Thursday, October 13, 2011

நானும் கடவுள் ஆகலாம் - அதீதம் இதழில் வெளிவந்தது

காலையில் கண்விழித்ததில் இருந்து, ஆழ்மனதில் கீறலிட்ட இசைத்தட்டாய் மீண்டும் மீண்டும் பலமுறை இப்பாடலைப் பாடிக் கேட்டாகிவிட்டது. கண்ணதாசன் தான் எத்தனை பெரிய கவிஞன். இல்லையா பின்னே?


"பூஜ்ஜியத்துக்குள்ளே ராஜ்ஜியத்தை வைத்து ஆளுகின்றான் ஒருவன்
அவனைத் தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்"

இப்படித்தான் என்னை முதலில் லேசாக உசுப்பி விட்டார். அப்புறம்,"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்று ஆரம்பித்து என் சிந்தனையை இப்பொழுது ஒரு வழி செய்து விட்டார். ம்ம்ம்...


நானும் கடவுள் ஆகலாம்???

சொல்லிப் பார்க்கும் போதே எனக்குள் ஏதோ இனம் புரியாத பரவசம், கடவுள் ஆகி விட்டது போன்ற ஒரு மதமதப்பு. கடவுள் ஆகிவிட்டதாய் கனவு. அனைத்து உயிர்களையும் ஆட்டுவிப்பதாய் எண்ணம். எத்தனை நேரம் ஆடினேன்??? தெரியவில்லை...

சட்டென ஒரு விழிப்பு... சே! நானா இப்படி... நாள்முழுதும், "கடவுளைச் சேர்வது எப்படி" என்ற சிந்தனையில் இருந்த என்னுள் எப்படி எழுந்தது இந்த எண்ணம்??? உலக வாழ்க்கையைத் துறந்ததாய், பற்றுகளை அறுத்ததாய் நினைத்திருந்த என்னுள் எப்படி இந்த எண்ணம்??? என்ன இது, சம்பந்தா சம்பந்தம் இன்றி "எறும்புத்தோலை உரித்து பார்க்க யானை வந்ததடா" என்ற பாடல் வரிகளை மனதின் இன்னொரு புறம் பாடிக் கொண்டிருக்கிறேனே.

என்ன ஆனது எனக்கு? எனது நேற்றைய பேச்சாக இருக்குமோ... என்னதான் நான் பேசினேன் அப்படி!!!


"கடவுளை நான் உணரமுடியாததற்குக் காரணம் நான் தான். ஆம்! நானும், எனது எண்ணமும் தான். அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் இறைவன் நானாகவும் எனது எண்ணமுமாகவும் இருக்கிறான் என்று அறியாமல் போனதே நான் கடவுளை உணர முடியாததற்குக் காரணம். "எங்கும் நான், எதிலும் நான்" என்று, நான் என்பதை எனது இந்த பூத உடலுக்கு அகங்காரம் சேர்க்க பாடுபட்ட என்னால், "நான் என்பது இந்த உடல் இல்லை, இந்த உடலைத் தந்தவனே" என்பதை உணர பாடுபடாமல் போனதே காரணம். நான் என்பதை கடவுளாக ஏன் என்னால் உணர முடியவில்லை. வீட்டிலும், வெளியேயும் கிடைக்கும் பொருட்களில், இந்த உடலுக்குப் பிடித்ததை எல்லாம், இது என்னுடையது, இது எனக்கானது என்று தேடித் தேடி எடுத்தவை யாவும், நிரந்தரமாய் எனதாயும், எனக்கானதுமாயும் என்றுமே இருந்ததில்லை என்பதை ஏன் என்னால் உணர முடியவில்லை. இந்த உடலின் தேவைக்காய், இது எனது, எனக்கானது என்று சேகரிப்பதையும் என்னால் ஏன் நிறுத்த முடியவில்லை.


இந்த "நான்" என்பதை விடுக்கும் பொழுது அகங்காரம் இல்லாமல் போவதாலும், "எனது" என்பதை விடுக்கும் பொழுது உலகப்பற்று அறுபட்டு போவதாலும், "நானே", "கடவுள்" என்பதை அனைவரும் உணர்வார்கள் என என்னால் அறிந்து கொள்ள முடியாமல் போனது தானே காரணம்."

இப்படித்தானே என்னுள்ளத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன்... பிறகு எப்படி???

ம்ம்ம்... எனது பேச்சின் முடிவில், என்னை உறுத்திய "அகங்காரமும், உலகப்பற்றும் விடுத்து கடவுளை உணர முற்படுகையில் நான் கடவுளாகிறேன், நானே கடவுள் என்று பிறர் எனக்கு உணர்த்தும் பொழுது மீண்டும் அகங்காரமும், உலகப்பற்றும் பெற்று மனிதனாகிறேனே, இறுதி வரை நான் கடவுளை உணரவே முடியாதா" என்ற கேள்விக்கான பதிலா இது ?

என்ன இது? மீண்டும் என் மனதின் இன்னொரு புறம் ஏதோ வரிகள் ஓடுகிறதே... என்ன வரிகள் இவை...



" மெல்ல ஒரு அம்பெடுத்து என்னைக் கொல்வாய் இராமா
மோகமெனும் மாயப் பிசாசதனை மூளி செய்குவாய் ராமா "

அப்படியானால், நானும் கடவுள் ஆகலாம். ஒருவேளை நான் கடவுள் ஆனால் இந்த உலகமே என் கையில். சொடக்கு போடும் நேரத்தில் மாட மாளிகைகளைக் கட்ட முடியும். நவரத்தினங்களும் என் காலடியில். உலகத்தின் முதலதிபன் நான் தான்.


போச்சு போச்சு. கடவுளானாலும் காசாசை போகவில்லையே எனக்கு ? நான் எனது என்ற எண்ணமும் போகவில்லையே...

“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”

இந்த கண்ணதாசனின் வரிகள் என்னை சவுக்கால் அடிக்கிறதே.

"நான் கடவுள்" என்பதை, "இந்த நான்" என்னுள் இருக்கும் வரை உணர முடியாது என்பது தான் நிதர்சனம் போல.

நன்றி: http://www.atheetham.com/story/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

No comments:

Post a Comment