Friday, October 26, 2012

சுயநலம்

எப்பொழுதும் போல அறையில் தொலைக்காட்சிப் பெட்டியின் ஏதோ ஒரு அலைவரிசையில் பழைய திரைப்பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது...
 
//
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
//
என்ற கவிஞர் வாலியின் வரிகளை கேட்டதும் என்னையும் மீறி ஏதோ ஒன்று என்னைச் சிரிக்க வைத்தது.
 
கவிஞர் அவர்கள் இப்பாடல் வரிகளை எழுதிய காலத்தில் வேண்டுமானால் இவ்வரிகள் சரியானதாக இருந்திருக்கலாம்... ஆனால் இன்று நிலைமை இப்படித்தான் இருக்கிறதா...
 
பூமி மட்டுமல்ல பூமியின் மேல் ஓடும் நீரையும் மனிதன் தன சுயநலத்திற்காக இன்று பிரித்து வைத்து வேடிக்கைப் பார்க்கிறான்... இதே நிலை தொடர்ந்தால் காற்றையும், வானத்தையும் நெருப்பையும் கூட மனிதன் பிரித்து விடுவானோ என்ற அச்சம் எனக்குள் எழத் தொடங்கி விட்டது...
 
அதே சமயம், பஞ்சபூதங்களும் மானுடர் எவர்க்கும் சொந்தம் என்று உணராது சுயநலத்தோடு மனிதன் தன்னுள் அவற்றை அடைத்து வைக்க பார்க்கும் இந்த பைத்தியக்காரத்தனத்தை எண்ணிப் பார்க்கையிலே அச்சத்தையும் மீறி சிரிப்பு வந்து தொலைகிறது...
 
பெரும் பூமியை ஒருவன் அடக்கி ஆண்டாலும் அவன் இறந்த பின் அவனுக்கு கிடைப்பது என்னவோ ஆறடி மண் தான்... அந்த ஆறடி மண்ணும் அவனுக்கு சொந்தமில்லை. அந்த மண்ணுக்கு தான் இவன் உணவாகிறான்.
 
ஒருவன், தன்னிடம் இருக்கும் நீரைத் தர மறுத்து தன்னிடமே தண்ணீரை சேமித்து வைக்க எண்ணினாலும் தலைக்கு மேலே தண்ணீர் போனால் அந்த தண்ணீரிலேயே அவன் முழுகி உயிர் விட வேண்டியது தான்...
 
உயிர் போகும் தருவாயில் இதனை உணர்ந்து பயன் என்ன? இருந்தும் நம்மில் பலர் " செத்த பின் பாலை ஊற்றுவேன், ஆனால் தாகத்திற்கு தண்ணீர் தர மாட்டேன்" என்று தானே வாழ்ந்து வருகிறோம்...
 
ஈகைத் திருநாளான இன்றைய நன்னாளிலாவது இதனைச் சிந்தித்து பார்த்து, நம்மிடம் இருப்பதை முடிந்த அளவு பிறருக்கு கொடுத்து நாமும் மகிழ்வுடன் இருந்து பிறருக்கும் மகிழ்ச்சி தர எத்தநிப்போம் ...
 
இதுவும் இல்லையா, தர்மம் தலைகாக்கும் என்னும் சுயநலம் கொண்டேனும் பிறருக்கு கொடுத்து வாழ்வோம்.
 
இதுவும் இல்லையா, கொடுத்து வாழவில்லை என்றாலும் பிறரைக் கெடுத்து நாம் நமது சுயநலத்தைப் பேணாதிருப்போம்.
 
இருப்போமா..?

No comments:

Post a Comment