Thursday, October 13, 2011

வாழ்க்கை எனும் தொடர் புதிர்

வாழ்க்கை ஒரு வித்தியாசமான தொடர் புதிர். எதிர்வரும் முதல் புதிருக்கு விடை தெரிந்தாலும் தெரியாமல் போனாலும், விடை சரியாக இருந்தாலும், இல்லாமல் போனாலும் அடுத்தடுத்து புதிர் வந்து கொண்டே இருக்கும்.

புதிரின் சுவாரசியம், அப்புதிருக்கான விடை தேடலில் அடங்கி இருக்கும் சூட்சமத்தில் தான் இருக்கிறது. அச்சூட்சமம் உணரும் வரை புதிர் மிகவும் கடினமாக இருக்கும். சூட்சமம் விளங்கி விட்டால், ப்பூ... இவ்வளவுதானா... என்று புதிரை எண்ணத் தோன்றும். ஆனால் புதிரின் சூட்சமத் தேடல்களை திரும்பி பார்க்க, சிரிப்பாக இருக்கும்.

வாழ்க்கையும் இது போல தான். வாழ்க்கையெனும் தொடர் புதிரில், ஒவ்வொரு புதிரின் சூட்சமத்திலும் அடங்கி இருக்கிறது வாழ்க்கை. என்ன, ஒவ்வொரு புதிரின் விடைக்கான சூட்சம தேடலும் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த புதிருக்கான சூட்சமம் எளிதில் விளங்கும். சூட்சமத்தின் தேடல் எங்கு தடம் மாறுகிறதோ அங்கு ஆரம்பிக்கிறது சூட்சமத் தேடல்களின் கடினமும், புதிருக்கான தவறான விடைகளும்.

சாதாரணமான தொடர் புதிர் விளையாட்டில் சரியான விடை சொன்னால் தான் அடுத்த புதிருக்குள் நுழையலாம். ஆனால் வாழ்க்கை தான் விசித்திரமான தொடர் புதிர் ஆயிற்றே. நமது பதில் சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அடுத்த புதிர் வந்து நிற்கும் நமது பதிலுக்கு ஏற்ப.

நீங்கள் சிக்கலுண்ட நூற்கண்டை கண்டிருக்கிறீர்களா. நூற்கண்டின் சிக்கலை அறிய நிதானமாக ஒரு முனையிலிருந்து ஆரம்பித்து நிதானமாக முன்னேறி ஒவ்வொரு இடத்தின் சிக்கலையும் லாவகமாக விலக்கினாலே நூல் முழுமையாக சேதமடையாமல் கிடைக்கும். அதை விடுத்து முனையைத் தேடும் பொறுமையின்றியோ, அல்லது முனையில் இருந்து ஆரம்பித்தாலும் சிக்கலை லாவகமாக அவிழ்க்கும் பொறுமையின்றியோ போனால் சிக்கல் அதிகமாகி நூல் முழுமையாக பிரிக்க முடியாமல் துண்டு துண்டாகவே கிடைக்கும்.

இத்தகைய சிக்கலான தொடர் முடிச்சுகளைக் கொண்ட தொடர் புதிர் தான் வாழ்க்கை. வாழ்க்கையில் எதிர்வரும் ஒவ்வொரு புதிரையும் லாவகமாக கையாண்டு விடையைக் கண்டு கொண்டால் நமது வாழ்க்கை நமக்கு முழுமையாக இனிமையாக கிடைக்கும். அன்றேல் நமது வாழ்க்கை சின்னா பின்னமாகிவிடும்.

புதிரின் முடிவு எத்தகையதாக இருந்த போதும், வாழ்க்கையின் இறுதியில் நாம், நாம் கடந்து வந்து புதிர்களைத் திரும்பி பார்க்கையில் எஞ்சி நிற்பவை இரண்டு உணர்ச்சிகளே. அது, புதிரை சரியாக கனித்தவன், சே... இத்தனை எளிய புதிரைக் கையாள நாம் எத்தனை அரிய முயற்சியைக் கையாண்டோம் என்ற நகைப்பும், புதிரைத் தவறாக கனித்தவன், சே... இத்தனை கடின புதிரை நாம் எத்தனை எளிமையானதாக நினைத்து நாம் நம்மை ஏமாற்றிக் கொண்டோம் என்ற சிந்தனையும் மட்டுமே.

விளையாட்டுப் புதிராகட்டும், வாழ்க்கைப் புதிராகட்டும்... புதிரை நமக்குள் இறக்கித் தேடுவதை விட, புதிரைக் காட்சிப் பொருளாக்கி, அதில் சிக்கல் இருக்கும் இடத்தைத் தேடி அடையாளம் கண்டு கொள்ள வெற்றி நமக்குத்தான்.

வாழ்க்கை ஒரு தொடர் புதிர் தான்.... ஆனால், விடையே இல்லாத புதிரல்ல...

No comments:

Post a Comment