Friday, February 7, 2014

கவிதை என்றால் என்ன?

எண்ணத்தைச் சற்று எதுகை மோனையோடு ஒரு சீரான தாள கதியில் எழுதப்படும் வார்த்தைக் கோவைகளை கவிதைகளாக எனது பதின்ம வயதில் ஏன் ஒரு நான்கு ஐந்து ஆண்டுகள் முன் வரையிலும் கூட நினைத்திருந்தேன். அப்படியே நானும் எழுதி வந்தேன். திடீரென்று கவிதை குறித்தான தேடல் துவங்கிய போது இந்த கருத்தில் ஒரு தளர்வு ஏற்பட்டு விட்டது.

பின்பு மரபுக்கவிதைகளை வாசிக்கையில் மரபுக்கவிதைகள் மாத்திரமே கவிதைகள் என்னும் எண்ணம் தோன்றியது. சில புதுக்கவிதைகளும் கூட ஏற்றுக் கொள்ளும் படி இருந்தது என்பதை மறுக்க இயலாது.

மரபில் சில காலம் கவனம் செலுத்தி ஓரளவு மரபில் எழுத பழகினாலும் இந்த புதுக்கவிதைகளை அதன் வடிவத்தை புரிந்து கொள்ளவோ எவை எல்லாம் இந்த புதுக்கவிதை வகையில் சேர்த்தி என்ற ஒரு முடிவுக்கு வரவோ இயலவில்லை.

நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், இணைய வெளி என எல்லாவற்றிலும் கவிதை என பதிக்கப்படுவதை பார்க்கும் பொழுது சில சமயம் சிரிப்பும், பல சமயம் கோபமும் மிகையாக வந்து செல்லும்.
உதாரணத்திற்கு,

விழுந்தவளைத்
தாங்கிப் பிடித்த நான்
விழுந்தேன்...
காதலில்.!

இது போல எதையாவது நான்கு ஐந்து வரிகளில் எழுதி கவிதை என பத்திரிக்கைகளால் பிரசுரிக்கப்பட்டு வெளிவரும் சமயம் நாம் இதனை எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் துவங்குகிறது இது.

இதனைப் பகடியாக்கி திரைப்பட காட்சி ஒன்று,

ஒரு ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட்டைச்
சாப்பிடுகிறதே!!!

அடடா ஆச்சர்யக்குறி என்பது போல எடுக்கப்பட்டது. ஆனால் அதை அந்த நொடி சிரிக்க மட்டுமே என சிரித்து பின் மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுகிறோம்.

கவிதை என எழுதப்படும் ஒன்றை கவிதை என ஒத்துக் கொள்ள கவிதை என்றால் என்ன எனத் தெரிந்தால் தானே இயலும்.

மரபுக்கவிதைகளுக்கு இலக்கணம் இருப்பதால் எளிதில் கவிதை என்று ஏற்றுக் கொள்ள இயலுகிறது. இந்த புதுக்கவிதைகளுக்கு இலக்கணம் தான் என்ன????

தமிழைத் தவிர்த்து பிற மொழிகளில் முக்கியமாக ஆங்கிலத்தில் பார்த்தாலும் இந்த குழப்பம் இருக்கத் தான் செய்கிறது.

உதாரணத்திற்கு,

கிறிஸ்டினா ஜார்ஜினா ரோசெட்டியின் இந்த கவிதையைப் பார்ப்போம்.

//If I were a Queen,
What would I do?
I’d make you King,
And I’d wait on you.
If I were a King,
What would I do?
I’d make you Queen,
For I’d marry you.       //

இதனை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து

நான் இராணியாக இருந்திருந்தால்
நான் என்ன செய்திருப்பேன்?
உனக்காக காத்திருந்து
உன்னை இராஜாவாக்கியிருப்பேன்.
நான் இராஜாவாக இருந்திருந்தால்
நான் என்ன செய்திருப்பேன்?
உன்னை மணமுடிப்பதற்காக.
உன்னை இராணியாக்கி இருப்பேன்,


( மொழிபெயர்ப்பு சரியா என உறுதியாக கூற முடியவில்லை)

என எழுதி இதுதான் கவிதை என இங்குள்ளவர்களை ஒத்துக் கொள்ளச் செய்ய இயலுமா என்றால் தெரியவில்லை.

ஆனால், இங்கிலாந்தில் இதனை கவிதை என அந்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களின் மொழி வழக்காக/ கவிதை வடிவமாக இருந்து வருகிறது. அதாவது எண்ணத்தை எண்ணியபடியே அப்படியே பதித்து வைப்பதை கவிதை என ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.

ஆனால், நமது மொழியில் இவ்வாறு எழுதினால் கவிதை என ஏற்றுக் கொள்ள அனைவராலும் இயலுமா???

இதனை இங்கு குறிப்பிடும் காரணம் யாதெனின் ஒரு மொழி பேசும் மக்கள் பெரும்பாலானவர்களால் கவிதை என ஏற்றுக் கொள்ளப்படுபவையாக, எழுதப்படும் கவிதை இருக்க வேண்டும் என்பதே அன்றி பிற மொழிக் கவிதைகளின் தரம் பற்றிய விமர்சனத்திற்காக அல்ல.

ஆனால், நான்கு வரியை மடக்கி மடக்கி எழுதி இதுதான் கவிதை என்று கவிதைக்கான இலக்கணத்தை மக்கள் மனதில் தவறாக விதைக்கும் பத்திரிக்கைகள் இருந்தால் நாளை யார் என்ன எழுதினாலும், எழுதப்படும் யாவுமே கவிதைகள்  என்று எண்ணி மக்கள் குழம்பும் நிலை உருவாகி விடுமே.

இது குறித்து ஏன் பத்திரிக்கைத் துறையில் இருக்கும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் இயலதமிழை வலிந்து இசைத்தமிழாக்கும் முயற்சி எதற்கு.

கட்டுரை வடிவில் தெளிவான பார்வையை ஒருவர் வைக்க இயலும் பொழுது, தான் சொல்ல வந்த கருத்தை கவிதை வடிவில் தந்து சொல்ல வந்த கருத்தையும் சிதைத்து, கவிதைக்கான நடையையும் சிதைக்க வேண்டிய அவசியம் என்ன? கட்டுரையாகவோ, கதையாகவோ இவர்களை, தங்களின் கருத்துகளை பகிர வைப்பதை தடுக்கும் காரணிகள் என்ன?

இது தவறு என ஒருவருக்குத் தெரியாமல்/புரியாமல் இருப்பதாலேயே பெரும்பாலான தவறுகள் நிகழ்கிறது. இதுவும் அது போலத் தான். உண்மையில் புதுக்கவிதை என்றால் என்ன, அதற்கான கூறுகள் எப்படி இருக்க வேண்டும் என பரவலாக அறியாமல் இருப்பது தான் கவிதையின் தரம் நலிந்து, வெற்று வார்த்தைக் கோவைகள் கவிதையாக வலம் வரக் காரணமாயிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் உண்மையில் ஒரு கேள்விக்கான தேடலை கவிதை எழுத முனைவோர் தேடுவது அவசியமாகிறது. அது,

கவிதை என்றால் என்ன?


உங்களில் எவரேனும் பதிலைத் தேடிக் கண்டுபிடித்தால் மறக்காமல் சொல்லி விடுங்கள், எனக்கும்.!

1 comment:

GOVI MUSIC said...

மன எழுச்சியை ஊட்டுவதே கவிதை!

Post a Comment