Wednesday, October 24, 2012

தாய்மொழி

கடந்த சனிக்கிழமை திருப்பதி சென்றிருந்தேன். பெருமாளின் தரிசனத்துக்காக அறைகளில் அடைக்கப்பட்டிருந்த நான் அங்கு நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தவாறு பொழுது போக்கி கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் சில குழுந்தைகள் குழுமமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே பேசிக் கொண்டிருந்ததில் இருந்து உறவினர்கள் என்று தெரிந்து கொண்டேன்... அதில் ஒரு குழந்தையைப் பார்க்கும் போது நான் சிறுவயதில் திருப்பதிக்கு சென்றிருந்த பொது நடந்து கொண்ட விதத்தை எனக்கே மறுஒளிபரப்பு செய்வது போல இருந்தது அந்நிகழ்வு. என்ன, சிறு சிறு வித்தியாசங்கள். நான் ஆண், அந்த குழந்தை பெண். நான் தமிழ் பேசுபவனாக இருந்தேன் அன்று இந்த குழந்தை தெலுங்கு பேசுபவராக இருக்கிறார். அவ்வளவே...
 
நடந்தது என்ன எனக் கேட்கிறீர்களா? இதுதான் நடந்தது. குழுமமாக இருந்த குழந்தைகள் அனைவரும் உறவினர்களாக இருந்த போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகுப்பில், ஒவ்வொரு மொழியின் வாயிலாக தங்கள் பள்ளிப்படிப்பைப் படிப்பவர்களாக இருக்கிறார்கள் போலும். சில குழந்தைகள் தெலுங்கு வழியாக படிப்பவர்களாகவும் சில குழந்தைகள் ஆங்கிலம் வழியாக படிப்பவர்களாகவும் இருந்ததை அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து அறிந்து கொண்டேன்...
 
அந்த குழந்தைகளுக்கு இடையே நடந்த விளையாட்டு இதுதான். விளையாட்டுக்கு நடுவராக அந்த குழந்தைகளின் தாய்களில் ஒருவர் இருந்தார். குழந்தைகளில் ஒரு குழந்தை பெருக்கல் வாய்ப்பாடிலிருந்து ஒரு பெருக்கல் கேள்வியை முன்வைக்க அதற்கு மற்ற குழந்தைகள் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு குழந்தை மட்டும் மிகவும் வேகமாக பதிலைச் சொல்லி விட்டு, எனது பதில் சரிதான் என்ன பந்தயம் எனக் கேட்டவாறு இருந்தது...மெல்லிய புன்முறுவலுடன் அடுத்து என்ன நடக்கிறது எனப் பார்க்கலானேன்.
 
இந்த விளையாட்டு ஒரு புறமிருக்க நடுவராயிருந்த அந்த தாய், குழந்தைகளைப் பார்த்து சரி ஒவ்வொருவராக பெருக்கல் வாய்ப்பாடு சொல்லுங்கள் எனக் கேட்கலானார். ஒவ்வொரு குழந்தையாக பெருக்கல் வாய்ப்பாடு சொல்லிக் கொண்டிருந்தனர். சில குழந்தைகள் தெலுங்கிலும் சில குழந்தைகள் ஆங்கிலத்திலும் பெருக்கல் வாய்ப்பாடைச் சொல்ல நடுவராக இருந்த தாய் ஆங்கிலத்தில் வாய்ப்பாடு சொல்பவர்களை தெலுங்கில் வாய்ப்பாடு சொல்லக் கேட்க ஆங்கில வழியில் படித்த குழந்தைகள் தெலுங்கில் பெருக்கல் வாய்ப்பாடைச் சொல்ல முடியாமல் தவித்தார்கள். என்னதான் நாம் ஆங்கிலத்தில் படித்தாலும் நமது தாய்மொழியில் பெருக்கல் வாய்ப்பாடு கூட சொல்ல முடியாத அளவிற்கா நாம் நமது தாய் மொழியை மறப்பது என்று நொந்து கொண்டவாறு எப்படி பெருக்கல் வாய்ப்பாடை தெலுங்கில் பாடுவதேன்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
அங்கு கவனித்த விஷயங்கள்,
அந்த குழந்தைகளில் தாய் மொழியில் படித்த குழந்தைகள் வேகமாக பெருக்கல் வாய்ப்பாடை படித்தார்கள். ஆங்கில வழியில் படித்தவர்கள் ஆங்கில வழியில் பெருக்கல் வாய்ப்பாடை படிக்க கஷ்டப்பார்கள். நிச்சயம் கடினமாகத் தானே இருக்கும். ஏனென்றால் மனதில் தாய்மொழியில் இருப்பதை அக்குழந்தை தாய் மொழியில் சொல்லத் தெரியாமலேயே அதனை ஆங்கிலத்தில் மொழி மாற்றி ஒப்புவிக்கும் பொழுது நேரம் அதிகம் எடுக்கத் தானே செய்யும் .
 
இன்னொன்று ஆங்கில மோகத்தால், தமிழ் மட்டுமல்ல பிற மொழிகளும் பாதிப்புக்கு உள்ளான வண்ணம் இருக்கிறது ஆனால் பிற மொழி பேசும் பெற்றோர்கள், தமது குழந்தை ஆங்கிலம் பேசினாலும் தமது தாய் மொழியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தங்களது தாய்மொழியை குழந்தைகளுக்கு கற்பிக்கவும் செய்கிறார்கள்... தமிழ் பேசும் நாமும் நம்மைச் சூழ்ந்துள்ள அக்கம் பக்கத்தினரும் இதனைச் செய்கிறோமோ????
 

( சிறுவயதில் நானும், சுற்றத்தார் சூழ்ந்திருக்கும் போது தமிழில் பெருக்கல் வாய்ப்பாடை வேகமாகச் சொல்லியும், எண்களை வேகமாக எண்ணியும் என்னை அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு விளையாடிய விளையாட்டை, இன்று அந்த குழந்தைகள் குழுமத்தில் தெலுங்கு பேசும் ஒரு குழந்தை செய்வதைப் பார்த்ததும் என்னை நானே பார்ப்பதாக உணர்ந்தேன்... ஹ்ம்ம்...)

No comments:

Post a Comment