Wednesday, January 16, 2013

சாதாரணன் - 2

என்றும் எதிலும் தன தோல்வியை ஒத்துக் கொள்ளத் தயங்கும்/மறுக்கும் இணையப் புலி மனது, வீடியோ எடுக்காமல் போனால் என்ன? என்ன நடக்கிறது என்று பார்த்து வெறும் எழுத்துகளில் எழுதி வைப்போமே, என்று வேடிக்கைப் பார்க்க என்னை உந்தியது..


நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் அப்படி என்ன தான் செய்து கொண்டிருந்தார்கள்...

 சிலர் அந்த காலைப் பொழுதிலும் உறங்கிக் கொண்டு இருந்தார்கள்...

சிலர் கூட்டம் கூட்டமாய் அமர்ந்து ஊர் கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள்..
 
சிலர் தீப்பெட்டியின் பெட்டி பகுதி ஒட்டிக் கொண்டு இருந்தார்கள்(எங்கள் ஊரில் பல பேருக்கு இதுதான் சம்பளம் தரும் வேலை)...

சிலர் சுள்ளி பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள்...


சிலர் விறகு வெட்டிக் கொண்டு இருந்தார்கள்...

ஹ்ம்ம்... நாடு செழிக்கட்டும் என்று மனதுள் சொல்லியவாறு வீட்டுக்குள் நுழைந்தேன்...


இப்பொழுது ஒரு சிறிய விவரம்... கேள்விப்பட்டது மட்டுமே... இது பொய்யாகவும் இருக்கலாம்...

நாளொன்றுக்கு இவர்களுக்கு அரசு தரும் கூலி 130 ரூபாய்.


வேலை செய்யாமலேயே பணம் வழங்குவதற்காக ஒரு ஆளின் தினக் கூலியில் இருந்து இருபது ரூபாய்கள் குறைவாகவே அதாவது 110 ரூபாய்கள் மட்டுமே இவர்களுக்கு தரப்படுகிறதாம்....
 
இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஆண்டொன்றுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடியும்... ஆனால் சில இடங்களில், முதல் 100 நாள் வேலை செய்தவர் இன்னொரு பெயரில் மேலும் 100 நாட்களும் இதே மாதிரி வேலை செய்கிறார்களாம்.. அப்படி நடக்கும் இடங்களில் வேலை செய்பவருக்கு கூலி 70 மிச்சம் வேலை வழங்குபவருக்கு....


இப்படி நடந்தால் எப்படி தேசம் உருப்படும் என்று பலவாறாக யோசித்து பக்கம் பக்கமாக எனது இணையப் புலி மனம் எனது மனதில் தட்டச்சிக் கொண்டிருக்க, சாதாரனான இன்னொரு மனம் உனது அலுவலக வேலை நேரத்தில் எப்பொழுதும் அலுவலக வேலை மட்டும் தான் நீ பார்க்கிறாயா, அலுவலக நண்பர்களுடன் பேசுவது, காபி குடிக்க கேண்டீன் சென்று அரட்டை அடிப்பது, இணையத்தில் பொழுதைக் கழிப்பது, உன்னுடைய சொந்த வேலைகளைச் செய்வது என உனது தகுதிக்கு ஏற்றவாறு நீயும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய் தானே. அலுவலகத்தின் நாலு சுவற்றுக்குள் நீ செய்யும் தவறுகள் உனக்கு நியாயம், அதே வேலையை பொதுவில் ஒருவன் செய்தால் உனது மனம் அரசாங்கத்தைச் சாடும்... உனக்கும் அவர்களில் ஒருவரைப் போல அரசாங்கம் சும்மா உட்கார பணம் கொடுத்தால் நீயும் கண்டிப்பாக போக மாட்டாய் என்பது என்ன நிச்சயம் என்று சாட்டையடியாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக மீண்டும் சாதாரனனிடம் தோற்று காணாமல் போனது இணையப் புலி மனம்...

No comments:

Post a Comment