Thursday, October 25, 2012

அழுக்கு

மாடு வளர்ப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா... பார்த்திருந்தால் நான் சொல்வது உங்களுக்கு எளிதில் புரியும். மாடுகளை மண் தொழுவத்தில் சில வீடுகளில் கட்டி வைத்திருப்பர். இந்த மண் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாடுகளை பொங்கல் அன்றோ அல்லது சில விசேஷ தினங்களிலோ குளிப்பாட்டுவர். அவ்வாறு மாடுகளை குளிப்பாட்டும் போது அந்த மாடுகளின் மேல் இருக்கும் சாணி, கோமியம் கலந்த மண் முதலான அழுக்குகள் அனைத்தும் சுத்தமாகத் தேய்த்து போகும்படி சுத்தமாக குளிப்பாட்டுவர். அவ்வாறு குளிப்பாட்டி முடித்து மாடுகளைத் திரும்ப தொழுவத்திற்கு அழைத்துச் செல்லும் போது மாடுகள் வழி நெடுகும் ஏதாவது புற்போரிலோ அல்லது மரத்திலோ தன்னை உரசித் தேய்த்தவாறு செல்லும். இது அந்த மாடுகளின் மீதிருந்த அழுக்குகள் நீங்கியதால் அவற்றுக்கு ஏற்படும் தினவு தரும் தொல்லை. மாடுகள் தினவு தரும் தொல்லையைச் சற்று பொறுத்துக் கொண்டால் சுத்தமாக இருக்க முடியும். ஆனால் தினவு தரும் தொல்லையைத் தாங்காமல் குளிப்பாட்டிய ஈரம் காயாத போதே மண்ணிலும் அழுக்கிலும் புரண்டால் குளிக்கும் முன் இருந்த அழுக்கைக் காட்டிலும் குளித்த பின் அதிக அழுக்குடையதாக அந்த மாடு ஆகி விடும்.
 
இது போலத்தான் மனிதர்களாகிய நாமும். நம்மிடையே இருக்கும் தீய பழக்கங்களான மன அழுக்குகளை விட்டொழிக்கும் போது மன அழுக்குகள் நீங்கியதைத் தாங்காமல் மனமானது மீண்டும் அழுக்குகளை நாடிச் செல்லும். அவ்வாறு மனம் மீண்டும் அழுக்குகளை நாடிச் செல்லும் பொழுது மனதைக் கட்டுபடுத்த நாம் நற்பேருகளைப் பெறுவோம். அன்றி மனத்தைக் கட்டுபடுத்தாமல் மீண்டும் அழுக்கை நோக்கி நாம் செல்வோமானால் நம்மை அது பேரழிவிற்கு இட்டுச் செல்லும்.
 
தீதோன்றை விட்டுவிட மீண்டுமதை தீண்டாதே
தீண்ட;வரும் மீளாப் பழி.

No comments:

Post a Comment