Wednesday, January 16, 2013

பரிசுச் சீட்டும் பழமொழியும் - அதீதம் கடைசிப்பக்கத்தில் வெளியானது

எனது சின்ன வயதில் எங்கள் வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் மளிகை கடைக்கு எதேச்சையாக நேற்று சென்றிருந்தேன். தொழில் போட்டி காரணமாக சிறிய இடத்திற்கு மாற்றலாகி இருந்த கடையில் எப்பொழுதும் போல கடைக்காரர் சிரித்த முகத்துடன் வரவேற்றார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கையில் இரண்டு சிறுவர்கள் பொருட்கள் வாங்க கடைக்கு வந்தனர். ஒருவன் பத்து ரூபாய் தாளைக் கடைக்காரரிடம் கொடுத்து தக்காளி வாங்கி கொண்டிருந்தான். பக்கத்தில் இருப்பவன், டேய், எட்டு ரூபாய்க்கு மட்டும் தக்காளி வாங்குடா, ரெண்டு ரூபாய்க்கு பரிசுச்சீட்டு வாங்கலாம் என்றான்.

பரிசுச்சீட்டு பற்றி தெரியாதவர்களுக்காக…  பரிசுச்சீட்டு எனும் சீட்டில் ஒன்றிலிருந்து நூறு வரை சில எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். முன்னாட்களில் எண்களுக்கு பதிலாக ஜோக்கர்களும் சில சீட்டுகளில் இருக்கும். ஜோக்கர் வந்தால் பரிசு எதுவும் கிடையாது என்று அர்த்தம். ஆனால் இப்பொழுது வரும் பரிசுச் சீட்டுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு எண் கண்டிப்பாக இருக்கிறது.

குறிப்பிட்ட எண்களுக்கு குறிப்பிட்ட பரிசு என ஒரு பரிசு விளம்பரமும் இருக்கும். முதல் இருபத்தைந்து எண்களுக்கு நடிகர்களின் ஸ்டிக்கர்கள் அடுத்த இருபத்தைந்து எண்களுக்கு ஊக்கு போன்ற சிறிய சிறிய பரிசுகள் என  எல்லா சீட்டுக்கும் ஏதாவது ஒரு பரிசு இருக்கும்.

தக்காளி வாங்க வந்த சிறுவன், “போடா அம்மா திட்டுவாங்க” என்று சொல்லி விட்டு நகர முற்படுகையில் முன்னவன், “டேய், நான் கூட வீட்டுக்கு பொருள் வாங்கி போகும் பொது இப்படி தாண்டா ஒன்னு ரெண்டு பரிசுச்சீட்டு வாங்குவேன்… ” பரவாயில்லை வாங்குடா எனச் சொல்ல, தக்காளி வாங்க வந்த சிறுவன் பயந்து கொண்டு தக்காளி மட்டும் வாங்கியவாறு வீடு நோக்கி நகரத் தொடங்கினான்…

அந்த நிகழ்வைப் பார்த்ததும் என் மனது சொல்லிக் கொண்டது மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்கப் பார்க்குதுன்னு…

மெதுவாய் கடைக்காரரிடம் சொன்னேன்… அண்ணா, இந்த பயலோட அம்மாட்ட நீங்களாச்சும் மளிகை பொருட்கள் வாங்க கொடுக்கும் பணத்தில் பரிசுச்சீட்டு வாங்குறான்னு சொல்லலாமில்லைனு கேட்டேன்…

எங்கப்பா சொல்லுறது, கொடுக்குற பணத்துக்கு மளிகை சாமான் குறைவா ஏன் வருதுன்னு என்னைய வந்து கேட்டா தானே சொல்ல முடியும். அவங்க அம்மா இங்க வர்றதே இல்லை…. நானும் என் பொழப்பைப் பார்க்கனுமில்லைன்னாரு….

ம்ம்ம்…இப்படியே  நாங்கள் பேசிக் கொண்டிருக்க முன்பு வந்த சிறுவர்களில் பரிசுச்சீட்டு வாங்க சொன்ன சிறுவன் பத்து ரூபாய் தாளைக் கொடுத்து இரண்டு சீட்டுகள் வாங்கினான். இரண்டுக்கும் அவன் எதிர்பார்த்த பரிசு கிடைக்காமல் ஏதோ பரிசு விழ வருத்தத்துடன் நகர, நானும் என் மனதில், ” என்னதான் எண்ணையத் தடவிட்டு மண்ணுல புரண்டாலும் ஓட்டுறது தானே ஓட்டும்” எனச் சொல்லிக் கொண்டு எனது வீட்டுக்கு நகர்ந்தேன்…

நம்மால வேற என்ன செய்ய முடியும்… சரிதானுங்களே…

அதீதத்தில் படிக்க : http://www.atheetham.com/?p=3807

 

No comments:

Post a Comment