Friday, February 7, 2014

கற்பனைத் தடை

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இனிய நாளில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கற்பனைத் தடை.!!! இது கற்பனைக்குத் தடை அல்ல, கற்பனையாய் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தடை. நமது வாழ்வில் பிரச்சினைகளாக நினைக்கும் பல விஷயங்கள் இந்த கற்பனையான தடைகளால் என்று எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு எப்பவும் போல ஒரு கதையைப் பார்ப்போமா…

அக்பரின் அரசவை. வெளிநாட்டில் இருந்து வந்த மதியூகி ஒருவர் அக்பரின் மந்திரிகளுக்கு ஒரு சவால் விடுக்கிறார். தனது பையில் இருந்து மூன்று பெட்டிகளை அரசவையினர் முன் வைத்து உங்களில் யார் தங்களை மிகப்பெரிய புத்திசாலி என்று நினைக்கிறீர்களோ அவர் இதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம் என்கிறார்.

அக்பரின் அவையில் வீற்றிருந்த மந்திரி பிரதானிகள் அனைவரும் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலை கவிழ்ந்து வாய் மூடி இருந்தனர். அப்பொழுது தான் அரசவைக்குள் நுழைந்த பீர்பால் மந்திரிகளின் தலைகுனிவிற்கு என்ன காரணம் என விசாரித்து விட்டு, ப்பூ, இவ்வளவு தானா பிரச்சினை என்று நேராக அந்த வெளிநாட்டு மதியூகியின் முன் சென்று அவர் அரசவை முன் வைத்திருந்த மூன்று பெட்டிகளையும் திறந்து அதில் என்ன இருக்கிறது என அனைவருக்கும் தெரியப்படுத்தினார். அதன்பின், கேள்வி பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது தானே ஒழிய, அதனைத் திறந்து பாராமால் சொல்லுங்கள் என்பதல்ல என்று விளக்கமும் கொடுக்க அக்பரின் அரசவையினர் மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்.

பெட்டியில் என்ன இருக்கிறது எனக் கேட்டவுடன், பெட்டியைத் திறந்து பார்க்காமல் பதில் சொல்ல வேண்டும் என அக்பரின் மந்திரிகள் புரிந்து கொண்டது கற்பனையான தடையால் தானே. இல்லாத கேள்வி ஒன்றை நாமாய் கற்பனை செய்து கொண்டு நமது முன்னேற்றத்திற்கு நாமே தடை போட்டுக் கொள்ளலாமா???

நமக்குத் தெரிந்த நண்பரொருவர் வாழ்வில் நடந்த இந்த சுவாரஸ்யத்தையும் பார்ப்போமே. நண்பரின் பள்ளிப் பருவம். கனித வகுப்பு நடந்து கொண்டிருந்தது. கணித ஆசிரியர் கேள்வி ஒன்றைக் கேட்டு விட்டு யாருக்குத் தெரிகிறதோ அவர்கள் கையைத் தூக்குங்கள் என்கிறார். நிறைய பேர் கையைத் தூக்கியிருக்கிறார்கள் நண்பர் உட்பட. ஒவ்வொருவராய் பதில் சொல்ல வைத்தார் ஆசிரியர். யாருடைய பதிலும் ஆசிரியருக்கு ஒப்பவில்லை. நமது நண்பருக்கு முன்னதாக ஒருவன் சொன்ன பதிலில் ஓரளவு திருப்தி கொண்ட ஆசிரியர், நண்பரிடம் அவன் சொன்னதில் என்ன பிழை என்று கேட்டிருக்கிறார்.

நண்பருக்கோ அவருக்கு முன் சொன்னவரின் பதில் தான் தனக்கும் தெரிந்ததால் அதையே மீண்டும் சொன்னார். இறுதியில் ஒரு மாணவன் மிகச் சரியாய் பதில் உரைத்ததும், நண்பரைப் பார்த்து கணித ஆசிரியர் இனியேனும் படிப்பதை கவனமுடன் படி என்று சிரித்துக் கொண்டே சொல்ல, நமது நண்பர் ஆசிரியரைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார்.

ஐயா, நீங்கள் பிழை என்ன என்று தான் கேட்டீர்களே அல்லாமல் பிழையைத் திருத்தி பதில் சொல்லுமாறு பணிக்கவில்லையே என்று.

என்ன??? நண்பர் ஆசிரியரிடம் கேட்ட கேள்வி சரிதானே…

No comments:

Post a Comment