Thursday, January 17, 2013

அச்சாணி

அச்சாணி அல்லது கடையாணி. இதனை நாம் நமது வாழ்வில் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட அதைப்பற்றி கேள்வியாவது பட்டிருப்போம். தெரியாதவர்களுக்காக... அச்சாணி என்பது, மாட்டு வண்டியிலோ குதிரை வண்டியிலோ சக்கரம் வண்டியிலிருந்து கழன்று விடாமல் தாங்கிப் பிடிக்கும் ஆணி...

இந்த அச்சாணி பற்றி பேசுவதென்றால் நிறைய பேசலாம். முன்பெல்லாம் மாட்டு வண்டிகளில், மாட்டின் கழுத்துமணி தரும் தாளத்துக்கு ஜதி சேர்ப்பது போல இந்த அச்சாணியில் கட்டப்பட்டிருக்கும் மணியின் சத்தம் வருவதைக் கவனித்திருக்கலாம். மாட்டு வண்டியில் அதிகம் பயணப்படாதவன் என்றாலும் நானும் சிறுவயதில் சில முறை பயணம் செய்திருக்கிறேன்.
மாட்டுக்கு கழுத்து மணி இருப்பது சரி. இந்த அச்சாணிக்கு எதுக்கு மணி கட்டியிருக்காங்க. அழகுக்காகவான்னா, அழகுக்காக மட்டுமல்ல அச்சாணி கழன்று விழுந்து விட்டதா இல்லையா என அறிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கட்டுமே அப்படின்னு தான்...

அச்சாணி இல்லாத வண்டி அரை கெஜம் தாண்டாதும்பாங்க எங்க ஊருல... ஆனா இது உண்மையா.? முத்து படம் பார்த்திருப்பீங்க. அதுல வடிவேலு அச்சாணியைக் கழட்டி கையில வச்சுகிட்டு இருப்பாரு. வண்டி ஓடும். காருக்கு எதுக்கு அச்சாணி அப்படின்னு கேட்கவும் வண்டி குடை சாயவும் சரியா இருக்கும். இதுதான் அப்படின்னா அயன் படம் பார்த்திருந்தீங்கன்னா பிரபுவும் சூர்யாவும் வில்லனைப் பார்த்துட்டு திரும்புற கடைசிக் காட்சியில் வில்லன் பிரபுவிடம் லட்டுளை வச்சேன்னு பார்த்தியா நட்டுல வைச்செண்டானு, டயரை வண்டியுடன் பிணைத்திருக்கும் நட்டைக் கீழே போடுவார். அதே சமயம் கார் தடுமாறி விபத்துக்குள்ளாகி பிரபு மரணிப்பார். இந்த படத்தின் காட்சிகள் எல்லாம் என்ன சொல்ல வருது...

சின்ன வயதில் அப்பா தான் செய்த வயல் வேலைகளை பற்றி அடிக்கடி எங்களிடம் பேசுவார். அப்படித்தான் ஒருநாள், முத்து படத்தின் மேற்சொன்ன காட்சியைப் பார்த்து சிலாகிச்சு அவர் வாழ்வில் நடந்த நிகழ்வைப் பற்றி பேசினார்.

வயலில் இருந்து நெல்மூட்டைகளை மாட்டு வண்டியில் எடுத்துக் கொண்டு களத்துமேட்டுக்கு வந்திருக்கிறார் அப்பா... களத்து மேட்டில் மூட்டைகளை இறக்கிய பின் தான் கவனித்து இருக்கிறார், வண்டியில் அச்சாணி இல்லையென்று. எங்கு கழன்று விழுந்திருக்கும் என யோசித்தவாறு களத்து மேட்டில் இருந்து வண்டியை வீட்டுக்கு திருப்பலாம் எனத் திருப்பினால் வண்டி திரும்புவதற்குள்ளாகவே சக்கரம் கழன்று விழுந்து விட்டதாம்.
சரி என்று கழன்று விழுந்த அச்சாணியை வந்த வழியே தேடிச் சென்றால் அச்சாணி நெல் வயலில் மூட்டைகளை ஏற்றும் இடத்திலேயே விழுந்து கிடந்ததாம். அப்பாவுக்கு, அச்சாணி இல்லாமல் வண்டி குடை சாயாமல் எப்படி இந்த வயல் வெளிகளின் மேடு பள்ளத்தில் வந்தது என்ற ஆச்சர்யம் ஒன்றுமில்லையாம். ஏனென்றால் அச்சாணி இல்லையென்று நமக்கு தெரிந்த பிறகு மட்டுமே வண்டி அரை கெஜம் கூட தாண்டாது அப்படின்னு சொன்னார். மேலும், இதுதான் உண்மையும் கூட. நான் நிறைய நிகழ்வுகளை இப்படி கண்ணால் பார்த்திருக்கிறேன் எனச் சொன்னார்.

இது எதேச்சையாக நடக்கும் நிகழ்வா, இதற்கு காரணம் என்ன? இதையெல்லாம் ஆராயும் எண்ணம் நமக்கில்லை.

ஆனால் நமது வாழ்க்கையின் தத்துவம் இந்த அச்சாணியில் அடங்கி இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். நமது வாழ்க்கை என்னும் வண்டி ஓட பலவித அச்சாணிகள் அவசியமாக இருக்கிறது. அதில் சில அச்சாணிகள் நம்மை அறியாமல் கழன்று விழும் பொழுது வாழ்க்கை என்னும் வண்டியில் சேதம் ஏற்படுவதில்லை. ஆனால், ஏதாவதொரு அச்சாணியை இழந்து நிற்கிறோம் என நாம் உணரும் பொழுது அது நம்மை மனதளவில் கண்டிப்பாக சேதப்படுத்தி விடுகிறது. அச்சாணியின் இருப்பை அறிந்து கொள்ள அச்சாணிக்கு மணி கட்டுவது போல நமது வாழ்க்கையின் அச்சாணிகளுக்கும் நாம் ஒரு மணியைக் கட்டி விட்டு ஜாக்கிரதையாக இருந்தால் நமது மனதின் சேதத்தை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்....

No comments:

Post a Comment