Tuesday, April 3, 2012

கடவுளை நம்பினோர்

ஒருவருடைய உயிர் போகாமல், ஒருவரைக் கொலை செய்ய முடியுமா? நாம் உயிரோடு இருக்க வேண்டும், ஆனால் தற்கொலையும் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? இது என்னடா வினோதம் என்று பார்க்கிறீர்களா! இது வினோதம் அல்ல, செய்யக் கூடிய காரியம் என்று சொன்னதோடு அல்லாமல் செய்தும் காட்டி இருக்கிறார். இப்படிப்பட்ட மாயக்காரியங்களைச் செய்ய வல்லவரும் உண்டா… அவர் யாராக இருக்கும் என்ற ஆவல் உள்ளில் எழுகிறதா. இத்தகைய மாயக் காரியங்களைச் செய்துக் காட்டியவன் வேறு யாருமில்லை. மாயன், மதுசூதனன், கோபியர்கள் கொஞ்சி விளையாடும் ரமணன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கண்ணன் தான் அது. இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று வியப்படைய வேண்டாம்.இது புதுக்கதை இல்லை. பழைய கதைதான். மகாபாரதத்தின் கர்ண பர்வத்தில் கண்ணன் நடத்திய திருவிளையாடல் தான் இது. நடக்கவியலாத அச்செயலை கண்ணன் எப்படி நடத்திக் காட்டினான் என்ற கதையைப் பார்ப்போமா.


குருஷேத்திரப் போர். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. பீஷ்மரும், துரோணரும் மடிந்து போன பிறகு, பதினாறாம் நாள் போரில் கௌரவர் படைகளுக்கு கர்ணன் படைத்தலைமை ஏற்றான். பீஷ்மரையும் துரோணரையும் அழித்த உற்சாகத்தில் பாண்டவர்களும், கர்ணனின் தலைமையில் கௌரவர்கள் உற்சாகத்தோடும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக கர்ணன் அதிக உத்வேகத்துடன் போரிட்டு ஒரு புறத்தில் பாண்டவர் படையை அழித்துக் கொண்டிருந்தான். மற்றொரு புறமோ அர்ஜுனன் கௌரவர் தரப்பில் சம்சப்தர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.


கர்ணனின் போர்த்திறமையால் பாண்டவர் படை முழுவதும் அழிந்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த போது, நகுலன் பாண்டவர்களின் படைக்கு உத்வேகம் அளிக்க எண்ணி கர்ணனை எதிர்த்துப் போரிட்டான். ஆனால் கர்ணனின் வீரத்தின் முன் நிற்க முடியாத நகுலன் பெரும் காயங்களுடன் தோல்வியுற்று திரும்ப எத்தனிக்கும்போது, கர்ணன், “நகுலா.! நீ என்னிடம் தோற்றுப் போனதை எண்ணிக் கவலையுறாதே. அர்ஜுனன் இருக்கும் இடத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போ” என எள்ளி நகையாடுகிறான். அத்தோடு நில்லாமல் கர்ணன் பாண்டவர் படையினுள் நுழைந்து ஒரு சக்கரம் போல் சுழன்று பாண்டவர் படைகளைக் கொன்று குவித்தான். இப்படியாக பதினாறாம் நாள் யுத்தம் முடிந்தது.


பதினாறாம் நாள் யுத்தத்தில் கர்ணன் விளைவித்த நாசத்தை எண்ணிப் பார்த்த தருமர், அடுத்த நாள் அவனைத் தானே எதிர்த்து அழிக்க முடிவு செய்தார். பதினேழாம் நாள் போரும் தொடங்கியது. கர்ணன், அர்ஜுனனைக் கொல்ல சல்லியனைத் தனக்கு தேரோட்டியாக துரியோதனன் மூலம் பெற்று போருக்கு கிளம்பி வருவதைப் பார்க்கையில், சூரிய சந்திரர் சேர்ந்து வருவது போல கர்ணனின் தேர் பிரகாசித்தது. கர்ணனின் தேரைப் பார்த்து விட்ட தருமர் முந்தைய நாளின் போர்க்காட்சிகளை மனதில் எண்ணியவாறு உக்கிரத்துடன் போர் புரிய, கர்ணன் தருமரின் வில்லுக்கு பதில் சொல்ல முடியாமல் தேர்த்தட்டில் மயங்கி விழுந்தான். கர்ணன் மயங்கி விழுந்ததைக் கண்டு கௌரவர் படைகள் சிதறி ஓடியது. ஆனாலும் சற்று நேரத்திற்கெல்லாம் மயக்கம் தெளிந்து மீண்டும் போரிட்ட கர்ணன், அடிபட்ட சிங்கமாய்ச் சீற, அவனின் தாக்குதலில் தருமர் நிலை குலைந்து போவதைக் கண்ணுற்ற நகுலன், சகதேவன் மற்றும் திருஷ்டத்யும்னன் கர்ணனை எதிர்த்து போரிட அனைவரையும் எளிதில் சமாளித்தான் கர்ணன்.


ஒருகட்டத்தில் கர்ணன், நகுலனின் குதிரைகளையும் தருமரின் குதிரைகளையும் கொன்றுவிட அவ்விருவரும் சகதேவனின் தேரில் நின்றவாறு போர் புரிய முனைந்தார்கள். பாண்டவரின் கை தாழ்ந்து போவதைக் கண்ட சல்லியன், கர்ணனைப் பார்த்து, “கர்ணா.! நீ கொல்ல வேண்டிய அர்ஜுனனை விடுத்து இவர்களுடன் சமர் புரிவதின் மூலமாக நீ உந்தன் பலத்தை குறைத்துக் கொண்டு பலவீனனாக அர்ஜுனனை எதிர்த்துப் போரிட்டால் நீ மாண்டு போவது உறுதி. மேலும், அங்கே பார்.! நீ யாருக்காகப் போர் புரிகிறாயோ, அந்த துரியோதனன் பீமனின் கையால் மாண்டு போவான் போல் தெரிகிறதே. அவனைக் காக்க வேண்டியது உன் கடமையல்லவா” என்று சொல்ல, கர்ணன் தர்மரைப் பார்த்து இவ்வாறு சொல்லுகிறான்.


“தருமா.! நீ தர்ம நியாயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் பிராமணர்களுக்கு நிகரானவனே ஒழிய உன்னிடத்தில் ஷத்ரியர்களுக்குரிய வீரம் என்பது கிடையாது. அதனால் இங்கிருந்து பிழைத்து போவாயாக” என்று அவமானப்படுத்தி அனுப்பி விட்டு, துரியோதனனைக் காக்கும் பொருட்டு பீமனை நோக்கி தன் தேரைச் செலுத்துகிறான்.


அதே சமயத்தில் கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, “அர்ஜுனா.! நமது படைவீரர்கள் தருமரைச் சூழ்ந்து நிற்கும் போதே, தருமரின் போர்க்கொடியானது கர்ணனின் அம்புகளால் சூழப்பட்டிருக்கிறது. இனியும் பொறுப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை, புறப்படுவாய் கர்ணனை எதிர்க்க” என்று சொல்லியவாறு அர்ஜுனனைக் கர்ணன் இருக்கும் திசை நோக்கி கொண்டு செல்கிறார் கிருஷ்ணர்.கர்ணனால் அடிபட்டு, அவமானப்படுத்தப்பட்டு, நகுல சகாதேவர்களுடன் பாசறைக்கு வருத்தத்துடன் திரும்பிய தருமர், நகுல சகாதேவர்களை பீமனுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி அனுப்பி வைக்கிறார். மறுபுறம் பீமனை எதிர்த்து வந்த கர்ணனை பீமன் அனாயசமாக தேர்த்தட்டில் மயங்கி விழச் செய்தான். கர்ணனைக் கொல்லும் எண்ணத்துடன் ஓடிவந்த பீமனைப் பார்த்து சல்லியன், “பீமா.! கர்ணனை அர்ஜுனன் கொல்வதாய் சபதம் எடுத்திருக்கிறான். அதனால் அவனை விட்டு விடு” எனச் சொல்லி கர்ணனை அவ்விடத்திலிருந்து வேறு திசைக்குக் கொண்டு செல்கிறான்.


கர்ணனின் தோல்வியைக் காணுற்ற துரியோதனன், கர்ணனைக் காக்கும் பொருட்டு தன் தம்பிமார்களை பீமனை எதிர்க்க அனுப்புகிறான். கர்ணனைத் தேடி வந்த அர்ஜுனன் அங்கு கர்ணன் மற்றும் தருமர் இருவரையும் காணாது பீமனிடம் விசாரிக்க, அங்கு நடந்ததை வருத்தத்துடன் சொல்கிறான் பீமன். தருமர் மிகவும் காயப்பட்டவராக பாசறைக்குத் திரும்பியதைச் சொல்லி அவரின் நிலை என்ன ஆயிற்று என்று தனக்குத் தெரியாது எனவும் சொல்கிறான். மேலும், தான் இப்பொழுது போர்க்களத்தில் இருந்து பாசறைக்குத் திரும்பினால் தன்னை கோழை என்று அனைவரும் பரிகசிப்பர். அதனால் அண்ணனின் நிலை என்ன ஆயிற்று எனக் கண்டு வந்து சொல்லுமாறு அர்ஜுனனை பாசறைக்கு அனுப்புகிறான்.


அண்ணனின் நிலையைக் கண்டு வரச் சென்ற அர்ஜுனனை, “அர்ஜுனன், கர்ணனைக் கொன்று விட்டு வருகிறான்” என எண்ணி புளகாங்கிதமடைகிறார் தருமர். பிறகு உண்மை அறிந்த தருமர், கோபத்துடனும், வருத்தத்துடனும், “ அர்ஜுனா.! நான், நகுலன் மற்றும் சகதேவன் அனைவரும் கர்ணனால் ஜெயிக்கப்பட்டோம். இனி நான் செய்ய என்ன இருக்கிறது. மீண்டும் வனவாசம் செல்ல வேண்டியது தான். கர்ணனை எதிர்த்து போர் புரியும் ஆற்றல் உன்னிடத்தில் இல்லை என்று முன்பே நீ சொல்லியிருந்தால், மாற்று ஏற்பாடுகளைக் கவனித்திருப்பேன். கர்ணனை கொல்வதாய் நீ செய்த சபதத்தை எண்ணி நான் மோசம் போனேன். நீ பிறந்த ஏழாவது நாளில் அசரீரி சொன்ன, ‘இந்த அர்ஜுனன் எல்லா யுத்தங்களிலும் வெற்றி அடைவான்’ என்ற வாக்கைப் வீணாகச் செய்து விட்டாய். நீ கர்ணனிடம் பெரும் பயம் கொண்டவன் என்பதை நான் இதுகாறும் அறியாமல் போனேனே. அது என் மடமை. பீமன் ஒருவனே இனி எனக்கு கதி. உன் மகன் அபிமன்யு இருந்திருந்தாலும் இத்தகைய இக்கட்டு என்னைச் சூழ்ந்திராது. உனக்கு தங்கப் பிடி கொண்ட கத்தி எதற்கு? பேசாமல் உன் காண்டீபத்தை கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டு, நீ அவருக்குத் தேரோட்டுவாயாக . அவர் கர்ணனை நாசம் செய்வார். நீ பிறக்காமல் இருந்திருந்தாலே நன்றாய் இருந்திருக்கும்“. எனப் பலவாறாக நிந்தித்துப் பேசலானார்.


தருமரின் பேச்சைக் கேட்டுக் கோபமுற்ற அர்ஜுனன் தன் வாளை எடுத்து தருமரைக் கொல்ல முனைய, நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை உணர்ந்த கிருஷ்ணர், அர்ஜுனா! என்ன காரியம் செய்ய துணிகிறாய் எனத் தடுக்கிறார். கிருஷ்ணரைப் பார்த்து, எவனொருவன் என்னைப் பார்த்து என் காண்டீபத்தை இன்னொருவனிடம் கொடுத்து விடு என்று சொல்கிறானோ அவனைக் கொல்வதாய் நான் விரதம் பூண்டிருக்கிறேன். அதனால் தருமரைக் கொல்ல வேண்டிய சூழலில் இருப்பதாக அர்ஜுனன் மொழிகிறான்.


“அர்ஜுனா, உனது கோபத்தைத் தூண்டி விட்டுதன் மூலமாக கர்ணனைக் கொல்லவே தருமர் இது போன்ற சொற்களில் உன்னை காயப்படுத்தினார்” என்று சமாதானம் சொல்லி, ”மேலும் உன் விரதத்தை நீ காப்பாற்றியாக வேண்டும். அதனால் தருமரைக் கொன்றே ஆக வேண்டும். ஆனால் இந்த கத்தி அதற்கு தேவையில்லை. தன்னை விட மூத்தவரையும், உலகத்தாரால் மதிக்கப்படுபவரையும் ஏகவசனத்தில் ஒருமையில் அழைத்தாலும் அது அவருக்கு அவமானத்தைக் கொடுத்ததாகவும், அந்த அவமானம் அவர் உயிரிழந்ததற்கு ஒப்பாகக் கருதப்படும் என்று சொல்லி தருமரை ஒருமையில் அழைத்து உன் விரதத்தை நிறைவேற்றிக் கொள்வாயாக” என்று உபாயம் சொல்கிறார்.


கண்ணனின் உபாயத்தைக் கேட்ட அர்ஜுனன் தருமரைப் பார்த்து இவ்வாறு பேசுகிறான். “போர்க்களத்தை விட்டு ஓடி வந்து பாசறைக்குள் ஒளிந்திருக்கும் நீ, என்னைப் பற்றிப் பேச அருகதை அற்றவன். போர் முனையில் கௌரவர்களைக் கதிகலங்கச் செய்கிறானே திருஷ்டதியும்னன் அவன் என்னைப் பற்றி நிந்தித்து பேசலாம். ரதத்தில் ஏறியும் ரதத்தை விட்டு துள்ளி குதித்தும் எதிரிகளை எல்லாம் துவம்சம் செய்து கொண்டிருக்கிறாரே பீம அண்ணா, அவர் என்னைப் பற்றி நிந்தித்து பேசலாம். நீ நிந்தித்து பேசாதே. மேலும் போரில் தன் உயிரைக் கொடுத்தேனும் உன்னைக் காக்க முனைந்த நகுல சகதேவர்கள், சாத்யகி, சிகண்டி போன்றோர் என்னை நிந்தித்து பேசலாம். பாசறையில் கோழைத்தனமாக பதுங்கி இருக்கும் நீ என்னை நிந்தித்துப் பேச தகுதி அற்றவன். நீ சூதாடியதால் தானே நமக்கு இந்த கதி நேர்ந்தது. உனது சூதாட்ட மோகத்தால் நரக வாழ்க்கை அனுபவித்த எங்களை நிந்திக்க உனக்கு அருகதை இல்லை. வாய்சொல் வீரனே! மீண்டும் உன் அற்பப் பேச்சால் என்னைக் கோபமுறச் செய்யாதே” என்று தருமரை ஏக வசனத்தில் பேசியவாறு மீண்டும் தன் வாளை உருவுகிறான்.


குழப்பமடைந்த கிருஷ்ணர், ‘அர்ஜுனா! இப்போது எதற்கு வாளை எடுக்கிறாய்’ என்று கேட்க, “தருமரைப் பார்த்து இவ்வளவு கடுஞ்சொற்களைப் பேசிய நான் இனி உயிர் வாழத் தகுதி அற்றவன்” எனச் சொல்லி தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள முயற்சி செய்ய, “அர்ஜுனா! உன்னைக் கொல்ல வேண்டுமென்றால் உன்னை நீயே புகழ்ந்து பேசுவாயாக. அவ்வாறு பேசினால் நீ இறந்தவனுக்குச் சமமாவாய்” என்று கூறுகிறார்.


கிருஷ்ணரின் சொல்லைக் கேட்டு அர்ஜுனன் தற்புகழ்ச்சியில் இறங்கினான். “பினாகம் என்ற வில்லை உடைய சிவனைத் தவிர என்னை எதிர்க்கும் வில்லாளி இவ்வுலகில் யாரும் இல்லை. தருமர் நடத்த விரும்பிய ராஜசூய யாகத்திற்காக பல மன்னர்களை நான் ஒருவனே போரில் அடக்கி வெற்றி பெற்றிருக்கிறேன். என்னைக் கொல்ல வேண்டும் என்று உறுதி பூண்டுள்ள சம்சப்தர்களை பெருமளவு கொன்று குவித்து விட்டேன். இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர். யுத்த சாத்திரத்தை அறியாதவர்களைக் கொல்லக் கூடாது என்ற நோக்கிலேயே இவ்வுலகை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறேன். இப்பொழுது கர்ணனைக் கொல்ல செல்கிறேன். அவனையும் நாசம் செய்வேன்” என்று சூளுரைத்தவாறு தருமரின் கால்களில் விழுந்து வணங்கி கர்ணனை எதிர்க்க அர்ஜுனன் புறப்படுகிறான்.


இப்பொழுது புரிகிறதா, கண்ணனின் தந்திரம்! அர்ஜுனன், தருமரைக் கொல்லாமல் கொலை செய்வித்த விதமும், அர்ஜுனன் தான் இறக்காமலேயே, தன்னைத் தானே கொலை செய்து கொள்ள வைத்த விதமும் அர்ஜுனன் கண்ணன் மேல் வைத்த நம்பிக்கைக்கு, கண்ணன் கொடுத்த பரிசு. இவ்வுலக வாழ்வில் கடவுள் என்பதும் நம்பிக்கையே. அர்ஜுனனுக்கு அந்த கடவுள் என்ற நம்பிக்கை கண்ணன். அவன் கொண்ட சபதத்தின்படி அவன் அண்ணனைக் கொல்ல வேண்டும், ஆனால் கொல்ல மனமில்லை. அர்ஜுனன் தன்னை மாய்த்துக் கொள்ள விரும்புகிறான். ஆனால் கண்ணனுக்கு அர்ஜுனன் அழிவதில் விருப்பமில்லை. அர்ஜுனனுக்கு, கண்ணனாகிய நம்பிக்கை என்னும் கடவுள் இப்பிரச்சினைகளிலிருந்து அர்ஜுனனை எத்தனை எளிமையாக வெளி கொணர்கிறது என்பதை பார்த்தீர்களா…


இங்கு கடவுள் மீதான நம்பிக்கை எனச் சொல்லும் பொழுது பாரதத்தின் இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. பாண்டவர்கள் சூதில், நாடு நகரிழந்து பின் தம்மையும் இழந்து தன் மனைவியையும் சூதில் இழந்து விட, பாஞ்சாலியை துச்சாதனன் சபைக்கு அழைத்து வந்து அவளின் துகிலை உரித்து மானபங்கம் செய்கிறான். துகிலுரிக்கும் துச்சாதனனிடமிருந்து தன்னை, தன் மானத்தைக் காத்துக் கொள்ள பாஞ்சாலி கதறுகிறாள். ஒரு கையில் உடையைப் பிடித்துக் கொண்டும், மற்றொரு கையால் கண்ணனை வணங்கியும் கதறுகிறாள். கண்ணன் வரவில்லை.

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

ஆனால், சட்டென்று ஒரு கணத்தில் இனி தன்னால் ஏதும் ஆவதற்கு இல்லை என்று எண்ணியவளாய், ஆடையை இழுத்துப் பிடித்திருந்த கையை ஆடையிலிருந்து விட்டு விட்டு, ‘கண்ணா! நீயே கதி’ என்று இரு கை கூப்பி அவன் பதம் பணிகிறாள். கண்ணன் பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்றுகிறான்.


கடவுள் மீதான நம்பிக்கை என்பது அரைகுறையாக/சந்தேகத்துடன் இல்லாமல் முழுமனதுடன் இருந்தால், கடவுள் நம்மை என்றென்றும் கைவிடுவதில்லை. நீங்களும் உங்களது விருப்பமான கடவுள் ஒன்றின் மீது நம்பிக்கை வையுங்கள். அல்லது நம்பிக்கையையே கடவுளாக நினைத்து அதனினிருந்து என்றும் விலகாமல் நடவுங்கள். அந்த நம்பிக்கை என்னும் கடவுள், உங்களை உங்களின் இக்கட்டிலிருந்து வெளிவரும் சூத்திரத்தை உங்களுக்கு உணர்த்தும்.


நன்றி : அதீதம்


அதீதத்தில் படிக்க லிங்க் : http://www.atheetham.com/?p=232

Sunday, April 1, 2012

கூடங்குளமும் நானும் - 4

குழப்பங்களை இன்றோடு முடித்துக் கொள்கிறேன் எனச் சொல்லி இருந்தேன்... நேற்று எப்படி இந்த பதிவை முடிக்கலாம் என யோசித்துவைத்திருந்ததெல்லாம் இப்பொழுது நினைவிலேயே இல்லை... இருந்தும் பொதுவாக என் குழப்பத்திற்கு முடிவுரையாக இதைச் சமர்ப்பிக்கிறேன்...

பொதுவாக எல்லா விஷயங்களிலும் மனிதன் ஏதேனும் ஒரு நிலைப்பாடுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நான் மட்டும் என்ன விதிவிலக்கா... அதனாலேயே கூடங்குளம் அணு உலை விஷயத்திலும் நான் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று யோசிக்கையில் எனக்கு குழப்பங்கள் ஆரம்பமானது.

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாகவும் என்னால் நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. எதிராகவும் எடுக்க முடியவில்லை... காரணம்,

கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்கள் அணு உலை பாதுகாப்பாகத் தான் உள்ளது என்று சொல்லிக் கொண்டிருந்தார்களேத் தவிர, மக்கள் மனதில் எழுந்திருந்த பயத்தைப் போக்க முயற்சிகள் செய்யவில்லை... அல்லது அவர்கள் எடுத்த முயற்சிகளானது எனக்கு முயற்சிகளாகத் தோற்றமளிக்கவில்லை... பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது, விஞ்ஞானிகள் பாதுகாப்பானது என வாய்வழிச் சொன்னது தான் கடைசி வரை அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியாகத் தெரிகிறது. இன்றும் கூட அவர்கள் கதிரியக்க கழிவுகளை என்ன செய்ய போகிறார்கள் என்று சொல்லாமல் மௌனம் தான் சாதித்து வருகிறார்கள்.

இதனை வைத்துக் கொண்டு எப்படி என்னால் அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடீயும்... அணு உலை எதிர்ப்பாளர்கள் இவர்கள் மேல் வைத்த இன்னொரு குற்றச்சாட்டான அரைகுறையான அணு உலையால் ஏற்படும் சுற்றுப்புற பாதிப்பு ஆய்வறிக்கை (EIA Report) முழுமையானதாக இல்லை என்பதற்கு எத்தகையச் சான்றுகளை இதுவரை அளித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

மக்கள் அணு உலை விபத்து நடக்குமோ என்று பயப்படுகிறார்கள் என்று தெரிந்ததும், அரசாங்கம் அணு உலை செயல்படும் விதம், இயற்கை விபத்து ஏற்படும் பொழுது அணு உலையின் எந்தெந்த பகுதி பாதிப்புக்குள்ளாகும் அல்லது எந்த அணு உலை பாகங்கள் செயலிழந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும், அவ்வாறு விபத்து ஏற்படும் பொழுது அதற்கு அரசாங்கம் வைத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி ஒரு குறும்படம் எடுத்து அதை மக்களுக்குத் தொலைகாட்சியில் பலமுறை போட்டு காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கலாம்... அதனைச் செய்யாமல் ஐந்நூறு கோடி ரூபாய் நலத்திட்டங்கள் அறிவிக்கிறோம் என்று பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்த்தது இன்னும் என்னால் ஜீரணிக்க முடியாததாகத்தான் இருக்கிறது. இந்த ஒரு குறும்படத்தை எடுத்து தொலகாட்சிகளில் ஒளிபரப்ப அரசுக்கு எத்தனை செலவு ஆகியிருக்கப் போகிறது. அதை கூட ஏன் செய்யவில்லை...????? மீண்டும் மீண்டும் அணு உலை எதிர்ப்பாளர்கள் கேட்கும் கதிரியக்கக் கழிவுகளை எப்படி பாதுகாப்பான முறையில் வெளியேற்றப் போகிறீர்கள் என்பதையும் கூட இந்த ஆவண படத்தில் சேர்த்திருக்க வேண்டும்... அப்படிச் செய்திருந்தால் மக்களின் பயம் ஓரளவேனும் குறைந்திருக்கும் என நான் நம்புகிறேன்...

அரசாங்கத்தின் தெளிவில்லாத அணுகுமுறையால் இப்பிரச்சினைக்கு அரசாங்கத்தின் சார்பில் என்னை நான் இருத்திக் கொள்ள முடியவில்லை...(அரசாங்கத்தின் அணுகுமுறை தெளிவான அரசியல்வியாதிகள் அணுகுமுறை என்று சொல்வதில் உடன்படுகிறேன்...)... ஒரு வேளை நான் மேற்சொன்ன நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருந்தால் நான் அணு உலை ஆதரவாளன் என்று சொல்லிக் கொண்டிருந்திருப்பேன்...

சரி, அரசாங்கத்துக்கு ஆதரவாக இல்லை என்றால் அணு உலைக்கு எதிரானவர்களின் பட்டியலில் என்னை நான் சேர்த்துக் கொள்ளலாமா என்றால் அதுவும் முடியாது... அதற்கு காரணம்,

அவர்களின் கோரிக்கை அணு உலையை மூட வேண்டும் என்ற ஒரே முடிவோடு மட்டுமே இருந்து வந்தது ஆரம்பம் முதலாக... அதனால் அணு உலை பாதுகாப்பானது தான் என்று யார் சொன்னாலும் அவர்களை எதிரிகளாக மட்டுமே பார்த்து பேச ஆரம்பித்தனர். அணு உலையால் ஆபத்து என்றால் அதில் பணி புரிபவர்களின் பாதிப்புகளைத் தாண்டி தானே அது பிறரை வந்தடையும் என்று சற்று இவர்கள் நினைத்திருந்தாலும், எவன் பணத்துக்காக உயிரை விட்டு சந்ததியை அழித்து அணு உலையில் வேலை செய்வான் என்கிற எண்ணம் அவர்களுக்குள் எழுந்திருக்கும். எதிர் தரப்பில் என்ன பேசுகிறார்கள் என சற்று செவிமடுத்திருப்பார்கள்... எதிரில் இருப்பவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்க விரும்பாமல் அவனை எதிரியாக மட்டுமே பார்த்து நான் பிடித்த கொள்கையிலேயே தான் இருப்பேன் என இருப்பவர்களை நான் எப்படி ஆதரிப்பது...

_______________________________

அணு உலை பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளின் தரத்தை பற்றிய கலந்தாய்வு கூட்டம் மக்கள் முன்னிலையில் நடக்க வேண்டும்.

இயற்கையை கணிக்க முடியாததால், அணு உலைகளால் பாதிப்பு வரும் என்று மற்ற நாடுகள் அணு உலைகளை படிப்படியாக மூடுவதைப் போல இந்தியாவும் மாற்று மின்சார முறைகளை நோக்கித் தன்னை தயார்படுத்திக் கொண்டு அணு உலைகளை படிப்படியாக மூட நீண்ட கால தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் எண்ணத்தை இந்தியா முற்றிலும் கைவிட வேண்டும்.

அணு உலை திறக்கப்பட்ட பின்பு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவ ஆய்வுகள் மேற்கொண்டு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டறிந்து தக்க நடவடிக்கைகள் எடுக்க ஒரு மருத்துவ குழுவை அரசு அறிவிக்க வேண்டும்...

மேலும், அணு உலைகளை இங்கு திறக்காமல் இருக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்...

____________________________________

வெறுமனே அணு உலையை மூட வேண்டும் எனக் கேட்காமல், இது போன்ற சில அடிப்படை புரிந்துணர்வுடனான கொள்கைகளுடன் மக்கள் களத்தில் இறங்கியிருந்தால் என்னுடைய ஆதரவு கண்டிப்பாக அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு இருந்திருக்கும்...

ஆனால், அவர்களோ அணு உலை என்றாலே வெடித்து விடும் அதனால் அதனை மூடியே ஆக வேண்டும் எனக் கடைசி வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள்...

அதனாலேயே எனக்கு கூடங்குள விவகாரத்தில் நான் எந்த நிலைப்பாடை எடுப்பது என்பதில் குழப்பம் உருவானது...

குழப்பங்களைக் கொட்டி விட்டேன்... எனது மனபாரம் குறைந்துள்ளது... எனது நேரம் போராட்டமும் சுமூகமாக முடிவடைந்ததாகச் சொல்கிறார்கள்... இனி வேறொரு பிரச்சினை பெரிதாக பேசப்படும்... பத்தோடு பதினொன்றாக தேசிய வியாதியான மறத்தலில் நான் இவ்விவகாரத்தை மறந்து அந்தப் பிரச்சினைக்கு சென்று விடுவேன் என நம்புகிறேன்...

பொறுமையாக படித்தவர்களுக்கும், கருத்து சொன்னவர்களுக்கும் என் நன்றிகள் பல...

கூடங்குளமும் நானும் - 3

குழப்பங்கள் தொடர்கிறது...

என்னை கூடங்குளம் அதிகம் பாதித்திருந்ததை உணர்ந்ததும், இந்த கூடங்குளம் அணு உலை விவகாரம் பற்றி நான் எங்கிருந்து படிக்க நேரிட்டது என கொஞ்சம் பின்னோக்கி என்னைக் கொண்டு சென்றேன். குழுமங்களின் வாயிலாகவே கூடங்குளம் என்னுள் நுழைந்தது...

அணு உலையின் எதிர்ப்பாளர்கள் தரப்பு வாதங்கள்...

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள், கூடங்குளத்தில் அணு உலை நடத்த போதிய பாதுகாப்பு இல்லை/பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தெளிவு கூட இல்லை என்று குற்றம் சாட்டி இருந்தது தான் நான் படித்த முதல் செய்தி என நினைக்கிறேன்.

இது நடந்து சில தினங்களில் அரசு தரப்பில் இருந்து அணு உலை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தி சரிபார்க்கப்பட்டது.

அதனைக் காரணம் காட்டிய அணு உலை எதிர்ப்பாளர்கள், அணு உலையில் ஆபத்து இல்லை என்றால் பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது எதற்காக என்று குற்றம் சாட்டினார்கள்.

இது நடந்த சில தினங்களில், இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்காகத்தான் இந்த கூடங்குளம்என்று சொல்லி தமிழினத்தை அழித்த இலங்கைக்கு இந்தியாவின் மின்சாரம் வழங்க உதவும் கூடங்குளத்தை எதிர்ப்போம் என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் மக்களிடம் கேட்டனர். ஆதாரமாக வைத்தது இலங்கைக்கு மின்சாரம் வழங்க இருக்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றிய ஒரு ஆய்விற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கைக்கான அரசு விளம்பரம்.

மீண்டும் சில நாட்களில் அணு உலை விபத்து/கதிரியக்க கழிவுகள் காரணம் காட்டி உண்ணா நிலை போராட்டம்...

அப்பொழுது அரசு அறிவித்தது, அணு உலையால் ஆபத்து இல்லை. அதனை மக்களுக்கு புரிய வைத்து அணு உலையைத் திறப்போம் என்று.

ஆனால், அரசு/விஞ்ஞானிகள் சொன்ன ஆய்வறிக்கைகளை எதிர்ப்பாளர்கள் ஏற்கவில்லை. அல்லது அவர்களின் பயத்தைப் போக்கும் அளவிற்கு ஆய்வறிக்கைகளை அரசு வெளியிடவில்லை...

இதற்குள்ளாக, இனி அடுத்த நான்கு வருடத்திற்கு தேர்தல் இல்லை, இப்பொழுது செய்யும் யாவும் நான்கு ஆண்டுகள் கழித்து மக்களுக்கு நினைவில் இருக்கப் போவதில்லை என்று கூடங்குளத்தைத் திறக்கப் போவதாக அரசு எடுத்த திடீர் முடிவு...

இவையெல்லாம் தான் நான் படித்த மடல்கள்...

இனி,

அணு உலை விபத்து நடந்தால் பாதிப்பு வராது எனச் சொல்பவர்கள் இங்கு யாரும் இல்லை என நினைக்கிறேன். அப்படியும் சொல்பவர்கள் யாரும் இருக்கிறார்களா இங்கு அணு உலை விஞ்ஞானிகள் உட்பட...

அணு உலை ஆதரவாளர்கள் தரப்பு வாதங்கள்...

அணு உலை விபத்து நடக்கும் சாத்தியக் கூறுகள் இந்தியாவில் மிகக் குறைவு. காரணம் புகுஷிமோ இருந்தது நிலநடுக்க வரையறையில் அதிகம் வர வாய்ப்பு இருக்கும் இடத்தில் (ஒன்பதாவது தரம்). இந்திய அணு உலைகள் இருப்பது மத்திமமான நிலையில் அதாவது மூன்றிலிருந்து நான்காவது தரத்தில். இந்த தரம் என்பதில் குழப்பம் வேண்டாம். இங்கு தரவரிசை நிலநடுக்கம் வர வாய்ப்பு குறைவான பகுதியிலிருந்து அதிகமான பகுதி வரை ஒன்றிலிருந்து ஒன்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. முதலாவது தரம் என்றால் அங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்று பொருள். ஒன்பதாவது தரம் என்றால் வாய்ப்பு அதிகம் என்று பொருள்.

நிலநடுக்கம் வர வாய்ப்பு மத்திமமாக உள்ள பகுதியில் கூடங்குளம் இருப்பதால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்பதை உணரலாம். மேலும் மீதமுள்ள வாய்ப்பிற்காகவும் நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவு உயர் பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டுமானப் பணிகள் பாதுகாப்புடனேயே கட்டப்பட்டிருக்கிறது. அதனால் பயப்படத் தேவையில்லை என்றும் மேலும் நிலநடுக்கம் சுனாமி போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு கட்டப்பட்டிருக்கிறது என்று விளக்கங்கள் சொல்லப்பட்டன.

இதற்குத்தான் எதிர்ப்பாளர்கள், ஆணுறையையே தரமானதாகத் தயாரிக்கத் தெரியாதவர்கள் அணு உலையை எப்படி தரமானதாகக் கட்டி இருப்பார்கள் என்ற கேள்வி வைக்கிறார்கள். என்ன சொல்ல முடியும் நம்மால்...

அடுத்த பகுதியோடு எனது குழப்பங்களை முடித்துக் கொள்கிறேன்...

கூடங்குளமும் நானும் - 2

குழப்பங்கள் தொடர்கிறது...

அரசியலைப் பற்றி வீட்டில் பேசினாலே வசை விழும் குடும்பத்தில் பிறந்த நான், எப்படி பேசினேன் அரசியலைப் பற்றி அன்று. அதுவும் பொது இடத்தில்.

குழப்புகிறேனோ... ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். கடந்த சனிக்கிழமை அவசர வேலையாக கோயமுத்தூர் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். கோயமுத்தூரிலிருந்து சேலம் வரையிலான இரயில் பயணம் அது. நான் அமர்ந்திருந்த பெட்டியில் இரண்டு இந்தி பேசும் நபர்களும் பயணம் செய்தனர். இப்படித்தான் உரையாடல் ஆரம்பமானது.

இரயில் பெட்டியில் தண்ணீர் பாட்டில் விற்கும் சிறுவனிடம் இருந்து தண்ணீரை வாங்கிய ஒருவர் மற்றவரிடம் சொன்னார், ஒருகாலத்தில் இரயில் பெட்டியில் தண்ணீர் இலவசமாகத் தந்தார்கள். இப்பொழுது காசு கொடுத்து வாங்கும்படி இருக்கிறது நிலைமை என்று. இப்படியே இருவரும் நாட்டு நடப்புகளைப் பேசிக் கொண்டும், லஞ்ச லாவனங்களைப் பேசிக் கொண்டும் வந்தபடி இருந்தனர். அறிமுகமில்லாதவரிடம் அதிகம் பேச யோசிக்கும் நான் மௌனமாக அவர்கள் பேசுவதைக் கேட்டு இரசித்தவாறு வந்து கொண்டிருந்தேன்...

திடீரென அவர்கள் பேச்சு கூடங்குளம் அணு உலை பற்றி திரும்பியது. ஒருவர் இன்னொருவரிடம், எங்கிருந்தோ பணத்தை வாங்கிக் கொண்டு இந்த அணு உலையைத் திறக்க விடாமல் செய்கிறார்களே என்று ஒருவர் சொல்ல அடுத்தவரும் அதை ஆமோதிக்க, மெல்ல என்னுள் இருந்த ஏதோ ஒன்று அவர்களிடம் பேசத் தூண்டியது.

ஐயா, காசு வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் எனச் சொல்கிறீர்களே. அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன்.

அதுதான் அரசாங்கம் சொல்கிறதே, பத்திரிக்கைகளில் வெளிவந்ததே என்றார்.

அப்படி என்றால் பத்திரிக்கையில் வெளிவருவதை நிஜமென்று ஒப்புக் கொள்கிறீர்களா... இதோ கடந்த இரண்டு மூன்று நாட்களாக நாளிதழ் மற்றும் வார பத்திரிக்கையில் வெளி வந்திருக்கும் செய்தி, அணு உலையை எதிர்த்து போராடும் மக்களுக்கு நீர் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அரசாங்கம் தடுத்து வருகிறது. இதுதான் அரசாங்கம் செய்யும் வேலையா ஐயா என்றேன்.

சிறிது நேரம் பேச்சு இல்லை... பின் கேட்டார். பிறகு அங்கிருக்கும் காவல்துறையினர் சாப்பிட என்ன செய்கிறார்கள் என்றார்?

ஐயா, காவல்துறை இருப்பது ஊரின் எல்லையில். அவர்கள் எல்லையின் மறுபுறம் இருக்கும் ஊரில் சாப்பிட்டு விட்டு போகிறார்கள். ஆனால் பொதுமக்கள் ஊரின் எல்லையைக் கடக்க முடியாதவாறு தடை உத்தரவைப் பிறப்பித்து இப்படி அடக்குமுறைச் செய்வது சரியா என்றேன்.

சரி, அங்குள்ள மக்கள் எதற்காக போராடுகிறார்கள். அணு உலை ஏன் வரக் கூடாது என்கிறார்கள்.

ஐயா, அணு உலையை அங்குள்ள மக்கள் எதிர்க்க காரணம், விபத்து ஏற்பட்டால் வரும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டும், அணு உலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அங்கு வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமான கடலில் கலந்து அவர்கள் வாழ்வாதாரத்தைக் குலைத்து விடும் என்று பயப்படுவதே ஆகும் என்றேன்.

அணு உலை விபத்து நடக்க வாய்ப்பில்லை என்று தான் அரசாங்கம் சொல்கிறதே. பிறகு ஏன் போராட்டம் என்று மீண்டும் கேட்டார்.

அரசாங்கம் சொல்கிறது விபத்து நடக்க வாய்ப்பில்லை என்று. ஆனால் அரசாங்கம் மக்கள் மனதில் எழுந்துள்ள இந்த பயத்தைப் போக்க என்ன நடவடிக்கை இதுவ்ரை செய்துள்ளது.

தம்பி, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு கதிரியக்கத்தை தாங்கும் சக்தி உள்ளது. அதன் காரணமாகவே மருத்துவத்துறையில் கதிரியக்கத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம். மேலும், ஏதோ கூடங்குளத்தில் மட்டுமே அணு உலை இருப்பது போல, அது வெடித்து விடும் என்று சொல்வது எப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தியாவில் நிறைய அணு உலைகள் இருக்கிறதே. இதுவரை அங்கெல்லாம் எத்தனை விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு விஷயத்தைத் தடுத்து நிறுத்துவது எப்படிச் சரியாகும். இந்த அணு உலை கட்டப்பட ஆரம்பித்து உங்கள் முதல்வர்கள் நான்கு முறை மாறி மாறி வந்திருக்கிறார்கள். எப்பொழுதேனும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளீர்களா, திறக்கும் தருவாயில் தடுப்பது தவறல்லவா என்றார்.

ஐயா, அணு உலை ஆரம்பித்த காலத்திலேயே இதற்கு எதிர்ப்புக் குரல் வந்தது. ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்திருக்கிறார்கள் அன்றே என்று எங்கோ நான் கேட்ட செய்தியைச் சொன்னேன்.

அன்றே போராட ஆரம்பித்திருந்தால் ஏன் இதுநாள் வரை பெரும்பான்மையோருக்கு இப்பிரச்சினை வெளியே தெரியவில்லை என்று கேட்டப்டி அவர் மேலும் தொடர்ந்து பேசிக் கொண்டே சென்றார்.

சட்டென தன்னிலை உணர்ந்தவனாக நான் அவர்களின் பேச்சில் இருந்து கழன்று கொண்டேன். இன்றும் என்னை இக்குழப்பம் தொடர்ந்தவாறு இருக்கிறது. அரசியலைப் பற்றி வீட்டில் பேசவே மறுக்கப்பட்ட/ பயத்துடன் வாழ்ந்த நான் எப்படி பொது இடத்தில் அரசியலைப் பற்றி பேசினேன். என்னைத் தன்னிலை மறக்கச் செய்யும் அளவிற்கு என்னுள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதே இந்த கூடங்குளம்...

குழப்பங்கள் தொடரும்...

கூடங்குளமும் நானும் - 1

பொதுவாக என்னை எந்த ஒரு விஷயமும் அதிகம் பாதித்தித்ததில்லை. ஆனால் இந்த கூடங்குளம்அணு உலை விவகாரம் என்னை மிகவும் பாதித்துள்ளதாக உணர்கிறேன். முன்னுக்குப் பின் முரனான தகவல்கள், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் ஏராளமான இடுகைகள் என என்னை அதிகம் குழப்பப்படுத்திய விவகாரமாக இதை நான் பார்க்கிறேன். எனது குழப்பங்கள் குழப்பங்களாகவே இருக்கட்டும் என விட்டுச் செல்லலாம் என்று பார்க்கிறேன். ஆனால் இக்குழப்பங்கள் எனது மனதை பாரமாக்கி இருப்பதால், குழப்பங்களை இங்கு கொட்டிவிட்டு நான் நிம்மதியுடன் படுத்து உறங்கவே இந்த மடல். இங்கு யாரும் யார் சொல்வதையும் கேட்காமல் தங்கள் முடிவே சரியானது என்று நிரூபிக்கும் முயற்சிகள் பெரும்பாலும் நடப்பதால், இது யாருடைய பதில்/கருத்து எதிர்பார்த்து எழுதப்படும் மடல் அல்ல.

கூடங்குளம் அணு உலை: இதன் தோற்றம் என்னவாக இருக்கும் என பார்க்கலாம் என்று ஆராய்ந்த பொழுது, எனக்கு கிடைத்த தகவல், இத்திட்டம் கி.பி 1988 ம் வருடம் இந்தியப் பிரதம்ர் ராஜீவ் காந்திக்கும் சோவியத் பிரசிடென்ட் மிக்கைல் கோர்பசேவ் என்பவருக்கும் இடையில் இரண்டு உலைகள் திறக்க ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கிறது. அதாவது, மிகப்பெரும் அணு உலை விபத்தென அனைவராலும் சொல்லப்படுகிற செர்னோபில் அணு உலை விபத்து நடந்த இரண்டு வருடம் கழித்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏன் அன்றைய நாளில் இதனை எதிர்த்து குரல் யாரும் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. இல்லை கொடுத்திருந்து எனக்குத் தெரியாமல் போனதோ தெரியவில்லை.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் வைக்கும் முக்கிய மூன்று குற்றச்சாட்டு, அணு உலையால் இயற்கை வளங்கள்/ சுற்றுப்புறம் மாசுபடும், கதிரியக்க கழிவுகள் மற்றும் அணு உலை வெடி விபத்து.

அணு உலையால் இயற்கை வளங்கள்/சுற்றுப்புறம் மாசுபடும் என இன்று குரல் கொடுப்பவர்கள் யாரேனும் இதுவரை இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கி.பி. 1969 ல் தொடங்கப்பட்ட தாராபூர் அணு உலை முதலாக, கடந்த வருடம் ராஜஸ்தானில் தொடங்கப்பட்ட அணு உலை வரை இயற்கை வளங்களுக்கு அணு உலையால் மாசு ஏற்படும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனரா... கதிரியக்க கழிவுகள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டை இதே அணு உலைகள் வைத்து யாரேனும் நிரூபித்துக் காட்டியுள்ளார்களா... புகுஷிமோவில் தற்போது நடந்த விபத்தைக் காரணம் காட்டி இங்கேயும் அதே போல அணு உலை வெடி விபத்து ஏற்படக்கூடும் என்ற அபாயத்தால் தடுக்கிறோம் எனச் சொல்பவர்கள், நிலநடுக்கும் ஏற்படும் இடங்களின் தரவரிசையில் புகுஷிமோ இருக்கும் இடத்தையும், இந்திய அணு உலைகள் இருக்கும் இடத்தையும் ஏன் ஒப்பிட்டுப் பார்க்க மறுக்கிறார்கள்.

அணு உலை கதிர் பாதிப்பைப் பற்றி பேசும் மக்களே, நாம் நமது வாழ்நாளில் அதிகபட்சம் எத்தனை முறை நமது உடலில் எக்ஸ்ரே எடுக்கலாம் என்றும் நமது உடலில் எத்தனை முறை ஸ்கேன் செய்யலாம் என்றும் தெரியுமா... ஆனால் அதிகப்படியான எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்வது இன்றைய மருத்துவத்திற்கு அவசியமாகிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்களா...

எனது கேள்வி எல்லாம் மிக எளிமையானது மற்றும் ஒன்றே ஒன்று தான். ஒரு பெண் கருவுறுகிறாள் என்றாள் அக்கருவை விரும்பாதவர்கள் எப்பொழுது கருவைக் கலைக்கச் சொல்ல வேண்டும். கரு உருவானது தெரிந்ததுமா அல்லது கருவுற்றப் பெண் ஒன்பது மாதம் பார்த்து பார்த்து தன் வயிற்றுக்குள் வளர்த்த சிசு பிறக்கப் போகும் சமயத்திலா... என்ன செய்ய? கரு உருவான போது எங்களுக்கு அந்த குழந்தையால் விளையப் போகும் நாசம் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஒன்பதாவது மாதத்தில் தான் தெரிய வருகிறது. அதனால் அக்குழந்தை வெளிவராமல் இருக்கத் தடை போடுவோம் என்று போராடுவது, அதுவும் குழந்தையைப் பெறப் போகும் தாய், அக்குழந்தையால் யாருக்கும் நாசம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி அளித்தும் ஏற்றுக் கொள்ளாமல் குழந்தை பிறக்கக் கூடாது என்றூ போராடுவது என்பது எத்தகையதொரு நியாயம். அத்தகைய நியாயமே கூடங்குளம்அணு உலையை ஆரம்பித்த போது தடுக்காமல் இப்பொழுது தடுப்பதிலும் இருக்கிறது எனச் சொன்னால் ஏதோ அருவருக்கத்தக்க புழுவாய் பார்ப்பது ஏன்.

கோவை மக்கள் கூடங்குளம் அணு உலை திறக்கச் சொல்கிறார்களா, அவர்கள் ஊரிலேயே ஒரு அணு உலை திறந்து கொள்ளட்டுமே எனச் சொல்வதும், பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு கட்டப்பட்ட அணு உலையை நிறுத்தச் சொல்வதால் ஏற்படும் பொருளாதார இழப்பிற்கு, எத்தனையோ கோடிகள் அரசியல்வாதிகளால் ஏப்பம் விடப்படவில்லையா, அதுபோல இதுவும் ஒன்று என நினைத்து கடந்து செல்லலாம் எனச் சொல்வதும், ஏதோ ஒரு போராட்டத்தின் புகைப்படத்தை இந்த பிரச்சினையோடு முடி போட்டு பேசுதல் என ஏன் குழப்பத்தை உருவாக்குகிறார்கள் என புரியவில்லை.

குழப்பங்கள் தொடரும்...