்கும் சொல்லிட்டு போவ...
இத்தனை நாளில் இன்னைக்கு மட்டும்
சொல்லாம கொள்ளாம எங்கடீ போன...

ஒத்த வார்த்தையில சொல்லிட்டுப் போடீ - இல்லை
என்உசுருக்கும் கொள்ளியை வச்சுட்டுப் போடீ...
போன வழியெது காட்டிட்டுப் போடீ...
நானும் அங்குவாரேன் உன்னையத் தேடி...

பசிப்பிணி

பசியாறப் பணத்திற்காய்
விளைநிலங்கள்
விலைநிலங்களாகிக் கொண்டிருந்தன...
பசிப்பிணியை நிரந்தரமாக்கியவாறு.!

தனுஷ்கோடி

எண்ணற்ற கனவுகளோடும்
எஞ்சிய நினைவுகளோடும்
உறங்கிக் கொண்டிருந்தவர்கள்
ஆர்ப்பரித்த புயலால் அமைதியாக உறங்குகிறார்கள்...
ஆழ்கடலில்.!
அழிந்து போனவர்களும்
மறைந்து போனதும்
எழுப்பிய கூக்குரல் தொடர்ச்சியின் நீட்சி
விம்மலாய் கரைக்கு வந்து சொல்கிறது...
கதைகளாய்.!
எஞ்சியிருக்கும் மனிதர்க்கும்...
மிஞ்சியிருக்கும் மாற்றத்திற்கும்...

அண்ணாமலையார் அற்புதங்கள்

பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைச் சொல்லிச்
சேய்போல் இருப்பர் கண்டீர், உண்மை ஞானம் தெளிந்தவரே…
நேற்று இரவு மன அமைதிக்காக வேண்டி, அண்ணாமலையார் அற்புதங்கள் இசைத்தட்டை கேட்டவாறு நித்திரையில் ஆழ்ந்தேன்... அப்பொழுது இந்த பாடலைக் கேட்க நேர்ந்தது... ஆஹா, ஆஹா, என்ன ஒரு செய்தி...
உண்மைதான், பெரிய பெரிய ஞானியரெல்லாம் பல சமயம் நம் கண்களுக்கு ஏதோ பித்து பிடித்தவர் போலவே நம் கண்ணுக்குத் தெரிகின்றனர்... ஆனால் உண்மையில் நாம் தான் பல வித பித்துகளைப் பிடித்துக் கொண்டு அலைகிறோம்... இப்பாடலைக் கேட்டதிலிருந்து எனக்கும் எப்பொழுது இந்த மாதிரி உண்மை ஞானம் தெளிந்து, பேய் போல் திரிந்து பிணம் போல் கிடப்போம் எனும் எண்ணம் ஆட்கொண்டு விட்டது...
நமசிவாயா நின்தாள் பணிந்தேன்;நின் பார்வை
எமைக்கண்டு நான்;அழிக்கும் நாளதுவும் எந்நாளோ
அந்நாளைக் கண்டிடவே எப்போழ்தும் என்நாவில்
உன்நாமம் வீற்றிருக்கத் தா..

முத்தொள்ளாயிரத்தில் இருந்து ஒரு பாடல்

புல்லாதார் வல்லே புலர்கென்பார்; புல்லினார்
நில்லாய் இரவே நெடிதுஎன்பார் நல்ல
விராஅமலர்த் தார்மாறன் ஒண்சாந்து அகலம்
இராஅளிப் பட்டது இது

இரவை கண்டு இரக்கப்படுகிறாள் ஒரு மாது... யார் அவள்... பாண்டியனைப் பிரிந்து வருத்தத்தில் இருக்கும் மாது, தன் சோகத்தை மறைக்க இரவை ஏளனம் செய்து பாடுவதாக அமைகிறது இந்த பாடல்.
 
சே, காதல் படுத்தும் பாடு தான் என்ன...

இந்த மாது சொல்கிறார், தன் துணையைத் தழுவாதவங்க/ தழுவ முடியாதவங்க இந்த இரவு சீக்கிரம் போயிட கூடாதா, நாளை பகல் பொழுது சீக்கிரம் வந்துட்டா தன் காதலனை பார்க்கலாமேனு இரவைச் சீக்கிரம் போகச் சொல்லுவாங்களாம்...

தன் துணையைத் தழுவியவாறு இன்புற்று இருக்கும் பெண்கள், விடிஞ்சா எங்க தன்னோட கணவன் தன்னை விட்டுப் போயிடுவானோனு வருத்தத்தோட இரவே நீ அப்படியே இன்னும் ரொம்ப நேரத்துக்கு இரேன்னு கெஞ்சி கேட்பாங்களாம்...
 
இதை ரெண்டத்தையும் சொல்லி, மலர் மாலையையும் சந்தணத்தையும் தடவி இருக்கும் மங்கை ஒருத்தி இரவைப் பார்த்து உன்னோட நிலைமை தலைவனை விடவும் முடியாம, தலைவன் கூட பேசவும் முடீயாம இருக்குற நிலைமையை விட மிகவும் இரக்கத்துக்குரியதா இருக்கேனு கேலி செய்றாங்களாமாம்...
 
ஹ்ம்ம், இந்த பொண்ணுங்க தன்னோட கஷ்டத்தை மறக்க அடுத்தவங்க கஷ்டத்தைச் சொல்லி சந்தோஷப்படுவாங்களோ எப்பவுமே... நீங்க என்ன நினைக்கறீங்க...

சுழியம்

சுழியத்தை உணராது
சுழியத்தையும் அதன் தொடக்கத்தையும்
தேடி சுற்றுகின்றனர்...
சுழியத்திற்குள்ளாக.!

Thursday, August 16, 2012

கற்பனை - அதீதத்தில் கடைசிப்பக்கமாக வெளியான கட்டுரை


மனிதனுக்குத் தான் எத்தனை கற்பனை வளம். தனது கற்பனை வளத்தால் இன்று அவன் கண்டும், பயன்படுத்தியும் வரும் கண்டுபிடிப்புகள் தான் எத்தனை. கற்பனை வளம் மிகப் பெரிய பயன்களைத் தந்தாலும் மனிதனின் கற்பனையே சில சமயம் அவனுக்கு எதிரியாக அமைந்து விடுகிறது என்றால் மிகையல்ல என்று தான் சொல்வேன் நான். எப்படி என்கிறீர்களா.

நமது கற்பனை வளத்தால் நாம் எளிதான காரியத்தைக் கூட கடினமாக்கி விடுகிறோம். இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் அனைவரும் இந்த பிரச்சினையை சந்தித்து கொண்டு தான் வருகிறோம். ஆனால் இதனை வெறும் புரிதலின் பிழை என்று தட்டிக் கழித்து விட்டு அடுத்த வேலைக்குச் செல்கிறோம் நாம்.

பெரும்பாலும் இந்த கற்பனை தரும் தவறான புரிதலுக்கு காரணம் என்னவென்று பார்த்தோமானால் ஒரு விஷயத்தின் மீது தரும் அதீதமான கட்டமைப்புகளே ஆகும். உதாரணத்திற்கு தேர்வு எழுதும் ஒரு மாணவனை எடுத்துக் கொள்வோம். தேர்வொன்றில் ஆசிரியரின் கவனக் குறைவால் ஒரு இரண்டு மதிப்பெண் கேள்வியானது ஐந்து மதிப்பெண்கள் பிரிவிலோ அல்லது பத்து மதிப்பெண்கள் பிரிவிலோ வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

மாணவனின் மனநிலை என்னவாக இருக்கும். இரண்டு மதிப்பெண் வினாவை பத்து மதிப்பெண்கள் பிரிவில் ஆசிரியர் ஏன் கேட்கப் போகிறார். இது வேறு ஏதாவது கேள்வியாக இருக்குமோ. அல்லது இதற்கு பதிலை விளக்கமாக எழுத வேண்டி இருக்குமோ. நமக்குத் தெரிந்தது இரண்டு மதிப்பெண்களுக்கு ஏற்ற அளவில் தானே. என்ன செய்யலாம் என யோசித்து நன்கு தெரிந்த அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் அதனை விலக்கி வைத்து விட்டு அதற்கு பதிலாக வேறு கேள்விக்கு பதிலளித்து பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண்ணைக் குறைவாக வாங்கி இருப்பார்கள். சிலரோ இரண்டு மதிப்பெண்ணுக்குரிய விடையை எழுதி ஐந்து அல்லது பத்து மதிப்பெண்கள் வாங்கி இருப்பார்கள். அந்த கேள்வியை எழுதாமல் விட்டவர்கள் அப்பொழுது தான் தனது மடத்தனத்தை உணர்வார்கள்.

பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல அலுவலகங்களிலும் கூட நாம் பல சமயம் இதை பார்த்திருப்போம். நமக்கு நன்கு தெரிந்த ஒரு இலகுவான வேலை கொடுத்து அதனைச் செய்யத் தேவையான கால அவகாசத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக கால அவகாசத்தை வாய்ப்பாக அளித்து இதனை இந்த காலகட்டத்திற்குள் செய்ய வல்லவர் யாரேனும் இருக்கிறீர்களா என கேட்கும் போது, நமது திறமையை மீறி ஒரு சந்தேகம் என்னும் கற்பனை கிளம்பி, இந்த சிறிய வேலைக்கு இத்தனை கால அவகாசம் கொடுக்கிறாரே மேலாளர், நாம் தான் அவர் சொன்ன வேலையைத் தவறாக புரிந்து கொண்டோமா, இதனை ஒப்புக் கொள்ளலாமா வேண்டாமா என பெரும்பாலானோர் பல வகையான சிந்தனைகளில் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சிலர் அந்த வேலையை வாங்கிக் கொண்டு நல்ல பெயரை வாங்குவதோடு மட்டுமல்லாமல் குறைந்த நேரத்தில் வேலையை முடித்து விட்டு மீதமான நேரத்தை மகிழ்வோடு பொழுது போக்குவார்கள்.

இது ஏன் இப்படி நடக்கிறது. நமது கற்பனை. இல்லாத ஒன்றைப் பற்றி அதிகம் சிந்தித்து இருப்பதை கோட்டை விடும் கற்பனையே இந்த பிரச்சினைக்குக் காரணம். இந்த கற்பனைக்குக் காரணமே நம்மை எதிர்நோக்கி வரும் விஷயத்தை, நாம் விஷயமாக மட்டும் பார்க்காமல் அதன் மீதான கட்டமைப்புகளைப் பார்ப்பதே ஆகும். மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு. வில்வித்தை பயிற்சியின் போது அர்ஜுனனுக்கு தான் குறி வைத்த குருவியின் கண் மட்டுமே இலக்கு நிர்ணயத்தின் போது  தெரிந்ததாம். ஆனால் மற்றவர்களுக்கோ குருவி அமர்ந்திருந்த மரம், கிளை, இலை, குருவி, குருவியின் கண் என ஒவ்வொருவரின் கற்பனைக்கேற்றவாரு தங்களின் இலக்கு தெரிந்ததாம். நாமும் பெரும்பாலும் இப்படித்தான். நமது இலக்கை மட்டும் பாராமல் நமது கற்பனையினால், நமது இலக்கைச் சுற்றி பல கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இலக்கை அடைய முடியாமல் தவிக்கிறோம்.

இதனை வலியுறுத்தி பீர்பால் கதை ஒன்றும் சொல்லப்பட்டு வருகிறது. அக்பர் அரண்மனையில் வீற்றிருக்கும் பீர்பாலின் அறிவுத் திறமையைக் கேள்விபட்டு பல நாட்டு அறிஞர்களும் அவரது அறிவு திறத்தைச் சோதனை போட வந்துக் கொண்டிருந்த காலம் அது. அக்பரின் அமைச்சர்கள் எல்லோரையும் முட்டாள்களாக்கியே தீர வேண்டும் என சூளுரைத்து புறப்பட்ட ஒரு அறிஞர் அக்பரின் அரசவைக்கு வருகிறார். தான் கையோடு கொண்டு வந்திருந்த பெட்டியை அரச சபையின் முன் வைத்து இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது எனச் சொல்பவரே உண்மையில் அறிஞர். இங்குள்ள எவராலும் இதைச் செய்ய முடியுமா எனக் கேட்டு விட்டு அகம்பாவமாக ஒரு பார்வை பார்க்கிறார்.

அக்பரின் அமைச்சர்களுக்கோ என்ன செய்வது எனப் புரியவில்லை. இவர் யாரென்றே தெரியாது. எங்கிருந்தோ வந்தார். பெட்டியை வைத்தார். அதில் என்ன இருக்கிறது என்று நம்மைக் கேட்டால் நமக்கு எப்படித் தெரிய வரும் அது? என அனைவரும் குழப்பத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது தான் சபைக்கு வந்த பீர்பால் இவ்விஷயத்தைக் கேள்விப்பட்டு நேராக சபை நடுவில் வைத்திருக்கும் பெட்டி அருகில் சென்று அதனை திறந்து பார்த்து அதனுள் ஒரு எலுமிச்சை இருக்கிறது என எல்லோருக்கும் எடுத்துக் காட்டினாராம். எல்லோரும் விக்கித்து நிற்க, பீர்பாலே தொடர்கிறார். கேள்வி கேட்டவர் பெட்டியில் என்ன இருக்கிறது எனக் கேட்டாரே ஒழிய, பெட்டியைத் திறந்து பாராமல் அதனுள் என்ன இருக்கிறது என கேட்கவில்லையே என்று விளக்கமும் அளிக்கிறார். அவையினர் கரகோஷம் எழுப்ப, அக்பரின் அமைச்சர்களை அவமானப்படுத்த வந்த அந்த அறிஞர் இறுதியில் அவமானப்பட்டு நின்றார்.


நாம் சராசரி மனிதர்களுள் ஒருவராக, கற்பனையான கடமைப்புகளுக்குள் நம்மை இருத்தி வைத்துக் கொள்ளப் போகிறோமா இல்லை ஒரு அர்ஜுனனைப் போல், ஒரு பீர்பாலைப் போல் இலக்கை மட்டுமோ அல்லது பிரச்சினையை மட்டுமோ பார்த்து வெற்றிக்கான வழியைத் தேடப் போகிறோமா… முடிவு நம் கையில் தான்…

அதீதத்தில் படிக்க லிங்க் : http://www.atheetham.com/?p=1910

Saturday, July 14, 2012

காதல் அந்தாதி


நட்பாய் நுழைந்தவள் நெஞ்சத்தில் தங்கிட

கட்டினேன் காதல்;கோட் டை.


கோட்டையைக் கட்டிட வேட்டையாடி னாள்;எந்தன்

தூக்கத்தை உள்ளே நுழைந்து...



நுழைந்தவள் தைத்தாள் நெருஞ்சியின் முள்ளாய்

கலைந்ததென் காதல் கனவு.


கனவது பொய்க்க கடவுளை வேண்டி
நெருங்கினேன் நட்பினைத்;தே டி.


தேடி கிடைத்ததும் நட்பினுள் காதலை

தேடித் தவிக்குது;நெஞ் சம்.


நெஞ்சம் தவிக்க நினைவுகள் கொதிக்க
தகிக்குது அனலாய் உடல்.


உடலைத் தொடர்ந்தே உயிரில் கலக்க
உருகித் தவிக்குது;கா தல்.


காதல் உணர்த்திட தேவை பிரிவென

சென்றேன் பிரிந்து தொலைவு.



தொலைவில் அவள்முகம் பார்த்ததும் வானில்
சிறகை விரிக்குது நெஞ்சு.


நெஞ்சத்துக் காதல் நயமாய் உணர்த்த
நெருங்கித் தொடர்ந்திட்டேன் நட்பு.

Monday, July 9, 2012

ஆதாரம்

ஆதாரம்ன உடனே நம்ம நினைவுக்கு வர்ரது ரெண்டு விஷயம். ஒன்னு குற்றத்தை நிரூபிக்கத் தேவையான சாட்சி இன்னொன்னு தாங்கு கோல்/அடிப்படை அதாவது ஒரு கொடி வளர்வதற்கு, கொம்பானது ஆதாரமாக/உதவியாக இருப்பது. இன்னைக்கு நாம பேசப் போற ஆதாரம் முதல் வகை. அதாவது சாட்சியைப் பத்தி.

ஆதாரத்துல என்னப்பா இருக்குன்றீங்களா… இருக்கே… நம்பிக்கையை மூட நம்பிக்கையாக்குறதும், மூட நம்பிக்கையை நம்பிக்கையாக்குறதும் இந்த ஆதாரம் தானுங்களே… உதாரணத்துக்கு, கடவுள் இருக்குறார் என்பது ஒரு சாரார் நம்பிக்கை. அது இல்லை, கடவுள் என்பது மூட நம்பிக்கைனு சொல்றவங்க தரப்பு வாதம் என்னானு ஆராய்ஞ்சு பார்த்தா, கடவுள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதனால கடவுள் என்பது மூட நம்பிக்கைம்பாங்க…

இப்படித்தான், நாம பாட்டி வைத்தியம், கை வைத்தியம்னு சொன்னதெல்லாம் சுத்த பேத்தல் மூட நம்பிக்கைனு சொல்லிட்டு அதே வைத்தியத்தை அடுத்தவன் விஞ்ஞானம்ன்ற பேர்ல பார்முலாவா மாத்தி, மாத்திரையாக் கொடுத்ததும் அதை விஞ்ஞானம்னு கொண்டாடுறோம். இதுக்காக எல்லாம் ஒரு விஷயத்தை யாராச்சும் சொன்னா ஆதாரம் இல்லாம கேட்டுக்க முடியுமா… முடியாது இல்லைங்களா…

எல்லா விஷயத்தையும் ஆராய்ஞ்சு பார்த்து அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரம்/சாட்சி இருந்தாதானே நாம ஆறறிவு படைச்ச மனுஷன்னு ஒத்துக்க முடியும். இன்னைக்கு நம்ம வாழ்க்கையில, நிச்சயமாய் கெட்டவன்னு பலரைத் தெரியும். ஆனால், அவனை ஒன்னுமே செய்ய முடியாது. காரணம் கேட்டாக்க, அவன் கெட்டவன்னு நிரூபிக்க போதிய அரசாங்கத்துக்கிட்ட ஆதாரம் இல்லைம்போம்…தப்பு பண்ணா தண்டனைன்றது போய், ஆதாரம் இருந்தா தான் தண்டனைன்னா நம்மாள வேற என்ன செய்ய முடியும்.

அதுக்காக, ஒருத்தன், இன்னொருத்தனை தப்பானவன்னு சொன்னா உடனே தண்டிச்சுடலாமான்னா அதுவும் முடியாதே. ஒருத்தன் இன்னொருத்தன் மேல இருக்குற பொறாமையால பொய்யா புகார் செய்தா, அப்ப தேவையில்லாம ஒருத்தன் தண்டிக்கப்படாம காப்பாத்தறது இந்த ஆதாரம் தானுங்களே. அதுவும் இன்னைக்கு இருக்குற சூழ்நிலையில சொல்லவா வேணும். அறிவியல் விஞ்ஞானம்னு இவ்வளவு வளர்ர்சியடைந்த பின்னாலயும், ஒருத்தன் செய்யாததை செஞ்சான்னும், செஞ்சதை செய்யவே இல்லைன்னும், பேசாததை பேசுனான்னும், பேசியதை பேசலைன்னும், வாய் புளிச்சுச்சோ மாங்காய் புளிச்சுச்சோனு வாய்க்கு வந்ததை பேசிட்டு போறவனும், இணையத்துல குப்பையா எழுதி வைக்கறவனும் இருக்கத்தானே செய்யுறாங்க…

இணையத்துல அங்கங்க இருக்குற இந்த மாதிரி தகவல்களை எல்லாம் பொய்யுனும், மெய்யுனும் ஒருத்தரை ஒருத்தர் தங்கள் தரப்பை நிரூபிக்க, அடுத்த தரப்பை போலியாக்க ஆதாரம் கொடு, ஆதாரம் கொடுன்னு மாத்தி மாத்தி கேட்டுக்கிடுவாங்க பாருங்க… இன்னைக்கு இருக்குறதுலயே சூப்பரான பொழுதுபோக்கு எதுடான்னா, இணையத்துல இந்த மாதிரி விவாதங்களை வேடிக்கை பார்க்குறதுதாங்க… மனிதனோட சராசரி இயல்புகளை எல்லாம் இங்கன இருந்து கண்டுக்கிடலாம். பொழுதுபோக்குன்னு சொன்ன உடனேயே எனக்கு இந்த ஆதாரத்தை வைச்சு விளையாடின விளையாட்டு தாங்க நினைப்புக்கு வர்ரது…

ஒருத்தனோட கண்ணை இன்னொருத்தன் பொத்திக்கிட மத்தவங்க எல்லாம் ஓடிப் போய் அங்க அங்க முட்டை சைஸுல மணலைக் குவிச்சு வைச்சுட்டு அதோட இல்லாம கையில கிடைக்குற கூடை, பேப்பர், ஓலைன்னு எதை எதையோ போட்டு மறைச்சும் வச்சுட்டு வந்துடுவோம். கண்ணை மூடிகிட்டிருக்குற பையன் ஒன்னுலர்ந்து நூறு வரைக்கும் எண்ணிட்டு, கூழை முட்டையை விட்டுட்டு நல்ல முட்டையைக் கண்டுபிடிம்போம். மத்தவங்க மறைச்சு வச்ச எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டான்னா அவன் ஜெயிச்சதாயும், பாதிக் கண்டுபுடிச்சு மீதிக் கண்டுபுடிக்கலைன்னா, மணலைக் குவிச்சு வச்சவங்களை இன்னும் எத்தனை முட்டை இருக்குனு கேட்டு மீண்டும் கண்டுபுடிக்கச் சொல்லுவோம். அப்படியும் கண்டுபுடிக்க முடியலைன்னா முட்டையா மணலைக் குவிச்சு வைச்சவனே அவன் சொன்ன அளவு முட்டைகளைக் கொண்டு போய் காட்டணும். அப்படி அவன் மறைச்சு வச்ச முட்டைகளை அவன் மறந்துட்டான்னாவோ, இல்லை அவன் சொன்ன எண்ணிக்கையில குறைஞ்சுடுச்சுன்னாவோ முட்டையை மறைச்சு வச்சவன் தோத்தவனாய்டுவான்…

ஆதாரம்ன்றதை விளையாட்டுல கூட வைச்சு, மனுஷன்னா எதையும் ஆராய்ஞ்சு அனுபவிச்சுத்தான் உண்மையத் தெரிஞ்சுக்கணும்னு சொல்லிக் கொடுத்தவக தான் நம்ம பெரியவங்க… இதுக்காக எல்லாத்துக்கும் ஆதாரம் வேணுமானும் கேட்க கூடாது. தீயைத் தொட்டா சுடும்னு மத்தவங்க சொன்னா கேட்டு நடந்துக்கிடணும். அதை விட்டுபுட்டு நான் தொட்டு பார்த்து தான் உணருவேன்னா வலியை அனுபவிக்கத் தானே வேணும்… என்ன நான் சொல்றது…

பயணங்கள் - 2

கோவில் தரிசனம் முடீத்து விட்டு காலைச் சிற்றுண்டி முடித்து ஓட்டல் அறைக்குத் திரும்ப, நண்பனின் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் எங்களுக்காய் காத்திருந்தது. அடுத்து நேராகச் சென்றது ஆரோவில். ஆரோவில் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் என்னுடன் வந்த நண்பர்கள் அதனைப் பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார்கள்.

ஆரோவில், மரங்கள் நிறைந்திருந்தாலும் காற்று வரவில்லை... முதலில் சென்றது ஆரோவில்லின் முகப்பில் கட்டப்பட்டுள்ள ஆரோவில்லைப் பற்றிய புகைப்படங்களும் புத்தகங்களும் இருக்கும் அலுவலகம் போன்ற ஒரு கட்டிடம். ஆரோவில்லின் உள் சென்று பார்த்து வர ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாவலர்கள் சொன்னதால் வியூ பாய்ன்டிற்குச் சென்று தொலைவிலிருந்து ஆரோவில்லை ரசித்தோம். மாத்ரி மந்திரை தொலைவில் தான் பார்க்க முடீந்தது... அடுத்த முறை முன்னதாக பதிவு செய்து உள்சென்று பார்த்து விட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டீ விட்டது ஆரோவில்.

ஆரோவில்லின் இயற்கைக் காட்சியை ரசித்து முடித்து அடுத்துச் சென்றது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு. வாவ்... என்ன ஒரு பிரம்மாண்டம். பார்க்க பார்க்க கண்களுக்கு விருந்தாக வானுயர நின்றிருந்தார் ஆஞ்சநேயர். பஞ்சவடி ஆஞ்சநேய்ரை தரிசிக்க கண்கள் இரண்டு எனக்கு போதாதாக இருந்தது. ராம ராம என்று மனம் உச்சரிக்கத் தவறாது அச்சூழ்நிலையில். பஞ்சவடியில் இருந்து வெளியே வர கோவில் பிரசாதம் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். சுடச்சுட இருகையளவு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு ரசித்துச் ருசித்துச் சாப்பிட்டோம். நெய் ஏகத்துக்கும் இருந்தது பொங்கலில். என்ன தான் வீட்டில் நெய் அதிகம் விட்டு பதார்த்தங்கள் செய்தாலும் கோவில் பிரசாதங்களுக்கு ஈடு எங்குமே கண்டதில்லை நான்... ஹ்ம்ம்...

பஞ்சவடி ஆஞ்சநேயருக்கு அடுத்ததாக நாங்கள் சென்றது பாதாள காளி கோவிலுக்கு. பஞ்சவடி ஆஞ்சநேயர் பிரம்மான்டம் என்றாள் பாதாள காளி ருத்ர தாண்டவம் ஆடுகிறாள். பாதாளத்தில் இருக்கும் காளியைத் தரிசிக்க தரைத்தளத்திலிருந்து கீழிறங்கி உள் செல்ல உடலுக்குள் நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு... அப்பப்பா, இப்பொழுதும் நினைக்க புல்லரிக்கிறது...காளியின் உக்கிரமும், கோவிலின் உடுக்கைச் சத்தமும், கோவில் முழுதும் நிறைந்திருந்த சித்த்ர்கள் மற்றும் ரிஷிகளின் புகைப்படமும் நம்மையும் அறியாமல் நம்முளே ஏகத்தக்கும் ஒரு அமைதியை ஏற்படுத்தி விடுகிறது. நிச்சயம் பாதாள காளி கோவிலின் தரிசனம் எனது வாழ்நாளில் மறக்க முடியாதது... அனுபவித்தாலேயே அந்த நிலையை உணர முடியும்... எழுத வார்த்தைகள் இல்லை...

அடுத்ததாகச் சென்றது சுண்ணாம்பாறு படகுத் துறைக்கு. நடுப்பகல் வேளையில் படகுத்துறையில் பெடல் போட் செய்த கூட்டம் நாங்களாகத் தான் இருப்போம். அரை மணி நேரம் பெடல் செய்ய வியர்வை மழையில் தெப்பலாக நனைந்து வெளியே வந்தோம்...

அங்கிருந்து நேராக மதிய உணவுக்காகச் சென்றோம்... ஒரு ஆளுக்கு அறுபது ரூபாய்க்கு ஏசி ரூமில் ஒரு முழு மதியச் சாப்பாடு என்பது தேவாமிர்தமாக இருந்தது... மற்ற நகரங்களை ஒப்பிட மனநிறைவாகவும் இருந்தது சாப்பாடு. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டென்பார்கள்... உண்ட களைப்பு தீர ஓய்வெடுக்க எங்களது அறைக்குத் திரும்பினோம்.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, அரவிந்தா ஆஸிரமம் சென்றோம். மிகவும் அமைதியான ரம்மியமான சூழல் அது. எல்லோர் முகத்திலும் சாந்தம். பெரும்பாலும் வெளி நாட்டினர் அதிகம் வந்திருந்தார்கள். அங்கு அரவிந்தரின் போதனைகளும், அவரது கருத்துகள் அடங்கிய புத்தகங்களும் விற்பனைக்கு பல்வேறு மொழிகளில் வைத்திருந்தார்கள்...

ஆஸிரம் முடித்து அப்படியே மணக்குள விநாயகரின் தரிசனம். உள்ளே கணபதியை தரிசித்து விட்டு வந்து வெளியே கண்பதியிடம்(யானையார்) காசு கொடுத்து ஆசி பெற்றோம். பாண்டிச்சேரி வரை சென்று கடற்கரை செல்லாமல் இருந்தால் என்னாவது? இறுதியாக பாண்டிச்சேரி கடற்கரைக்குச் சென்றோம். மற்ற கடற்கரைகளைப் போல் நீரில் விளையாட முடியாத படி இருந்தாலும் நாம் தடுப்புச் சுவரைத் தாண்டி கல்லின் மேல் மோதிச் செல்லும் கடலலையைத் தொட்டு வந்த போது ,ஏதோ சிறுகுழந்தை பறக்கும் பலூனைத் தட்டி தட்டி விளையாடுவது போன்ற மகிழ்வைத் தந்தது அந்த நிகழ்வு...

எல்லாம் முடித்து, எந்த வேலைக்காக பாண்டிச்சேரி சென்றோமோ, அதான்பா பிரெண்டோட கல்யாண ரிசப்ஷன் அதையும் போய் அட்டென்ட் செய்துட்டு, திருப்தியா ரிசப்ஷன் சாப்பாடை ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டு பெங்களூரு திரும்பினோம்...

விழியன் அண்ணா, ஒரு பயணக் குறிப்பில் சொல்லி இருந்தது போல, பயணங்கள் பல்வேறு அனுபவத்தையும் களைப்போடு சேர்ந்தே தந்தாலும் ஒரு பயணத்தின் முடிவு இன்னொரு பயணத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறது என்பதை இங்கு நினைவு கூர்ந்து அடுத்த பயணத்திற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்...

பயணங்கள் - 1

வாழ்க்கையின் பயணத்தில்தான் எத்தனை பயணங்கள். சில பயணங்கள் மறக்க முடியாதவையாகி விடுகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் சென்றது கடந்த சனியன்று சென்ற ஒரு நாள் புதுச்சேரி பயணம். உடன் படித்த உற்ற நண்பன் ஒருவனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. திருமணத்திற்குச் செல்ல இயலாததால்(அலுவலக காரணம் காட்டி) திருமண வரவேற்புக்கு(பயபுள்ள விடுமுறை நாளில் வச்சுட்டான்) கண்டிப்பாக செல்ல வேண்டியதாயிற்று.

வெள்ளி இரவு பெங்களூருவிலிருந்து என்னோடு சேர்ந்து மேலும் இரு நண்பர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம். எங்களது வருகையை முன்கூட்டியே சொல்லியிருந்ததால் தங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை நண்பன் ஏற்கனவே செய்திருந்தான். நேராக தங்குமிடம் சென்று பயணக்களைப்பு நீங்க குளித்து முடித்தோம். உடன் வேலை செய்யும் இன்னொரு நண்பரின் உதவியொடு ஒரு காரை அன்று முழுவதும் ஊர் சுற்றுவதற்காக ஏற்பாடு செய்து விட்டு இருக்கும் நேரத்தை வீனாக்க வேண்டாமென்று அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றோம்.

"ஓம் நமோ நாராயணாய" என்று நாராயணன் எங்களை உள்ளே அழைத்தான். அதிகாலை நாராயணன் தரிசனம், கண்ணுக்கும் மனதுக்கும் இனிமையைத் தந்தது. கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் ஏராளமான ஓவியங்கள். கண்ணனின் அவதாரங்களை வடித்து வைத்திருந்தார்கள். கண்ணனின் அவதாரப் பெயர், அந்த சிலை இருக்கும் ஊர் என்று ஏராளமான தகவல்கள். சுற்றுப்புறச் சுவர் முழுவதையும் இரசித்துக் கொண்டே வந்த என்னை மூன்று படங்கள் அதிக நேரம் நிறுத்தியது.

முதலாவது படம், திருவட்டாறில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்த ஆதி கேசவப் பெருமாளின் அனந்தசயன படம். அந்தப் படத்தில் அப்படி என்னதான் விஷேஷம் என்று கேட்கிறீர்களா. பெருமாள் இந்த படத்தில் மற்ற இடங்களுக்கு மாற்றாக இடமிருந்து வலமாக பள்ளி கொண்டிருக்கிறார். பெரும்பாலும் தலைக்கு வலது கையை தலையனையாக வைத்திருப்பது போன்ற அமைப்பே பார்த்திருந்த எனக்கு இடது கையை தலையனையாகக் கொடுத்து படுத்திருக்கும் ஆதி கேசவப் பெருமாளைக் கண்டு ஆச்சரியம் தாளவில்லை... ஏன் பெருமாள் திருவட்டாறில் இப்படி காட்சியளிக்கிறார் என்ற கேள்வி இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை...

இரண்டாவது படமும், மூன்றாவது படமும் வாமன அவதாரத்தைச் சித்தரிக்கும் படங்கள். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மூன்று அடி நிலம் தானமாகப் பெற்று முதல் அடியை பூமிக்கும் இரண்டாவது அடியை வானத்திலும் வைத்து மூன்றாவது அடிக்கு இடம் எங்கே எனக் கேட்டார் என்ற அளவில் தான் வாமன அவதாரம் பற்றிய கதை தெரியும் எனக்கு. ஆனால் பூமியை வலது காலின் அடியில் அளந்தாரா, அல்லது வானத்தை வலது காலின் அடியில் அளந்தாரா. பூமியை அளந்தது எந்த பாதம், வானத்தை அளந்தது எந்த பாதம் என்று இதுவரை தெரியாமல் தான் இருக்கிறேன். அந்த குழப்பத்தை மேலும் அதிகபடுத்தும் விதமாக, திருக்கோவிலூரின் திரிவிக்ரமன் வலது காலால் வானத்தை அளக்கும் விதமாகவும், திருக்காழிச்சீராமவின்னகரத்தின் தாடாளன் இடது காலால் வானத்தை அளக்கும் விதமாகவும் வடிவமைக்கப்படிருப்பதாகக் கண்டேன்...

இதில் எது சரி, ஏன் இவ்வாறு சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது... விடை இன்னும் தெரியவில்லை...

சரி, நேரத்தை வீனாக்காமல் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்...

-தொடரும்.

Wednesday, June 20, 2012

நான் என்பது நானா? (அதீதத்தில் கடைசிப்பக்கமாக வெளிவந்த கட்டுரை)

நான் என வார்த்தைக்கு வார்த்தை நம்மில் பலரும் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சுயபுராணம் பாடிக் கொள்கிறோம். உண்மையில் இவ்வாறு நாம் பேசும் போதெல்லாம், நான் என்று நாம் நம்மைதான் குறிக்கிறோமா. இந்த நான் என்று நம்மைக் குறிப்பிடுகிறோமே… இந்த நான் சுட்டுவது எதனை நமது செயல்களையா அல்லது நமது குணநலன்களையா. அவ்வாறு நமது செயல்களையும் குணநலன்களையும் குறிப்பிடுவது தான் இந்த நான் என்றால், உண்மையில் இந்த நான் நாம் பிறக்கும் போதே நம்முடன் பிறந்ததா?

ஒரு குழந்தை பிறக்கிறது. அவ்வாறு குழந்தை பிறக்கையில் குழந்தைக்கு எந்தவிதமான புற அறிவும் கிடையாது. அவ்வாறு பிறந்த குழந்தை முதலில் அறிவது தன்னையா என்றால் அதுவும் அல்ல. சுற்றுப் புறங்களையே முதலில் உணர்கிறது. எப்படி?  தன் கண் திறந்து சுற்றுப் புறங்களை கவனிக்கிறது.  சுவாசத்தால், நறுமணங்களை நுகர்கிறது காதால் பிற ஒலிகளைக் கேட்கிறது. எப்போது சுயம் அல்லது நான் என்பது குழந்தையுள் பிறக்கிறது ?

“  ச்சே… எம் மவன் கிருஷ்ணன் மாதிரி அழகு எவன்டா இருக்கான்  இந்த வீட்ல ” அம்மா சொல்லும்போது தனது உருவத்தைப் பற்றிய ஒரு எண்ணம் படர்கிறது.
” எம் மவன் கிருஷ்ணன் மாதிரி  புத்திசாலி எவனுங்கிடையாது.  என்னா புத்திங்கற. ஒண்ணாவது படிக்கிறப்பவே, அஞ்சாப்பு புக்கெல்லாம் படிக்கிறான். அவ்ளோ புத்திசாலி ” அப்பா  சொல்லும் போது தன் அறிவைப் பற்றிய ஒரு எண்ணம் தனக்குள் பிறக்கிறது.
ஒரு குழந்தை தன் சுயத்தை அதன் நானை அது தானாக அறிகிறதா ? இல்லையே, தன் சுயம் என தன்னைச் சுற்றி வாழும் பிறர் தன்னைப் பற்றிச் சொல்லுவதைத் தானே நான் என்று தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறது.
எம் புருஷன் மாதிரி வருமா ?, எங்கப்பா மாதிரி வருமா, என் அண்ணன் மாதிரி வருமா? என் தம்பி மாதிரி வருமா? என இப்படியாக நம்முடைய சுயத்தை, பலர் நம்முள் நமக்கு ஊட்டுகிறார்கள். இந்த சுயத்தை நாம் தீனிப் போட்டு வளர்க்கிறோம்.
உண்மையில் நான் என்று தன்னைப் பற்றி ஒருவன் பேசிக் கொள்ளும் எதுவும் அவனைப்பற்றி அவனாக அறிந்தது இல்லை. மற்றவர்கள் அவனைப் பற்றி ஏற்படுத்திய பிம்பத்தை அவன் நம்பத் தொடங்கியதாலே வந்த உணர்வு வெளிப்பாடே. இப்படி இருக்க நான் என்று தற்பெருமை பேசிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும் ஒருவனுக்கு?
இன்னும் கூட சிலருக்கு இந்த நான் என்பது பிறரால் நம்முள் ஏற்பட்ட கட்டமைப்பு என்பது சரிதானா என்ற சந்தேகம் இருக்கலாம். அவர்களுக்காக என் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இதோ. பள்ளிக் கல்வி முழுவதும் தமிழ்வழியில் படித்த நான் கல்லூரியில் ஆங்கில வழியில் படிக்க முடியாமல் பல தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். என்னுடைய கல்விதிறனின் இந்த மோசமான நிலையைப் பற்றி வீட்டிற்குத் தெரிவிக்க எனது தந்தையை கல்லூரி ஆசிரியை ஒருவர் கல்லூரிக்கு அழைத்திருந்தார். எனது தந்தையிடம் கல்லூரி ஆசிரியை உங்கள் மகன் இத்தனை பாடங்களில் தோல்வியைத் தழுவி இருக்கிறான். இவன் மேலும் படிப்பைத் தொடர்ந்து தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் கடினம் என்று என் முன்னாலேயே எனது தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆசிரியரின் பேச்சை இடைமறித்த எனது தந்தை சொன்னார், எனது மகனின் அறிவுத் திறனைப் பற்றி எனக்குத் தெரியும். அவன் பனிரெண்டாம் வகுப்பில், அவன் படித்த பள்ளியில் மூன்றாவதாக வந்தவன். இந்த பாடங்களையும் வெற்றிகரமாக படித்து தேர்ச்சி பெறுவான் என்று என் மேல் நம்பிக்கையுடன் அந்த ஆசிரியையிடம் உறுதி கொடுத்தார். அன்று வரை ஆங்கில வழிக் கல்வி என்றால் பயந்திருந்த நான், எனது தந்தை என் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் பயனாய் கல்லூரியை முடிக்கும் பொழுது அனைத்துப் பாடங்களிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று வெளியேறினேன். இங்கு என்னால் ஆங்கில வழிக் கல்வியிலும் படிக்க இயலும், ஆங்கில வழிக் கல்வி எனக்கு இயலாத ஒன்றல்ல என்று என்னுள் உருவகப்படுத்தி நானும் ஆங்கிலவழி கல்லூரி படிப்பில் தேர்ச்சிப் பெற்றவன் என்ற அங்கீகாரத்தை வழங்கியது எனது தந்தை என் மீது வைத்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையே நான் பொறியாளன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வைக்கிறது.
இப்படித்தான் நம்முள் பல நான் கள் உருவாகி இருக்கிறோம். நமது ஒவ்வொரு நானும் நம்முடைய சூழலே உருவாக்கி இருக்கிறது. சூழலால் தான் நான் கள் உருவாகிறோம் எனும் போது, ஏன் நாம் ஒரு நல்ல சூழலை நமது அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்து அவர்களையும் நான் என்று நானை கர்வமுடன் சொல்ல வைக்க முயற்சி செய்ய கூடாது?
ஒருத்தருக்கு வீட்டுல தினமும் சண்டை பொண்டாட்டி கூட. படுக்கை கூட தனித் தனியே தான். அவருக்கு எப்பவுமே “நான்” அப்படிங்கற கர்வம் உண்டுங்கறதை ரொம்ப கஸ்டப்பட்டு அவரோட பொண்டாட்டி உணர்த்திட்டாங்க. அவரும் திருந்திடறேன்னு திருந்திட்டார்.  அன்னைக்குன்னு பார்த்து அவரோட ஆஃபீஸ்ல தண்ணி பார்ட்டி. இவரும் திருந்துன சந்தோஷத்துல  நல்லா ஏத்திக்கிட்டு வீட்டுக்கு வந்தார். வந்து நேரா பொண்டாட்டி பெட்ரூம்ல போய் படுத்துக்கிட்டார். எல்லாம் முடிஞ்சு, போதைத் தெளிஞ்சதும் குற்ற உணர்வோட சொன்னார்
” கமலா,  போதைல நான் என்னையே மறந்து உன் கட்டில்ல உன் அனுமதி இல்லாம படுத்து என்ன என்னமோ  ஆயிடுச்சு. மன்னிச்சுக்கோ ” அப்படின்னாராம்.
” நீங்க வீடு மாறி வந்திட்டீங்க. உங்க வீடு பக்கத்து வீடு. அப்புறம் எம் பேரு கமலா இல்ல விமலா” அப்படின்னு சொன்னாங்களாம் அந்த வீட்டு அம்மணி.
அதாவது நான் அப்படிங்கறத ஒரேடியா விடவும் கூடாது. ஒரேடியா பிடிச்சுக்கவும் கூடாது.  குளிருக்கு நெருப்பு  கிட்ட அமர்ந்தா மாதிரி. ரொம்ப பக்கம்  போனா எரிக்கும்.  விலகிப் போனா குளிரும். இல்லைங்களா ?
எனவே  நான் என்பது நானா ? மீண்டும் சிந்திப்பீர். உண்மையில், “நான் என்பது நான் அல்ல, நாம் களின் வெளிப்பாடே நான்” என்று நீங்களும் உணர்ந்தால் உதவுவீர் உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு நான் என்ற நல்லதோர் கர்வத்தைப் பரிசாய் வழங்க…
அதீதத்தில் படிக்க சுட்டி : http://www.atheetham.com/?p=1092


Thursday, June 14, 2012

ஈடில்லா தாங்கி


நொடிப் பொழுதில்
சிரிக்க வைக்கும்
நட்புகள் பல...

உளமாற 
நலம் விழையும்
உறவுகள் பல

எத்தனை தான்
இருந்தும் என்ன?

இனம் புரியாத 
பாரமொன்று
மனதினை அழுத்தும் போதும்

இறக்கி வைக்க
கண்கள்
கண்ணீரை உதிர்க்கும் போதும்

ஏது இன்னொன்று
தன்னுள் வாங்கிக் கொண்டு
தைரியத்தை ஊட்டும்
இதமான தாய் மடி போல.!

Wednesday, June 13, 2012

உண்மை சாட்சி


நன்கு பழகியவர்கள் தான்…
இருந்துமென்ன?
சொல் சொல் என நச்சரித்தார்கள்…
சொல்ல விரும்பாததை.!

ஒருவனுக்குத்தானே உண்மை தெரியும்…
அந்த ஒருவனும் வந்து சொல்லவா போகிறான்
துணிந்து சொன்னேன் பொய்யை உண்மையாக
தற்காலிக தீர்வுக்காய்.!

யார் என்ன சொன்னால் என்ன?
உண்மை உன் மனதிற்குத் தெரியும்…
அனைத்தையும் கேட்டு முடித்தபின்
ஆறுதலாய் சொல்லி நின்றார் ஒருவர்.!

உண்மையான உண்மை வெளிப்படும் அன்று
உண்மையானவர்கள் வெளியேறுவர் உன்னை விட்டு.!
பொய் சொல்லும் போது இம்சிக்காத மனம்
பொய் உண்மையான பின் இம்சிக்கத் தொடங்கியது…

எதைஎதையோ பேசி நின்றேன்…
எதைஎதையோ நினைக்க விரும்பினேன்…
ஏப்பம் விட்டு எக்காளமிட்டுச் சிரித்தது
உள்ளத்தின் சாட்சி உண்மையின் சாட்சியாய்..!

Monday, June 11, 2012

முகத்திரை


ஒவ்வொருவரிடம் 
ஒவ்வொரு முகத்திரையை
முகமாக காட்டிக் கொண்டிருக்கிறது
நிஜமுகத்தையே முகம் மறந்தாலும்...

எப்பொழுதும்
எல்லோருக்கும் 
ஏதாவதொரு முகத்திரை 
தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது...

முகத்திரைகள் பலதையும்
ஒருவருக்கு ஒன்றாய் காட்டும் போது
முகத்தினும் மேலாக முகத்திரைகள்
ரசிக்கவே வைக்கிறது எல்லோரையும்...

இரு வேறு நபர்களுக்கு
இரண்டு முகத்திரையை ஒன்றாக்கி
உலவும் சில பொழுதுகளில் மட்டும்
முகத்திரையொன்று கிழிந்து விகாரமாகலாம்...

விகாரத்தை அழகாக்கி
புதிய முகத்திரையை உருவாக்கத் தெரிந்தவன்
முகத்திரையை வெற்றி காண்கிறான் - மற்றவனை
முகத்திரை வெற்றி காண்கிறது.

Thursday, May 31, 2012

அவள்


அருகில் அமர்ந்தவாறு
அவள் மொழியில் சொல்லி கொடுக்கிறாள்...
மாற்று மொழிக்காரி.!

புரிந்தும் புரியாமல்
தலை அசைத்துக் கொண்டிருக்கிறேன்...
அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்...

வேகமாய் பேசிக் கொண்டிருந்தவள்
சட்டென்று நிறுத்தி விட்டு
ஏதோ சொல்ல

வேகமாய் தலையசைக்கிறேன்
சரி சரி என்று?

பேசிக் கொண்டிருந்தவள்
முறைத்த படி மீண்டும் சொன்னாள்...

அவள்
எதுவும் சொல்லவில்லை...

கேள்வி கேட்டிருக்கிறாள்.!

Tuesday, May 29, 2012

சமாதானம்


மனது...
ஒரு புறம்
தவறுகளை தெரிந்தே செய்யும் போழ்து
குமைந்து கொல்கிறது.!


மறுபுறம்
தவறுகளைச் சரியானதாக்கி 
ஏமாற்றிவிட பிரம்மப்பிரயத்தனம் செய்கிறது.!


தவறுகளைச் சரியாக்கிவிட்டதாய்
செயலை முடிக்க
தவறு தவறாகவே நிற்கிறது...


தவறைச் சரியாக்க
கிளம்பியதின் மிச்சங்கள் எல்லாம்
எச்சமாய் மேனியெங்கும்...


அருவருக்கத்தக்க
தவறுகளை மறைத்தபடி...
புண்ணுக்கு பூசிய புணுகாய்.!

Monday, May 28, 2012

காட்சிப் பிழை

தொலைவில் ஒன்றாய் தெரிந்தது
அருகில் வேறொன்றாய்…

அருகில் ஒன்றாய் தெரிந்தது
தொலைவில் வேறொன்றாய்…

தவறென முதலில் பட்டது
சரியானதாய் முடிவில்…

புரியாத விஷயமாய் முதலில்
புரிந்ததாய் முடிவில்…

அவசரம்,
அணுகுமுறையில் தவறுக்கே இழுக்க
பொறுமையே சரியாக…

அவசரமான காலத்தில் கடைபிடித்த பொறுமையோ
அவசரமாய் தவறாக…

சரியான பாதைக்கு என்னதான் செய்ய???
குழப்பத்திற்கு விடைத் தேடுகையில்
தெளிவாக உள்ளம் கேட்டது….

சரியென்று எண்ணும் இன்றைய பதில்
தவறென்று நாளை ஆனால்???