Friday, February 7, 2014

லீட்ஸில் ஓர் நாள்

பேருந்து நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எனது வீட்டு அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒருவர் என்னை நிறுத்தினார். எனக்கு ஒரு உதவி வேண்டும். எனது நண்பரின் வீட்டிற்கு இங்கு வந்தேன். எனது இரண்டு மொபைல்களும் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டது. எனது நண்பரின் வீடு ஒரு மருத்துவமனைக்கு அடுத்து இருக்கும். மருத்துவமனையைத் தாண்டி ஒரு பூங்கா இருக்கும். அந்த பூங்காவில் குழந்தைகளுக்கான சறுக்கு விளையாட்டு இருக்கும் என்றார். ஐயா, இடத்தின் பெயரோ அல்லது ஏதேனும் ஒரு அடையாளமோ சொல்லுங்கள் என்றேன். அது தெரிந்தால் நான் டாக்ஸி பிடித்து போய் விடுவேனே என்றார். சட்டென கோபம் வந்தாலும், மன்னிக்கவும் ஐயா தெரியாது எனச் சொல்லி அகன்றேன்.

இரண்டு அடி எடுத்து வைத்த பின், முகம் இந்தியரைப் போல இருக்கிறதே பாவம், நமது வீட்டிற்கு அழைத்துச் சென்று மொபைல் சார்ஜ் செய்ய அனுமதித்தால் அவர் நண்பர் வீட்டிற்குச் சென்று விடுவாரே என எண்ணியவாறு, அவரை வேண்டுமானால் எனது வீட்டிற்கு வந்து உங்களது மொபைலை சார்ஜ் செய்து கொள்ளுங்களேன் என்று அழைத்தேன்.  

சரி என்று என்னுடன் வர சம்மதித்தவரிடம் சார்ஜர் வைத்துள்ளீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார். அவரது ஒரு மொபைல் ஐபோன் என்பதால் எனது மொபைலின் சார்ஜர் உபயோகப்படுத்தலாம் என்று எண்ணி சரி பார்த்துக் கொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்துச் சென்றேன். ஏதோ சட்டென்று கேட்கத் தோன்றியதால் நீங்கள் இந்தியரா என்று கேட்டேன். அவர் இல்லை பாகிஸ்தானி என்றார்.

பாகிஸ்தானி என்று சொன்னவர் சற்று நின்று, இப்பொழுதும் என்னை உங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பீர்களா என்றார். அவரிடம் சினேகமாக, ஐயா, நான் நாட்டைப் பார்ப்பவன் கிடையாது, மனிதர்களைப் பார்ப்பவன். தாராளமாக வரலாம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்றேன்.

வீட்டிற்கு இருவரும் வந்தோம். எனது சார்ஜரைத் தேடி எடுத்து அவரது மொபைலை சார்ஜ் செய்யலாம் என நினைத்தால் சார்ஜர் சரி வரவில்லை. ஐயா, உங்கள் போனை கம்ப்யூட்டரோடு இணைக்கும் கனெக்டராவது வைத்திருக்கிறீர்களா என்றேன். இல்லை என்றார். உங்களது நண்பரின் மொபைல் எண்ணாவது நினைவிலிருக்கிறதா என்றேன். அதற்கும் மொபைலில் தான் இருக்கிறது, நினைவில் இல்லை என்றார். சரி திண்பண்டங்கள் இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். ரம்ஜான் நோன்பில் இருப்பதாகச் சொன்னார். சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டவனாக, மன்னிக்கவும், மறந்து போய் கேட்டு விட்டேன் என்று சொன்னேன்.

இன்று நிச்சயமாக என்னுடைய நாளே இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டார். சரி உங்கள் நண்பரின் மொபைல் எண், போனில் ஸ்டோர் செய்திருக்கிறீர்களா இல்லை சிம்கார்டிலா என்று கேட்டேன். தெரியாது என்றார். சரி, கடைசி முயற்சி, உங்களது சிம்மைக் கழற்றித் தாருங்கள். எனது மொபைலில் போட்டு பார்க்கலாம் எனச் சொல்லி அவரது சிம்மை வாங்கி எனது மொபைலில் போட்டு அவரின் நண்பருடன் பேச வைத்து, அந்த நண்பர் இன்னொரு நண்பருக்கு கைகாட்டி விட, அவருக்கும் அழைத்துப் பேசி முகவரி வாங்கினால், அவர் சொன்ன முகவரியை இவர் தவறாகப் புரிந்து கொண்டார். எதற்கும் இருக்கட்டுமே என பேருந்து எண்ணைக் கேட்டு வாங்கச் சொன்னேன்.

எந்த நிறுத்தம் என்று நானாக ஓரளவு புரிந்து கொண்டு நான் அவரைச் சரியான பேருந்தில் ஏற்றி விட்டு கணினி முன் இப்பொழுது அமர்கிறேன். ஒருவருக்கு உதவிய ஆத்ம திருப்தி எனக்கு. இன்றைய நாள் நல்ல நாளாக அமைந்தது. இறைவனுக்கு நன்றி.

உங்களிடம் நான் இதனை இங்கு நான் சொல்வது பெருமைக்காக அல்ல.

புதிய இடத்திற்குச் செல்லும் பொழுது நாம் சில விஷயங்களை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை நினைவுறுத்த வேண்டியே.

செல்லும் இடத்தின் முகவரியைத் மொபைலின் டிராப்டிலும் ஒரு பேப்பரிலும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

புதிய இடத்தில் நீங்கள் நம்பிச் செல்லும் நபரின் மொபைல் எண்ணை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்த அளவு நண்பரை பேருந்து நிலையத்திற்கே வரச் சொல்லி மீண்டும் இருவரும் தங்கள் இருப்பிடம் செல்வது நன்று.

நீங்கள் ஒரு மோசமான சூழலில் இருக்கும் போது பதட்டப்படாமல் உதவ நினைப்பவர்களுக்கு உங்களால் இயன்ற அத்தனை தகவல்களையும் நிதானமாக சிந்தித்துச் சொல்லுங்கள். இல்லை, தெரியாது என்ற பதில்கள் உங்களுக்கு உதவாது.

முக்கியமாய் மொபைலை புல் சார்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அத்தியாவசியமான அழைப்புகள் மட்டும் செய்யுங்கள். ரோமிங்கில் இருக்கும் போது சார்ஜ் சீக்கிரமே குறைந்து விடும்.

ரோமிங்கில் இருக்கும் போது தேவைப்பட்டால் ஒழிய இணையத்தை உபயோகம் செய்யாதீர்கள். இணையம் உங்களின் மொபைல் சார்ஜை எளிதில் கரைக்கும் ஒரு வஸ்து.

No comments:

Post a Comment